இயற்கை வேளாண்மைக்கு தயாராகலாமே!

இயற்கை வேளாண்மையில் விளைச்சல் குறைவாக இருந்தாலும், நீடித்த நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு அச்சாரமாக அது அமையும் என முன்னோடி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல முதல்வர் முனைவர் ஜே.வசந்தகுமார் தெரிவித்த தகவல்கள்:

இயற்கை முறை காய்கறி சாகுபடி குறிப்புகள் மற்றும் இயற்கை உரமிடுதல்:

  • வேளாண் பயிர்க் கழிவுகளை மக்க வைத்து இயற்கை தொழு உரம் தயார் செய்துவிடலாம்.
  • பசுந்தாள் உரங்களை தக்கைப்பூண்டு, அகத்தி, சணப்பை, கொளிஞ்சி போன்றவற்றை பயிரிட்டு மக்க வைத்து பயன்படுத்தலாம்.
  • கம்போஸ்ட் எரு, தொழுஉரம், கோழி எரு, பன்றி எரு, கம்போஸ்ட் கரும்பு ஆலை கழிவு எரு, தென்னை நார் கழிவு எரு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
  • புண்ணாக்கு வகைகளான வேம்பு, ஆமணக்கு, புங்கம், இலுப்பை, தென்னை கடலை எள், காட்டாமணக்கு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

 மண்புழு உரமிடுதல்:

  • இந்த உரத்தில் பயிருக்கு தேவையான சத்துக்கள் மட்டுமல்லாமல் பயிருக்கு தேவையான இயற்கை பயிர் ஊக்கியும் இருப்பது ஆச்சரியப்பட வேண்டிய விஷயமாகும்.
  • இதை அடியுரமாக இடுவதை விட முக்கியமாக காய்கறிப் பயிர்களுக்கு ஏக்கருக்கு 2-3 டன் உரத்தை மேலுரமாக செடிகளை சுற்றி, செடி விதைத்த 20 நாள்களுக்கு ஒருமுறை வீதம் 3 முறை இடுவது நல்லது.

நுண்ணுயிர் உரங்கள் இடுதல்:

  • காய்கறிப் பயிர்கள் நன்கு செழித்து வளர செலவில்லாத நுண்ணுயிர் உரங்களான ரைசோபியம், பாஸ்போபேக்டீரியா, அசோஸ்பைரில்லம், மைக்கோரைசாவேர் உட்பூசணம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டை, உதாரணமாக ரைசோபியம் பால்போபாக்டீரியா (அலலது) ரைசோபியம் மைக்கோரைசாவேர் உட்பூசணம் (அல்லது) அசோஸ்பைரில்லம் பாஸ்போபாக்டீரியா போன்றவற்றை ஏக்கருக்கு 5 பாக்கெட் என்ற விகிதத்தில் கடைசி உழவுக்கு முன்பு இட வேண்டும்.
  • அடியுரமாக இடமுடியாத தருணத்தில், விதை நேர்த்தியாக கூட பயன்படுத்தலாம், மேற்கூறிய உயிர் உரங்களை ஏக்கருக்கு 2 பாக்கெட் என்ற விகிதத்தில் குளிர்ந்த அரிசிகஞ்சியுடன் கலந்து விதைகளை விதைப்பதற்கு முன் நிழலில் 6 மணி நேரம் உலரவைத்து விதைக்க வேண்டும்.

 இயற்கை முறையில் விதை நேர்த்தி:

  • சூடோமோனாஸ் 10 கிராம் கிலோ அல்லது டிரைகேடெர்மா 4 கிராம்கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்யலாம்.
  • ஒரு சதுர மீட்டர் நாற்றங்காலுக்கு தொழு உரம் 50 கிராம் வேப்பம் புண்ணாக்கு, அசோஸ்பைரில்லம் 5 கிராம், பாஸ்போபேக்டீரியா 5 கிராம் மற்றும் மைக்கோரைசாவேர் உட்பூசணம் 60 கிராம் என்ற அளவில் இடலாம்.
  • விளைநிலங்களில் அசோஸ்பைரில்லம் 400 கிராம் கரைசலில் நாற்றுகளின் வேர்களை நனைத்தல், ஓரு ஹெக்டேர் நிலத்துக்கு 2 கிலோ பாஸ்போபாக்டீரியா மற்றும் மைக்கோரைசாவேர் உட்பூசணம் 4 கிலோ என்ற அளவில் இடலாம்.
  • மண்புழு உரம் மறறும் வேப்பம் புண்ணாக்கு இடலாம், பஞ்சகாவியாவை பாசனநீர் மூலம் கலந்து விடலாம். முருங்கை இலைச்சாற்றை மேலுரமாக தெளிக்கலாம்.

நுண்ணுயிர்களின் பங்கு:

  • மண்ணிற்கு நுண்ணுயிர்கள் மக்கவைக்கும் இயல்பை தருகிறது.
  • ஒளிச்சேர்க்கை செய்வதை துரிதப்படுத்திவிடும் லேக்டிக் அமில பாக்மரியா மண் மற்றும் உரங்களில் உருவாகும் தீமை தரும் நுண்ணுயிர்களை கட்டுப்படுத்தக்கூடும்.
  • இந்த நுண்ணுயிர்களை மண்ணிலும், உரத்திலும் நீரிலும் தெளிப்பதன் மூலம் உற்பத்தியை பெருக்கி கூடுதல் மகசூலைப் பெறலாம்.

நுண்ணுயிர் கரைசல் தயாரிப்பு முறை:

  • 20 லிட்டர் தண்ணீரில் (குளோரின் கலக்காதது) 1 கிலோ நாட்டு சர்க்கரை கலந்து அதனுடன் 1 லிட்டர் நுண்ணுயிர் கரைசல் கலந்து இவை அனைத்தையும் 20 லிட்டர் பிளாஸ்டிக் டிரம்மில் சேகரித்து இருட்டான, குளிர்ச்சியான அறையில் 10 நாள்களுக்கு மேல் வைத்திருக்க வேண்டும்.
  • இதிலிருந்து இனிமையான மணம் உருவாகும். இக்கரைசலை கம்போஸ்ட்கள் மீதும் மற்றும் விவசாய சாகுபடி செய்யக்கூடிய மண்ணின் மீதும் தெளிக்கலாம்.
  • நுண்ணுயிர் கரைசல் புதுச்சேரி ஆரோவில்லில் கிடைக்கிறது. எனவே விவசாயிகள் இயற்கை வேளாண்மையை பயன்படுத்தி சாகுபடி பொருள்களின் தரத்தை உயர்த்தி அதிக லாபம் பெறலாம் என்கிறார் வசந்தகுமார்.

நன்றி: தினமணி

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *