கொத்தமல்லி சாகுபடி டிப்ஸ்

கொத்தமல்லி கட்டு மூலம், கட்டுகட்டாக லாபம் ஈட்டுவது குறித்து கூறும் சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மை அபிவிருத்தி மைய இயக்குனர் கணேஷ் தன் அனுபவங்களை கூறுகிறார்:

  • நிலத்தை நன்றாக உழுது, ஏக்கருக்கு, 10 டன் தொழு உரம் இட்டு, மீண்டும் உழுத பின், மேட்டுப் பாத்திகள் அமைத்து, பாத்தியின் மீது விதைகளைப் போட்டு, மண்ணை மூட வேண்டும்.
  • ஏக்கருக்கு, 4 முதல், 5 கிலோ கொத்தமல்லி விதைகள் தேவைப்படும்.
  • கொத்தமல்லியை, சொட்டு நீர்ப் பாசன முறையிலும் பயிரிடலாம்.
  • மானாவாரியாக, கொத்தமல்லியை சாகுபடி செய்தால், ஏக்கருக்கு, 10 கிலோ விதைகள் தேவைப்படும்.
  • விதைப்பதற்கு முன், ‘பொட்டாஷியம் – டை – ஹட்ரஜனை’ ஒரு லிட்டர் நீருக்கு, 10 கிராம் வீதம் கலந்து, விதைகளை, 16 மணி நேரம் ஊற வைத்து, விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • அதன்பின், விதைகளை வெயிலில் உலர்த்தி, அவற்றை இரண்டாக உடைத்து விதைக்க வேண்டும்.அப்போதுதான், விதைகள் முளைக்கும்.
  • நல்ல வடிகால் வசதியுள்ள நிலத்திலும், கார அமிலத் தன்மை, ஆறு முதல் எட்டு வரை இருக்கும் மண் வகையிலும், கொத்தமல்லியை சாகுபடி செய்யலாம்.
  • 25 முதல், 28 டிகிரி வெப்பத்தில் வளரக்கூடிய இவற்றை, அனைத்துப் பருவத்திலும் சாகுபடி செய்யலாம்.
  • விதை விதைத்த, 10முதல் 15 நாட்களுக்குள், கொத்தமல்லிச் செடிகள்முளைத்து விடும்.
  • விதைத்த மூன்றாம் நாளும், அதன்பின், வாரம் ஒரு முறையும் செடிகளுக்கு நீர் பாய்ச்ச வேண்டும்.
  • விதைத்த 30வது நாள், தழைச்சத்து அடங்கிய மருந்தைத் தெளிக்க வேண்டும்.
  • கொத்தமல்லி சாகுபடியில், அசுவனிப்பூச்சி தென்பட்டால், ‘மீதைல் டெமட்டான்’ மருந்தையும், பயிர்களில் வேர் அழுகல் நோய் தென்பட்டால், ‘ட்ரைக்கோடர்மாவிரிடி, சூடோ மோனஸ், அசோஸ்பைரில்லம்’ போன்ற மருத்துகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.
  • நோய் தாக்கிய செடிகளை, வேரோடு பிடுங்கி விடுவது நல்லது.
  • சாம்பல் நோயை கட்டுப்படுத்த, வேப்பெண்ணெய் மற்றும் கந்தகப் பொடி அல்லது பஞ்ச காவ்யா கரைசலையும் செடிகளுக்குத் தெளிக்கலாம்.
  • மேலும், 15 நாட்களுக்கு ஒரு முறை, களையெடுக்க வேண்டும்.
  • மொத்தத்தில், 30 முதல் 45 நாட்கள் வரை வளர்ந்த கொத்தமல்லிச் செடிகளிலிருந்து, ஏக்கருக்கு, 3 முதல், 4 டன் வரை கொத்தமல்லித் தழைகளையும், 90 நாட்கள் வரை வளர்ந்த செடிகளிலிருந்து, 200 முதல் 300 கிலோ வரை, கொத்தமல்லி விதைகளையும் அறுவடை செய்யலாம்.
  • சமையலில் கொத்தமல்லி முக்கிய அங்கம் வகிப்பதோடு, கொலஸ்ட்ரால் மற்றும் நீரழிவு நோய்க்கு சிறந்த மூலிகையாக திகழ்வதால், இதற்கு, ‘டிமாண்ட்’ அதிகம். அதனால், மிக எளிதாக சந்தைகளில் கொத்தமல்லியை விற்பனை செய்து விடலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *