பயிர்களில் அதிக மகசூல் பெற, ஆட்டு எருவை உரமாக பயன்படுத்துமாறு வேளாண் அறிவியல் மையம் ஆலோசனை அளித்துள்ளது.
ரசாயன உரங்களின் விலை ஆண்டு தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தமிழக விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்துவதாக அண்டை மாநிலங்கள் தற்போது குற்றம் சாட்ட துவங்கியுள்ளன. வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை, ரசாயன உரங்களில் கலப்படம், அளவுக்கு அதிகமான பூச்சி மருந்து தெளித்தல், இயற்கை அழிவு என பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் விவசாயிகளுக்கு விளைபொருள் உற்பத்தி பெரும் சவாலாக உள்ளது.
இதை சமாளிப்பதற்காக தற்போது விவசாயிகள் இயற்கை உரத்திற்கு மாறி வருகின்றனர். தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அனைத்து விவசாயிகளிடமும் போதுமான அளவிற்கு கால்நடைகள் இருந்தன. அவற்றின் எருக்கள் உரமாக பயன்படுத்தப்பட்டன. தற்போது அதே நிலையை மீண்டும் கடைபிடிக்குமாறு வேளாண் அறிவியல் மையத்தினர் ஆலோசனை அளிக்கத் துவங்கியுள்ளனர்.
ஆட்டின் சிறுநீரில் தழைச்சத்தின் அளவு அதிகமாக இருக்கும். ஆட்டு எருவில் இருந்து ஆழ்கூள முறையில் உரம் உற்பத்தி செய்யலாம்.
நிலக்கடலை தோல், துண்டிக்கப்பட்ட வைக்கோல், இலைச் சருகுகள், மரத்தூள், தேங்காய்நார் போன்றவற்றை பயன்படுத்தி ஆழ் கூளம் எளிதாக தயாரிக்கலாம். ஆடு ஒன்றிற்கு 7 கிலோ என்ற அளவில் ஆழ்கூளத்தை தரையில் பரப்ப வேண்டும். இதனால் ஆடுகளில் இருந்து வெளியேறும் புழுக்கை மற்றும் சிறுநீர் ஆழ்கூளத்துடன் கலந்து விடும்.சிறுநீர் ஆழ்கூளத்தால் உறிஞ்சப்படுவதால் அதில் உள்ள தழைச்சத்து ஆவியாகி விரையமாவது குறையும்.
ஆழ்கூளத்தில் உள்ள ஈரத்தன்மையை பொறுத்து 3 லிருந்து 4 மாதத்திற்கு ஒருமுறை பயன்படுத்தலாம்.இந்த முறையில் 10 ஆடுகளில் இருந்து ஆண்டுக்கு இரண்டரை டன் தரமான எரு கிடைக்கும்.இந்த எருவில் 50 கிலோ பொட்டாஷ் உரத்திலுள்ள சாம்பல் சத்து கிடைக்கும்.
இம்முறையில் தயார்செய்யப்படும் எருக்களில் களையில்லாமல் இருக்கும். இதனால் பயிர் சாகுபடியில் களை எடுக்கும் செலவு குறையும். இவ்உரத்தை நெல், தக்காளி, மிளகாய் மற்றும் கத்திரி பயிர்களுக்கு பயன்படுத்தி அதிக லாபத்தினை பெறலாம்,’ என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நன்றி: தினகரன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்