நெல் சாகுபடியில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

நெல் சாகுபடியில் தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் பயன் படுத்தி வரும் பாரம்பரிய தொழிற் நுட்பங்களை பார்ப்போமா?

  • நெல் பயிரில் இலை மடக்குப்புழு மற்றும் தண்டு துளைப்பான் கட்டுப்படுத்த 1 லிட்டர் மண்ணெண்ணெயை, சோப்பு, நீர் கலந்து தெளிக்கலாம்.
  • நெல் தோகை அழுகல், உளுந்து சாம்பல் நோய், பச்சை இலைத் தத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்த 25 கிலோ வேப்பங்கொட்டை பருப்பை இடித்து 500 லிட்டர் தண்ணீரில் இட்டு 8 மணி நேரம் கழித்து எடுத்து தெளிக்கலாம்.
  • நெல் பயிரில், கதிர் நாவாய் பூச்சியைக் கட்டுப்படுத்த, 5 சதவிகிதம் மிளகாய் இலை கரைசலை தெளிக்கலாம். பூச்சித் தாக்குதல் ஏற்பட்டவுடன்பின் தெளிக்கவேண்டும்.
  • நெல் பயிரில் எலி சேதாரத்தை கட்டுப்படுத்த, நெல் பூக்கும் தருணத்தில்  ‘சைகஸ்’ செடி பூவை வயலில் அங்கு வைக்கவேண்டும்.
  • நெல் வயலில் கோரையைத் தடுக்க, ஏக்கருக்கு 100 கிலோ புளியங்கொட்டையைக் கடைசி உழவின் போது இடலாம்.
  • நெல்லில் ஒரு குத்தின் எண்ணிக்கை அதிகரிக்க, 3 சதவீதம், பஞ்சகாவ்யா (300 மிலி / 10 லிட்டர் தண்ணீர்) பயிரின் குத்து பெருகும் பருவத்திலும், அதன் 15 நாட்கள் கழித்தும் தெளிக்கலாம்.
  • நெல் பயிரில் விளைச்சலை அதிகரிக்க 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மிலி எலுமிச்சை பழச்சாறு என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம் அல்லது 10 முட்டை மூழ்கும் அளவு எலுமிச்சைப் பழச்சாறு ஊற்றி, அதனுடன் 250 கிராம் சர்க்கரை சேர்த்து, 10 நாட்கள் வைத்திருந்து, பின் நன்றாக கலந்து, அந்த சாறு அளவு மீண்டும் சர்க்கரைத்தூள் கலந்து தெளிக்கலாம்.
  • நெல்லில்  இலைமடக்குப்புழுவின் சேதாரத்தைக் கட்டுப்படுத்த 200 லிட்டர் நீரில் 20 கிலோ காட்டாமணக்கு இலையை இடித்து போட்டு, வடிகட்டி தெளிக்கலாம்.
  • நெல்லில் அசுவினி மற்றும் கம்பளிப்புழுவை கட்டுப்படுத்த 200 லிட்டர் தண்ணீருக்குள் 2 கிலோ மிளகாய் தூள் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம்.
  • நெல் கொள்ளை நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ வேலிக்கருவேல் தெளிக்கலாம்.
  • நெல் இலை மடக்குப்புழுவைக்கட்டுப்படுத்த, 2 கிலோ உப்பு, 8 கிலோ சாம்பல் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கருக்கு தெளிக்கலாம்.
  • நெல்லில் துத்தநாக குறைப்பாட்டை, சரிசெய்ய, புளியந்தழை மற்றும் வாதநாராயண இலைச்சாற்றைத் தெளிக்கலாம்.
  • நெல் வயலில் தத்துப்பூச்சிகள் கட்டுப்படுத்த, எருக்கலை இலைகள் போட்டு, மடக்கி உழவேண்டும்.
  • நெல்லில் இலைமடக்குப்புழு, தண்டு துளைப்பான் தாக்குதலைக் குறைக்க 15 கிலோ சாம்பலை ஒரு ஏக்கருக்கு போடலாம்.

நன்றி: தமிழ் நாடு விவசாய பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *