தென்னையில் குருத்தழுகல் நோயை கட்டுப்படுத்த வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் சீகன்பால், ராம்குமார் யோசனை தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது:
“பைட்டோப்தோரா பால்மிவோரா’ என்ற பூசணத்தால் தென்னையில் குருத்தழுகல் நோய் ஏற்படுகிறது. இந்த நோயால் இளங்கன்றுகள் முதல் 10 வயது மரங்கள் வரை பாதிக்கப்படும்.
அதிக ஈரப்பதம், குளிர்ச்சியான சூழ்நிலையில் பூசணம் வேகமாக வளர்ச்சி அடையும். நோய் பாதித்த தென்னையின் குருத்து வெண்மை கலந்த சாம்பல் நிறமாக மாறிவிடும். குருத்தின் அடிப்பாகம் பலம் இழந்து விரைவில் அழுகி துர்நாற்றம் வீசும்.பாதிக்கப்பட்ட இளம் குருத்தை இழுத்தால் கையோடு எளிதில் வந்துவிடும்.
அறிகுறி கண்டவுடன் பாதிக்கப்பட்ட குருத்து பகுதிகளை வெட்டி எடுத்து எரித்துவிட வேண்டும்.
பின் பாதிக்கப்பட்ட பகுதியில் போர்டோ பசையை தடவினால் பூசணம் அழியத்துவங்கும். மேலும் இலைகளில் ஒரு சதம் போர்டோ கலவையை நன்றாக படும்படி தெளிக்க வேண்டும். காப்பர் ஆக்சிகுளோரைடு மருந்தை 3 கிராம் வீதம் ஒரு லிட்டர் நீரில் கலந்து குருத்துப்பகுதியில் ஊற்றுவதன் மூலம் நோயை கட்டுப்படுத்தலாம்.
தொழு உரம் 50 கிலோவுடன் வேப்பம் புண்ணாக்கு, சூடோமோனாஸ் புளுரசன்ஸ் 200 கிராம் கலந்து மரத்திற்கு ஆண்டுக்கு ஒருமுறை இட்டால் நோய் கட்டுப்படும், என்றனர்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்