கங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் காரணம் என்ன?

இந்தியாவின் கங்கை நதியில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள பருவமழை வெள்ளம், கடந்த காலங்களின் வெள்ளப் பதிவுகளை விட அதிகளவில் பதிவாகியுள்ளது என்று அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

வட இந்தியாவில், நான்கு இடங்களில் நீரின் அளவு எதிர்பாராத அளவுகளை எட்டியுள்ளது என்று அவர்கள் கூறினர்.

ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி அன்று, பீகாரின் தலைநகரான பாட்னாவில் உயர்ந்த பட்ச அளவான 50.52 மீட்டர் (166அடி) என்று பதிவானது. 1994-ல் 50.27 மீட்டர் என்ற அளவு தான் இதுவரை அதிமான அளவாகும்.

இந்தியாவில் இந்த ஆண்டு வெள்ளத்தில் 150-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.

மேலும், ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

பீகார் மாநிலத்தில் ஹத்திதா மற்றும் பகல்பூர் போன்ற இடங்களிலும், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பாலியா என்ற இடத்திலும் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளதை நாங்கள் பதிவு செய்துள்ளோம், ”என இந்தியாவின் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் ஜி.எஸ்.ஜா தெரிவித்துள்ளார்.

”நான்கு இடங்களிலும் வெள்ளம் முந்தைய அதிக பட்ச வெள்ள அளவை தாண்டியுள்ளது. மற்றும் அவை முன்னெப்போதும் இல்லாத அளவு ஆகும்,” என்றார்.

 

அலஹாபாத் நகரை சூழ்ந்த கங்கை  Courtesy: Hindu/BBC
அலஹாபாத் நகரை சூழ்ந்த கங்கை Courtesy: Hindu/BBC

இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மிக மோசமாக பாதிப்படைந்தது பீகார் தான். பீகாரில் வெள்ளத்தில் குறைந்தபட்சம் 150 பேர் இறந்துள்ளனர் மற்றும் அரை மில்லியன் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

அண்டை மாநிலமான உத்தரபிரதேச மாநிலமும் கங்கை நதியின் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

உலகின் மூன்றாவது பெரிய நதியான கங்கை நதி, வங்காள விரிகுடாவில் சேரும் முன், வட இந்திய மாநிலங்களில் தனது கிளை நதிகளை சந்திக்கிறது.

Courtesy: Hindu
Courtesy: Hindu

இந்திய வானிலை ஆய்வு துறை கடந்த வாரத்தில் இந்த மாநிலங்களில் குறைந்த அளவு மழை பெய்துள்ளதை பதிவு செய்துள்ளது. மேலும், ஜூன் மாதம் பருவ மழை காலம் தொடங்கிய பிறகு சராசரி மழை பதிவாகியுள்ளது.

சில நிபுணர்கள் வெள்ளத்தின் போது நதி எடுத்துச் செல்லும் வண்டல் மண் தான் பிரச்சனை என்றனர்.

கங்கை நதி வண்டல் மண்ணை அதிக அளவில் எடுத்துச் செல்லும் நதிகளில் ஒன்றாகும். இந்த வண்டல் மண், ஆற்றின் படுகையை உயர்த்துகிறது. இது, கரை உடைய காரணமாகிறது. கரை அருகில் உள்ள மக்களின் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளை நிலங்களை வெள்ளம் அடைகிறது என்று கூறினார்.

காசியில் கங்கை  Courtesy: Hindu/BBC
காசியில் கங்கை Courtesy: Hindu/BBC

பீகாரில் உள்ள அதிகாரிகள், வண்டல் மண் தேங்கும் இந்த பிரச்சனயை தீர்க்க, வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள மேற்கு வங்கத்தில் உள்ள செயற்கை தடுப்பணையை தகர்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அவர்கள் வண்டல் மண் தேக்கமானது ஃபராக்கா தடுப்பணை வழியாக பல இடங்களில் நதி நீர் செல்வதை தடுக்கிறது

இதன் விளைவாக கங்கை நதி பீகார் மாநிலத்திற்குள் பாய்கிறது மற்றும் வெள்ளம் ஏற்பட காரணமாகிறது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

வண்டல் மண் தேக்கம் கங்கை நதியின் முக்கிய கிளை நதியான கோசி நதியின் நீர் மட்டத்தை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்துகிறது.

இந்த வண்டல் மண் அதிக அளவில் நதியில் தேங்கியுள்ளது. இதனால் கோசி தடுப்பணை மற்றும் பிற தடுப்பணைகளை சேதப்படுத்தலாம் என்ற பயம் எழுந்துள்ளது, ” என 1960களில் கட்டப்பட்ட ஃபராக்கா தடுப்பணையை சுட்டிக்காட்டி தேவ் நாராயண் யாதவ் என்ற நதி நீர் நிபுணர் கூறினார்.

இந்த வண்டல் மண் நதி பாய்ந்து செல்லும் அளவை அதிகப்படுத்தியுள்ளது. அதனால், நதி நீர் எங்களது கிராமங்களில் தரையை தொட்டுச் செல்லும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் எவ்வளவு பாதிப்பை நங்கள் சந்திக்கிறோம் என்று நீங்கள் நினைத்து பார்க்கலாம்,” என்றார்.

வண்டல் மண் தேங்குவதை பிபிசி குழு கண்டது. கோசி நதியின் தடுப்பணையின் பல கதவுகளையும் அது அடைத்து விடுமளவு மோசமான நிலையை பார்க்க முடிந்தது. நேபாள நாட்டில் கோசி நதியின் தடுப்பணை இந்தியாவால் கட்டப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

சில புவியியலாளர்கள் பேசுகையில், இமாலய மலையில் அதிகரித்து வரும் நிலச்சரிவு சம்பவங்களால், கங்கையில் வந்து கலக்கும் நதிகளில் வண்டல் மண் தேக்கத்தின் அளவு அதிகரிக்க காரணமாக உள்ளது என்று கூறியுள்ளனர்.

இந்த ஆறுகள் வண்டல் மண்ணை சுமந்து வந்து கொட்டுவதால், இதை நாம் கட்டுப்படுத்தினால், கங்கை ஆற்றுப் படுகையில் தீராத பிரச்சனையாக உள்ள வெள்ளப் பெருக்கையும் நாம் கட்டுப்படுத்த முடியும்,”என்று தெரிவித்தார் ஜா.

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள இமாலய நிலவியல் தொடர்பான வாடியா என்ற கல்வி நிறுவனம், வண்டல் மண் தேக்கம் தான் வெள்ளத்திற்கு பெரிய பிரச்சினை என்று அடையாளம் கண்டுள்ளது.

நதியை தூர் வாருவது தான் உடனடியாக செய்யவேண்டிய வேலை. தூர்வாரும் வேலையானது அறிவியல் பூர்வமாக நதியின் நடுப்பகுதியில் இருந்து செய்யப்பட வேண்டும், ” என்று பேராசிரியர் அனில் குமார் குப்தா தெரிவித்தார். இவர் புவியியல் விவகாரங்களில் அரசுக்கு உதவும் நிறுவனத்திற்கு தலைமை வகிக்கிறார்.

வணிக காரணங்களுக்காக, கட்டுப்பாடின்றி நதிகளில் மணல் அள்ளுவது தொடர்ந்ததால், உரிமம் இல்லாமல் மணல் எடுப்பதற்கு 2014-ஆம் ஆண்டில் இந்திய உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

மணல் பெரும்பாலும் நதியின் கரைகளில் அள்ளப்படுவதால், அது நதி செல்லும் திசையைப் பாதிக்கிறது. அதனால் நதியின் நடு பகுதியில் இருந்து வண்டல் மண் அள்ளப்படவேண்டும்.” இந்தியாவின் மத்திய நீர் ஆதார மையத்தை சேர்ந்த அதிகாரிகள் அணைகள் அமைத்தால் இந்த பிரச்சினையை திறம்பட சமாளிக்க முடியும் என்று நம்புகிறார்கள்.

மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்துவது போன்ற கட்டமைப்பு சாராத நடவடிக்கைகளால் போதிய அளவிற்கு பயன் கொடுப்பதாக இல்லை.

நங்கள் கட்ட திட்டமிட்டுள்ள அணைகள் வெள்ள நீரை தேக்கி வைக்கவும் வெள்ளத்தை தடுக்கவும் உதவும். வண்டல் மண் தேக்கத்தை சமாளிக்கும் தொழில்நுட்பமும் அதில் அடங்கும், ” என்று ஜி.எஸ்.ஜா தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், மத்திய நீர் வள ஆணையம் மூன்று முக்கிய அணைகள் கட்டத் திட்டமிட்டுள்ளதாகவும், அவற்றில, இரண்டு மேல் நேபாள பகுதியிலும், மற்றொன்று அருணாச்சல பிரதேச பகுதியிலும் கட்ட இலக்கு வைத்துள்ளது என்றும் கூறினார்.

”சில காலமாகவே இதற்கான திட்டத்தை அவர்கள் தீட்டியுள்ளனர். இந்த அணைகளை கட்ட முடியும் என்றும் தீராத பிரச்சனையாக உள்ள வெள்ள அபாயத்தை தீர்க்க முடியும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்,”என்று மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் ஜி.எஸ்.ஜா நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

நன்றி: ஹிந்து/BBC


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *