மின்வெட்டால் பாழாகும் தென்னை நார் உற்பத்தி

கோவை மாவட்டத்தில் தொடர் மின்வெட்டால் தென்னை நார் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மூலப்பொருளான தேங்காய் மட்டை தோட்டங்களிலேயே தேக்கமடைந்துள்ளது.

இதனால், இதன் விலை பல மடங்கு சரிந்து விட்டது.

தமிழகத்தில், பருத்தியை ஆதாரமாக கொண்டு டெக்ஸ்டைல்ஸ் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்ததை போன்று, தென்னை விவசாயத்தை அடிப்படையாக கொண்டு தென்னை நார் தொழிற்சாலைகள் அதிகளவில் உருவாகியுள்ளன.

நார் தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் மூலப்பொருளான தென்னை மட்டைகள் அதிகளவில் கிடைப்பதால் கோவை மாவட்டத்தில் நார் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தென்னை நாரில் இருந்து, நார் கயிறு, கல்டு காயர் (முறுக்கு ஏற்றப்பட்ட நார்), தரைவிரிப்புகள், மிதியடிகள், வீட்டு உபயோக பொருட்கள், நார் துகள், நார் துகள் கட்டிகள் உள்ளிட்ட ஏற்றுமதி பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில் 350 நார் தொழிற்சாலைகள் உள்ளன. நார் தொழிற்சாலைகள் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 வரை பகல் “ஷிப்ட்’ ஆகவும், இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை “நைட் ஷிப்ட்டாகவும்’ இயங்கி வந்தன.

தற்போது நிலவும் மின்வெட்டால் தென்னை நார் தொழிற்சாலைகள் முழுமையாக பாதிப்படைந்துள்ளன. பகல் நேரத்தில் மூன்று மணி நேரம் மட்டுமே தொழிற்சாலைகள் இயங்குகின்றன.இரவு நேரத்தில் எப்போது மின்வெட்டு ஏற்படும் என்பது தெரியாததால் இரவு பணிக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர்.

இந்நிலையில் தேங்காய் சீசனும் துவங்கியுள்ளதால், தேங்காய் மட்டை வரத்தும் அதிகரித்துள்ளது. நார் தொழிற்சாலைகள் இயங்காத நிலையில், தேங்காய் மட்டை வரத்து அதிகம் இருந்தும் பலனின்றி உள்ளது.

அதனால், தேங்காய் மட்டைகள் கேட்பாரற்று தோட்டங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

தேங்காய் வியாபாரிகள் கூறியதாவது:

கடந்த நவம்பர் மாதம் வரையிலும் தேங்காய் மட்டைக்கு நல்ல விலை கிடைத்தது. ஆயிரம் தேங்காய் மட்டைக்கு அதிகபட்சமாக ஆயிரத்து 100 ரூபாய் விலை கிடைத்தது.

தற்போது ஏற்படுள்ள மின்வெட்டால் தேங்காய் மட்டை விலை மளமளவென சரிந்து விட்டது. தற்போது ஆயிரம் மட்டைக்கு அதிகபட்சமாக 250 ரூபாய் விலை (டெலிவரி) கொடுக்கப்படுகிறது.

ஆட்கள் கூலி, வண்டி வாடகை கணக்கிட்டால் மட்டையை இலவசமாக கொடுப்பது போன்றுள்ளது. இதனால் தோப்புகளில் டன் கணக்கில் தேங்காய் மட்டை குவிந்துள்ளது. தேங்காய் மட்டையால் கிடைக்கும் பணம் தேங்காய் பறிப்பது, சுமப்பது, உறிப்பது போன்ற செலவுகளை ஈடுகட்டியது. இதனால் தேங்காய்க்கு நல்ல விலை கிடைத்தது.

தற்போது மட்டை விலை சரிந்துள்ளதால் அனைத்து செலவுகளையும் தேங்காய் விலையில் அடக்கம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் தேங்காய் விலையும் குறைந்து விட்டது.இவ்வாறு தேங்காய் வியாபாரிகள் தெரிவித்தனர்.

தென்னைநார் உற்பத்தியாளர்கள் கூறுகையில், “கோவையில் தினமும் சுமார் ஆயிரம் டன் அளவுக்கு நார் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் சந்தை மதிப்பு சுமார் 1.5 கோடி ரூபாயாகும். மின்தடையால் 60 சதவீதம் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மின்வெட்டு சீரானால் தான் இந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்’ என்றனர்.

“சிரட்டை’ விலையும் சரிவுமின்வெட்டால் தேங்காய் சிரட்டையில் இருந்து கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், தேங்காய் சிரட்டை விலையும் சரிந்துள்ளது. கடந்த டிச., மாதம் வரையிலும் ஒரு டன் சிரட்டை எட்டாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது ஐந்தாயிரத்து 100 ரூபாய் மட்டுமே விலை கிடைக்கிறது. 90 ஆயிரம் தேங்காயில் இருந்து 10 டன் சிரட்டை கிடைக்கிறது. தேங்காய் சிரட்டைக்கு விலை குறைந்துள்ளதால், தேங்காய் ஒன்றுக்கு 25 பைசா வரையிலும் விலை குறைகிறது என்கிறார்கள் கொப்பரை உற்பத்தியாளர்கள்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *