பயறு, பால், பஞ்சகவ்யா! லாபம் எடுக்கும் உற்பத்தியாளர் நிறுவனம்

பயறு, பால், பஞ்சகவ்யா… – ‘பலே’ லாபம் எடுக்கும் உற்பத்தியாளர் நிறுவனம்…

பயறு வகை பயிர்கள் சாகுபடியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மானியம், அதிக விளைச்சல் போட்டி என்று திட்டங்கள் போட்டுச் செயல்படுத்தி வரும் வேளையில் தனியார் அமைப்பான ‘இலுப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர் நிறுவனம்’ இலுப்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கணிசமான அளவில் பயறு சாகுபடியைப் பெருக்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள இலுப்பூர் கிராமத்தில் இயங்கிவருகிறது இலுப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர் நிறுவனம். பயறு சாகுபடியை அதிகரிப்பதற்காக இந்நிறுவனம் எடுத்த முயற்சிகளைப் பாராட்டி, சிறந்த கிராமப்புற மேம்பாட்டுச் சேவைக்கான விருதை வழங்கியிருக்கிறது மத்திய அரசு.

இந்நிறுவனத்தின் பணிகள் குறித்துத் தலைமைச் செயல் அலுவலர் தட்சணாமூர்த்தியிடம் பேசினோம்.

“விவசாயிகள் கிராமங்களை விட்டும் விவசாயத்தை விட்டும் வெளியேறுவதைத் தடுத்து விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மூலம் அவர்களுக்குப் போதுமான வருமானத்தை உருவாக்கித் தரணும்கிற நோக்கத்துல, 2012-ம் வருஷத்துல இருந்து நாங்க பணிகளைச் செய்துட்டு இருக்கோம். போன 2015-ம் வருஷம் சுத்துப்பட்டுல இருக்குற 54 கிராமங்களைச் சேர்ந்த 1,000 விவசாயிகளை ஒருங்கிணைச்சுச் சட்டப்பூர்வமாக இந்த நிறுவனத்தைப் பதிவு செஞ்சோம்.

இருபது, முப்பது வருஷங்களுக்கு முன்னாடி இந்தப் பகுதிகள்ல உளுந்து, துவரை, பச்சைப்பயறுனு பயறு வகை சாகுபடி அதிகளவுல நடந்துட்டு இருந்துச்சு. காலப்போக்குல அதுல லாபம் கிடைக்காமப் போனதால, விவசாயிகள் பயறு சாகுபடியைக் கைவிட்டுட்டு யூகலிப்டஸ் மரங்களைச் சாகுபடி செய்ய ஆரம்பிச்சாங்க. அதனால, பயறு உற்பத்தி ரொம்பவும் குறைஞ்சுடுச்சு.

பயறு சாகுபடியில் லாபம் குறைஞ்சதுக்கு முக்கியக் காரணம், விதை விஷயத்துல விவசாயிகளுக்கு விழிப்பு உணர்வு இல்லாததுதான். உரக்கடைகாரங்க கொடுக்குற விதைகளை எந்தக் கேள்வியும் கேக்காம வாங்கிட்டு வந்து விதைச்சுடுவாங்க. அப்புறம் நோய்க்கும் பூச்சிக்கும் கடைக்காரங்க சொல்ற திரவத்தை வாங்கிட்டு வந்து தெளிப்பாங்க. பருவம், பட்டம், மண் வளம்னு எதையும் கணக்கில எடுத்துக்காம இப்படி வாங்கிட்டு விதைச்சா விளைச்சல் எப்படிக் கிடைக்கும்? அதனாலதான் மகசூல் குறைஞ்சு போச்சு.

உதாரணமா, உளுந்துல ‘கோ-7’னு ஒரு ரகம் இருக்கு. இது, கோயம்புத்தூர் உள்ளிட்ட சில பகுதிகள்ல நல்லா விளையும். ஆனா, இலுப்பூர் மாதிரியான வெப்ப மண்டலப் பகுதியில் சரியா விளையாது. அதை இங்க விதைச்சா, கண்டிப்பா லாபம் இருக்காது. இந்த மாதிரி பல பிரச்னைகளாலதான் இந்தப்பகுதியில் பயறு சாகுபடி குறைஞ்சு போயிடுச்சு.

அதனால, திரும்பவும் இந்தப்பகுதியில் பயறு சாகுபடியை மீட்டெடுக்கணும்னு முடிவு செஞ்சு வறட்சியைத் தாங்கிப் பூச்சி, நோய்த்தாக்குதல்களை எதிர்த்து வளரக்கூடிய இந்தப் பகுதிக்கேத்த பயறு விதைகளைத் தேட ஆரம்பிச்சோம். முதல்ல உளுந்தைக் கையில் எடுத்து ஆராய்ச்சி நிலையங்கள்ல பேசுனப்போ, எல்லோருமே வம்பன்-4, வம்பன்-6 ரகங்களைப் பரிந்துரைச்சாங்க. சில விவசாயிகள் பரிந்துரைச்ச ரகங்களோட விதைகளையும் வாங்கினோம். அப்படி நாங்க சேகரிச்ச எல்லா ரகங்களையும் சோதனை அடிப்படையில் ஒரே சமயத்துல பயிர் பண்ணினோம். இந்தப்பகுதி விவசாயிகள் இருபது பேர் சேர்ந்து 10 நாள்களுக்கு ஒரு தடவை வயலைச் சோதனை செஞ்சாங்க. அவங்க சொன்ன முடிவுகள் அடிப்படையிலும் 50 இடங்கள்ல 50 முறை ஆய்வு செஞ்ச அடிப்படையிலும் இந்தப் பகுதிக்கேத்த ரகங்கள் வம்பன்-4, வம்பன்-6 ஆகிய ரெண்டு ரகங்கள்தான்னு முடிவு பண்ணினோம்” என்ற தட்சணாமூர்த்தி தொடர்ந்தார்.

“அதுக்கப்புறம் வம்பன் ஆராய்ச்சி நிலையத்துல இருந்து ஆதார விதையை வாங்கிக்கிட்டு வந்து சில முன்னோடி விவசாயிகள் மூலமா விதை உற்பத்தி செஞ்சோம். அந்த விதைகளை

நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு விநியோகிச்சோம். போன 3 வருஷத்துல மட்டும் 14.5 டன் விதை உளுந்தை உற்பத்தி செஞ்சு, குறைவான விலைக்கு விவசாயிகளுக்கு விற்பனை செஞ்சுருக்கோம். போன வருஷம் வெளிச் சந்தையில ஒரு கிலோ விதை உளுந்தோட விலை 210 ரூபாய். ஆனா, நாங்க 160 ரூபாய்க்குத்தான் விநியோகம் செஞ்சோம்.

அதே மாதிரி இந்தப் பகுதிக்கேத்த வம்பன் – 3 பச்சைப்பயறு விதையை ஒன்றரை டன் அளவுக்கு உற்பத்தி செஞ்சு விநியோகிச்சுருக்கோம். வம்பன் – 2 ரகத் துவரையிலும் விதை உற்பத்தி செஞ்சு விவசாயிகளுக்குக் கொடுத்திருக்கோம். காய்கறி விதைகள் தேவைப்படுற விவசாயிகளுக்கு நாட்டுக்காய்கறி விதைகளை வரவழைச்சுக் கொடுக்குறோம். இந்தப் பகுதி விவசாயிகள் உற்பத்தி செய்ற காய்கறிகள், பயறு, பால்னு எல்லா விளைபொருள்களையும் நாங்களே கொள்முதல் செஞ்சுக்குறோம். கொள்முதல் செய்ற பொருள்களுக்குச் சந்தை விலையைவிடக் கூடுதல் விலை கொடுக்குறோம்” என்ற தட்சணாமூர்த்தி நிறைவாக,

“போன வருஷம் 13 டன் உளுந்து, 4 டன் பச்சைப்பயறு, 2 டன் துவரை கொள்முதல் செஞ்சு, உற்பத்தியாளர் நிறுவனத்துக்குச் சொந்தமான மிஷின்ல உடைச்சு, பாக்கெட் போட்டு, ‘பட்டிக்காட்டான்’ங்கிற பெயர்ல சந்தைப்படுத்தியிருக்கோம். இந்தப்பகுதியில் நிறைய விவசாயிகள் இயற்கை முறையில்தான் சாகுபடி செய்றாங்க. இயற்கை விவசாயத்துல அவங்களுக்குத் தேவையான பயிற்சிகளையும் நாங்களே கொடுக்குறோம். எங்களோட செயல்பாடுகளுக்கு எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் ரொம்ப உதவியா இருக்கு” என்றார்.

சிறப்பாகச் செயல்பட்டு வரும் இந்த இலுப்பூர் வேளாண் உற்பத்தியாளர் நிறுவனத்தினருக்குப் ‘பசுமை விகடன்’ சார்பாக வாழ்த்துகளைச் சொல்லி விடைபெற்றோம்.

கூடுதல் விலை… உடனடிப் பட்டுவாடா!

இலுப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர் நிறுவனத்தோடு தொடர்பிலுள்ள விவசாயிகள் சிலரிடம் பேசினோம். அவர்கள் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் இங்கே…

சுப்பையா: “நான் 2 ஏக்கர் நிலத்துல உளுந்து சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்கேன். முன்னாடி டி-9 ரகத்தைப் பயிர் செஞ்சப்ப, மஞ்சள் நோயைச் சமாளிக்க விதவிதமா பூச்சிக்கொல்லி தெளிப்பேன். அதுக்கே நிறையச் செலவாகும். அப்படிச் செஞ்சும் ஏக்கருக்கு 3 குவிண்டால்தான் மகசூல் கிடைக்கும். இப்போ வம்பன்- 4, வம்பன் -6 ரகங்களைச் சாகுபடி செய்ய ஆரம்பச்சதுலயிருந்து மஞ்சள் நோய் பிரச்னையே வர்றதில்லை. இயற்கை இடுபொருள்களை மட்டுமே கொடுக்குறதுனால, செலவும் குறைஞ்சுருக்கு. ஏக்கருக்கு 5 குவிண்டாலுக்குமேல மகசூல் கிடைக்குது.”

ஜெயக்குமார்: “எங்ககிட்ட 4 பால் மாடுகள் இருக்கு. இலுப்பூர் உற்பத்தியாளர் கம்பெனிக்குத்தான் பாலை விற்பனை செய்றோம். லிட்டருக்கு 26 ரூபாய் விலை கொடுக்குறாங்க. பால் ஊத்துன 15-ம் நாள் பணம் கிடைச்சுடுது. ஆனா, வெளியில வியாபாரிகள்கிட்ட விற்பனை செஞ்சா, லிட்டருக்கு 24 ரூபாய் வரைதான் விலை கிடைக்கும். அதுக்கு ஒரு மாசம் காத்திருக்கணும். அதனால இந்தப் பகுதியில இருக்குற பெரும்பாலான விவசாயிகள், இலுப்பூர் உற்பத்தியாளர் கம்பெனிக்குத்தான் பால் ஊத்துறாங்க.”

பழனியப்பன்: “விதை, உயிர் உரங்கள், இயற்கை இடுபொருள்கள்னு எல்லாமே மிகக்குறைந்த விலையில் இலுப்பூர் உற்பத்தியாளர் கம்பெனியிலேயே கிடைக்குது. ஒரு லிட்டர் பஞ்சகவ்யா 60 ரூபாய்தான். ஒரு லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி 20 ரூபாய்தான். இதையெல்லாம் தயாரிக்க எங்ககிட்ட, ஒரு கிலோ சாணம் 2 ரூபாய், ஒரு லிட்டர் மூத்திரம் 2 ரூபாய்னு விலை கொடுத்து வாங்கிக்குறாங்க. இலுப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர் கம்பெனியோட சேவை மையங்கள் 5 இடங்கள்ல இருக்குறதால விவசாயிகளுக்கு அலைச்சலும் மிச்சமாகுது.”

தொடர்புக்கு: தட்சணாமூர்த்தி, செல்போன்: 09626737207

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *