இயற்கை விவசாய ஆர்வலர் களுக்கு வரப்பிரசாதமாக ‘கோகோ பீத்’ எனும் தென்னை நார் கழிவு உள்ளது. பராமரிப்பு செலவு குறைவு; லாபம் அதிகம் என்ற அடிப்படையில் பெரும் பாலான விவசாயிகள் கோகோ பீத் விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மதுரை வாடிப்பட்டி சர்வோதயா சங்க நிர்வாகி சுந்தரராஜன், ‘கோகோ பீத்’ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தென்னை நார் கேக்குகள் தயாரித்து விற்பனை செய்து சாதித்து வருகிறார்.அவர் கூறியதாவது:
தென்னை மட்டையிலிருந்து கிடைக்கும் கழிவு ‘கோகோ பீத்’ தயாரிப்புக்கு மூலப்பொருள். இக்கழிவை சலித்து பின் தண்ணீர் தெளித்து வெயிலில் உலரவைக்க வேண்டும். உலர்ந்த கழிவுகளை சேகரித்து ‘ஹைட்ராலிக்’ மெஷின் மூலம் தேவையான வடிவத்தில் கேக்குகளாக தயாரிக்கின்றனர்.
14 கிராம் அளவிலிருந்து 5 கிலோ அளவிலான சதுர வடிவ கட்டிகளாக தயாரிக்கின்றனர். இயற்கை விவசாயம் செய்வோருக்கு, ‘கோகோ பீத்’ வரப்பிரசாதம். விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் மார்க்கெட்டிங் செய்வது எளிது.
மண் போன்ற பொருட்களை விமானத்தில் கொண்டு செல்ல தடை உள்ளது. தென்னை கழிவில் தயாரிக்கும் கேக்குகளை கொண்டு செல்ல தடை இல்லை. இதனால் உள்நாடு, வெளிநாடுகளுக்கு ‘கோகோ பீத்’ அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
30 கிராம் அளவில் உள்ள கேக்கில் நீர் ஊற்றினால் அது நீரை உறிஞ்சி தக்க வைத்து கொள்ளும். நீர் உறிஞ்சிய ‘கோகோ பீத்’தை எடையிட்டால் 300 கிராம் அளவை காட்டும். இது வீடுகளின் மாடிதோட்டம் நர்சரி கார்டன், நாற்றுகளை உருவாக்க பயன்படும். மண்ணுக்கு பதிலாக ‘கோகோ பீத்’ மட்டும் போதும். தாவரங்கள் சத்தான முறையில் நன்கு வளரும். இரண்டு ஆண்டுகள் செடிகளை வளர்க்க பயன்படும்.
பின் தானாகவே மக்கி உரமாகிவிடும். அதற்கு பிறகு மகசூலை கணக்கிட்டால் சராசரியாக கிடைத்த மகசூலைவிட ஒரு மடங்கு கூடுதலாக கிடைக்கும். மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இந்த கேக்குகள் செடிவளர்க்க, புல்தரை அமைக்க அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். மண்ணை பயன்படுத்தி விவசாயம் செய்யும் போது நோய் தாக்குதல் இருக்கும். ‘கோகோ பீத்’ விவசாயத்தில் நோய் தாக்குதல் குறைவு என்பதால் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
தொழில் நுட்ப ஆலோசனைக்கு 09976917062 ல் ஹலோ சொல்லலாம்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்