நெற்பயிரில் இலைக்கருகல் நோய்

நெற்பயிரில் பாக்டீரியா தாக்குதலால் இலைக் கருகல் நோயை கட்டுப்படுத்துவது குறித்து குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குனர் அப்பன்ராஜ் விடுத்துள்ள் செய்திக்குறிப்பு:

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் தற்போது சம்பா பயிரிடப்பட்டுள்ள பயிரில் சில இடங்களில் பாக்டீரியா தாக்கி இலைக் கருகல் நோயின் அறிகுறிகள் காணப்படுகின்றன.

நெற்பயிரின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காணப்படுவதால் விவசாயிகள் இதனை மஞ்சள் நோய் என தவறாகக் கருதுகின்றனர்.

அறிகுறிகள்

  • பாக்டீரியா தாக்கிய பயிரில் இலையின் நுனிப் பகுதியிலிருந்து மஞ்சள் நிற பட்டை வடிவ கோடு துவங்கி இலையின் அடி வரை பரவத் தொடங்குகிறது.
  • இது காலை நேரத்தில் இலையில் உள்ள மஞ்சள் நிற திட்டுகளில் பாக்டீரியாவின் திரவம் வடிவதைக் காணலாம்.
  • பாதிக்கப்பட்ட இலைகளை குறுக்கு வாட்டில் வெட்டி ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் நிரப்பி அதில் வைத்தால் பாக்டீரியாவிலிருந்து வரும் திரவம் காரணமாக தண்ணீர் கலங்குவதைக் காணலாம்.
  • நோயின் பாதிப்பு அதிகமானால் இலை முழுவதும் காய்ந்து விடும்.
  • தற்போது பனிப்பொழிவு, காற்றில் அதிக ஈரப்பதம் காரணமாக நோய் அதிகம் பரவ வாய்ப்புள்ளதால், தாக்குதல் அறிகுறிகள் தென்பட்ட உடனே மருந்து தெளித்தல் வேண்டும்.

கட்டுப்பாடு

  • ஒரு ஏக்கருக்கு காப்பர் ஆக்சி குளோரைடு 500 கிராம், ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைக்ளின் கலவை மருந்து 120 கிராம் கலந்து தெளிக்க வேண்டும், அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு 200 கிராம் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • நோய் ஆரம்ப நிலையில் இருந்தால் இயற்கை நோய் விரட்டியான பசுஞ்சாண கரைசலை தெளித்து கட்டுப்படுத்தலாம்.
  • மேலும் பயிர் நன்கு நோயிலிருந்து விடுபட்ட பின்னரே தழைச் சத்தினை இடவேண்டும்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *