ஆட்டு எரு – ஆழ்கூள முறை உர உற்பத்தி

  • ஆட்டு எருவில் மாட்டு எருவில் உள்ளதைப் போல் 2 மடங்கு தழைச்சத்தும் சாம்பல்சத்தும் உள்ளது.
  • ஒரு ஆடு ஒரு வருடத்திற்கு 500 கிலோவில்இருந்து 750 கிலோ வரை எரு உற்பத்தி செய்ய வல்லது.
  • 100 ஆடுகள் உள்ள கிடை வைத்தால் ஒரு ஏக்கருக்கு வேண்டிய வளத்தைப் பெறலாம்.
  • ஆட்டு எருவில் உள்ள சத்துக்களின் அளவு ஆட்டு இனம் மற்றும் அவைகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தைப் பொறுத்தே இருக்கும்.
  • ஆடுகளுக்கு புரதச்சத்து குறைந்த தீவனங்களை அளிக்கும்போது எருவில் தழைச்சத்து அளவு குறைந்தே இருக்கும்.
  • ஆட்டின் சிறுநீரில் தழைச் சத்தின் அளவு அதிகமாகவும் இருக்கும்.
  • புழுக்கையில் நுண்ணூட்டச்சத்துக்களும் தாது உப்புக்களும் உள்ளன.
  • எனவே புரதச்சத்து மிக்க தீவனங்களான குதிரைமசால், முயல்மசால், வேலிமசால், சூபாபுல், தட்டைப்பயறு போன்றவற்றை ஆடுகளுக்கு கொடுத்தால் தழைச் சத்து மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களின் அளவு ஆட்டு எருவில் அதிகமாக இருக்கும்.
  • ஆட்டு எருவில் 60லிருந்து 70 சதம் தண்ணீர் சத்தும், 2 சதம் தழைச் சத்தும், 0.4 சதம் மணிச் சத்தும், 1.7 சதம் சாம்பல் சத்தும் உள்ளது.

ஆழ்கூள முறை உர உற்பத்தி:

  • இம் முறையில் கொட்டகையின் நிலப் பரப்பிற்கு ஆழ்கூளமாக நிலக் கடலைத் தோல், துண்டிக்கப் பட்ட வைக்கோல், இலைச்சருகுகள், மரத்தூள், தேங்காய் நார்கழிவு போன்றவற்றை பயன்படுத்தலாம்.
  • ஆடு ஒன்றுக்கு 7 கிலோ அளவில் ஆழ் கூளத்தை தரையில் பரப்ப வேண்டும்.
  • ஆழ்கூளத்தின் அளவு அரை அடி உயரத்திற்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும்.
  • சிறுநீர் ஆழ்கூளத்தால் உறிஞ்சப்படுவதால் சிறுநீரில் இருந்து தழைச்சத்து ஆவியாகி விரயமாவது குறைகிறது.
  • இந்த முறையில் ஆடுகளுக்கு நல்ல ஊட்டச்சத்து மிக்க பசுந்தீவனம் மற்றும் அடர்தீவனம், தண்ணீர் தேவைக் கேற்ப கொடுப்பதால் ஆடுகள் நன்கு உட்கொண்டு அதிக புழுக்கை மற்றும் சிறுநீரை வெளியிடுகிறது.
  • ஆழ்கூளத்திலுள்ள ஈரத்தன்மையைப் பொறுத்து 3லிருந்து 4 வருடத்திற்கு ஒரு முறை ஆழ்கூள எருவை எடுத்துக் கொள்ளலாம்.
  • இந்த முறையில் பத்து ஆடுகளிலிருந்து ஆண்டு ஒன்றுக்கு இரண்டரை டன் தரமான எரு கிடைக்கும்.
  • இந்த எருவில் 50 கிலோ பொட்டாஷ் உரத்திலுள்ள சாம்பல் சத்தும் கிடைக்கும்.
  • ஆட்டுஎருவில் உள்ள தழைச்சத்து மெதுவாக வெளிப்படுவதால் பயிர்களின் தேவைக்கேற்ப தழைச்சத்து சீராக கிடைக்கிறது. ஆனால் ரசாயன உரம் தழைச்சத்தை உடனடியாக வெளியிடுவதால் நிறைய தழைச்சத்து ஆவியாகி விரயமாகிறது.

ஆட்டு எரு பயன்கள்

  • ஆழ்கூள முறையில் வளர்க்கப்படும் ஆடுகளிலிருந்து பெறப்படும் எருக்கள் களைகளின் விதைகள் இல்லாமல் இருப்பதால் வேளாண்பயிர் சாகுபடியிலும் களைகள் குறைவாக இருக்கும்.
  • வீடுகளில் மண்தொட்டி மற்றும் பாலிதீன் பைகளில் மரக்கன்று கள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் இந்த ஆழ்கூள எருவைப் பயன்படுத்தி களைகளற்ற நாற்றங்கால் அமைத்து நல்ல தரமான கன்றுகளை உற்பத்தி செய்யலாம்.
  • ஆழ்கூள உரத்தை நெல், தக்காளி, மிளகாய், கத்தரி போன்ற பயிர்களின் நாற்றங்கலில் இட்டு களைகளின் அளவைக் கட்டுப்படுத்தி அதிக லாபம் பெறலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “ஆட்டு எரு – ஆழ்கூள முறை உர உற்பத்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *