"இயற்கை விவசாயத்துக்கு மானியம் கொடுங்கள்"

இயற்கை விவசாயத்துக்கு மானியம் கொடுங்கள் என்று பாரம்பரிய நெல் ஆய்வாளர் நெல் இரா.ஜெயராமன் கூறினார்:

jayaram

 

 

 

 

  • நவீன விவசாயத்துக்குச் செய்யப்படும் செலவில் பாதியைச் செலவிட்டாலே இயற்கை விவசாயம் மூலம் உணவு உற்பத்தியை அதிகரிக்கலாம்.
  • பசுமைப் புரட்சி என்ற பெயரில் நிலத்தில் கொட்டப்படும் ரசாயன உரங்களால் மண் நஞ்சாகி, மலடாகிவிட்டது.
  • இதனால் எந்தச் சாகுபடியும் முழு அளவில் மகசூல் தருவதில்லை. விளைபொருட்களும் விஷமாகிவிட்டன.
  • தற்போது தமிழகம் முழுவதும் விவசாயிகள் பரவலாக இயற்கை விவசாயத்தை ஆர்வத்துடன் செய்கிறார்கள்.
  • ஆனால், இயற்கை விவசாயத்துக்குத் தேவையான நுண்ணுயிரிகளான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனாஸ் போன்றவற்றுக்கு வேளாண்மைத் துறை மானியம் வழங்குவதில்லை.
  • ஆனால், விவசாயத்தையும் மண்ணையும் பாழ்படுத்தும் யூரியா, பொட்டாஷ் போன்றவற்றுக்குக் கோடிக் கணக்கான ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
  • இது முழு அளவில் விவசாயிகளைச் சென்று சேருகிறதா என்பதும் கேள்விக்குறிதான்.
  • உதாரணமாக, களைக் கொல்லிக்கு 50 % மானியம் அளிக்கிறார்கள். இதை மூன்று முறை உபயோகப்படுத்தினாலும், களைகள் அழிவதில்லை.
  • தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பரிந்துரைக்காத மருந்துகள்கூட வேளாண் துறையால் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. இவற்றால் பலன் ஏதும் இல்லை.
  • இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது.
  • ஆனால், சந்தைப்படுத்துவதில் விவசாயிகளுக்குப் பல்வேறு சிரமங்கள்.
  • இதிலும் இடைத்தரகர்களே பலன் அடைகிறார்கள்.
  • இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய நெல் ரகங்களைச் சாகுபடி செய்தால், அதிக மகசூல் கிடைக்கிறது.
  • ஆனால், வேளாண் துறை வெளி மாநிலங்களின் பெயர் தெரியாத நெல் ரகங்களை கிலோ ரூ.700 – 800 விலையில் திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிரிட வழங்குகிறது.
  • இதைத் தவிர்த்து, தமிழகத்தில் அந்தந்தப் பகுதியில் சாகுபடி செய்ய ஏற்ற பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கலாம்.
  • வறட்சி, வெள்ளம் என அனைத்தையும் தாங்கி நல்ல மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றைப் பயன்படுத்தவும், அதை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் பணியையும் வேளாண் துறை கையில் எடுக்க வேண்டும்.
  • தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இயற்கை வேளாண்மைக்கு எனத் தனித் துறையைத் தொடங்கியுள்ளது. அதில் மாணவர்களுக்கு மட்டுமின்றி, விவசாயிகளுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும்.
  • இயற்கை விவசாயத்துக்குத் தனி கொள்கையை உருவாக்கி, இயற்கை விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்.
  • இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களை உண்ணும்போது நோய் எதிர்ப்புச் சக்தி பெருகுகிறது.
  • அரசு மருத்துவத் துறைக்குச் செலவிடும் தொகையும் குறையும். மக்களும் நலமுடன் இருப்பார்கள். இவ்வகை உணவு தானியங்களைச் சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரி விடுதிகளுக்கு விநியோகிக்கலாம்.
  • இவற்றைச் செய்தாலே இயற்கை விவசாயம் தழைக்கும். இவ்வாறு மண்ணையும் மக்களையும் காக்கும் இயற்கை விவசாயத்துக்குத் தனி அமைச்சகத்தை மத்திய, மாநில அரசுகள் அமைக்க வேண்டும்.

நன்றி: தி ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *