இஸ்ரேல் தொழில்நுட்பத்தை பின்பற்றி, நிலக்கடலை செடிகளுக்கு, இலைவழி உரமிடுவதன் மூலம், பல மடங்கு கூடுதலாக விளைச்சல் கிடைக்கும் என, விவசாயி ஒருவர் கூறியுள்ளார்.
திருக்கழுக்குன்றம் அடுத்த இளையனார்குப்பத்தை சேர்ந்தவர் கேசவன்,63; விவசாயி. இவர், ஆறு ஏக்கரில் நிலக்கடலை பயிரிட்டுள்ளார்.
இப்பயிர்களுக்கு, இஸ்ரேல் நாட்டு விவசாயிகளை பின்பற்றி, இலை வழியாக நுண்ணூட்ட உரங்களை செலுத்தி, அதிக லாபம் பெற்று வருகிறார்.இது குறித்து அவர் கூறியதாவது:
- ஆறு ஏக்கர் நிலத்தில், இஸ்ரேல் நாட்டின் விவசாய தொழில் நுட்பத்தில், நிலக்கடலை பயிர் செய்து உள்ளேன். வேளாண் துறையில் தரமான விதைகளை பெற்றேன்.
- இயற்கை உரங்களுடன் யூரியா, பொட்டாசியத்தை 10:1 என்ற விகிதத்தில் கலந்து, ஒரு ஏக்கருக்கு, இரண்டு மாட்டு வண்டிகள் வீதம் நிலத்தில் கொட்டி, அதை டிராக்டர் கொண்டு உழுது, பின்னர் விதைகளை நடவு செய்ய வேண்டும்.
- நடவு செய்த ஏழாம் நாளில், விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். நிலத்தில் ஈரப்பதம் உள்ளதால், மேற்கொண்டு பத்து நாட்களுக்கு பராமரிப்பு எதுவும் தேவையில்லை.
- பதினெட்டாவது நாள் க்யுமிக் ஆசிட், பல்விக் ஆசிட், அமினோ ஆசிட் மற்றும் டி.ஏ.பி கரைசலை ஒன்றாக கரைத்து, மருந்து தெளிப்பான் கருவியின் மூலம், இலைவழி உரமாக அளிக்க வேண்டும்.
- இவ்வாறு செய்வதன் மூலம், செடிகளின் மீது ‹ரிய ஒளி விழும்போது, ஒளி சேர்க்கை நடந்து, செடிகளுக்கு உரங்கள் நேரடியாக சென்றடைகின்றன.
- இதனால், செடிகள் விரைவாக வளர்ச்சி அடைகின்றன. அதன்பின் முதல் களை எடுக்க வேண்டும்.
- அடுத்து, 40வது நாளில் கந்தக சத்து நிறைந்த, ஜிப்சம் உரத்தை ஏக்கருக்கு, 100 கிலோ என, செடிகளின் வேர்களில் அளித்து, மண் அணைக்க வேண்டும்.
- இதேமுறையில் இரண்டாவது இலைவழி உரம் அளிக்க வேண்டும்.
- பொதுவாக, கடலை செடிகளில், ஒரு செடிக்கு இரண்டு அல்லது மூன்று பூக்கள் மட்டுமே பூக்கும். மேற்கூறியதை போல் உரம் அளித்தால், செடிகள் இடையே அதிக அளவு மகரந்த சேர்க்கை நடந்து, செடிக்கு தலா பத்து பூக்கள் வரை பூக்கும். வேர்களில் உள்ள கடலைகள், ஒன்று போல் சீராக வளரும்.
- இதன் மூலம், ஒரு கிலோ கடலையில், 400 முதல் 500 கிராம் வரை எண்ணெய் கிடைக்கும்.
- மீண்டும், 60 வது நாளில், எப்போதும் போல் மூன்றாவது இலைவழி உரம் அளிக்க வேண்டும். நிலத்தின் ஈரத்தன்மைக்கேற்ப, மழைநீர் தெளிக்கும் முறையில் (தெளிப்பு நீர்) நீர் பாய்ச்ச வேண்டும்.
- இவ்வாறு செய்வதன் மூலம், அதிக அளவில் தண்ணீர் தேவைப்படாது.
- இலைவழி உரங்களை மாலை 3:00 மணியளவில் மட்டுமே அளிக்க வேண்டும். நிலக்கடலை பயிர்கள், 100 அல்லது 120 நாட்களில் அறுவடை செய்வர்.
- மேற்கூறிய முறையில் உரங்களை அளிப்பதன் மூலம், செடிக்கு குறைந்தபட்சம், 40 முதல் அதிகபட்சம் 120 காய்கள் வரை கிடைக்கும், 90 நாட்களில் அறுவடை செய்யலாம்
- தலா, 42 கிலோ எடை அளவில், ஏக்கருக்கு 35 முதல் 40 மூட்டைகள் வரை கிடைக்கும். மேற்கூறிய முறையில், நிலக்கடலை பயிர் செய்ய ஏக்கருக்கு, 18 ஆயிரம் ரூபாய் செலவாகும். களை எடுத்தல், மருந்து தெளிப்பான் என, அனைத்து செலவு போக, ஏக்கருக்கு, 35 முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
க்யுமிக் ஆசிட், பல்விக் ஆசிட், அமினோ ஆசிட் மற்றும் டி.ஏ.பி கரைசலை.எந்த அளவில் கலக்க வேண்டும்.