முள்ளங்கி பயிரிடும் முறை

மலைப் பகுதிகளுக்கு

இரகங்கள் : நீலகிரி சிகப்பு, ஒயிட்ஐசிக்கில், ஜப்பானிஸ் (நீர்)

சமவெளிப் பகுதிகளுக்கு

கோ 1, பூசாராஷ்மி, பூசாதேசி, ஜப்பானிஸ் ஒயிட், அர்கா நிஷாத்.

மண் மற்றும் தட்பவெப்பநிலை : அனைத்து வகையான மண்ணிலும் முள்ளங்கியை சாகுபடி செய்யலாம். அதிக விளைச்சல் பெற இயற்கையான எரு மிகுந்த இலேசான மணல் சார்ந்த கார அமில அளவு 5.5-6.8 கொண்ட வண்டல் நிலம் மிகவும் உகந்தது.

பருவம் : முள்ளங்கியை வெப்பமண்டல சமவெளிப் பகுதி வெப்பம் குறைந்த குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் சாகுபடி செய்யலாம். மலைப் பிரதேசங்களில் கோடை மற்றும் மழைக்காலங்களில் பயிர் செய்யலாம். அதாவது மலைப் பகுதிகளுக்கு மார்ச் மாதம், சமவெளிப் பகுதிகளுக்கு பயிர் செப்டம்பர் மாதங்களில் பயிர் செய்யலாம்.

விதையும் விதைப்பும்

விதை அளவு : எக்டருக்கு 10 கிலோ

நிலம் தயாரித்தல் :

நிலத்தை நன்கு உழுது தேவையான அளவுகளில் பாத்திகள் அமைத்து அவற்றில் வரிசைக்கு வரிசை 30 செ.மீ இடைவெளியிலும், செடிக்குச் செடி 10 செ.மீ இடைவெளியிலும் 1.25 செ.மீ ஆழத்திலும் விதைகளை விதைக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

நன்கு மக்கிய தொழு எரு எக்டருக்கு 25 டன் கடைசி உழவின்போது இட்டு மண்ணுடன் நன்கு கலக்கவேண்டும். விதைப்பதற்கு முன் அடியுரமாக 25 கிலோ தழைச்சத்து 100 கிலோ மணிச்சத்து மற்றும் 50 கிலோ சாம்பல் சத்து இடவேண்டும். விதைத்த 30 நாட்கள் கழித்து 25 கிலோ தழைச்சத்து மேலுரமாக இடவேண்டும்.

நீர்ப்பாசனம் விதைப்பதற்கு முன்பும், பின்பு நன்கு முளைப்பதற்கும் தண்ணீர் கட்டவேண்டும். அதன் பின் மண்ணில் ஈரம் காய்ந்துவிடாமல் தேவைப்படும் பொழுது நீர் பாய்ச்சவேண்டும்.

இடவேண்டிய சத்துக்கள்(கிலோவில்)

அடியுரம்: தழை-25kg மணி-100kg சாம்பல்-50kg 10:26:26- 193kg யூரியா -13kg சூப்பர் பாஸ்பேட் -313kg

மேலுரம்: தழை -25kg மணி-0kg சாம்பல்-0kg 10:26:26-0 யூரியா-55kg சூப்பர் பாஸ்பேட் -0kg

களை கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

விதைத்த 15 நாட்களுக்குப் பிறகு ஒரு கைக்ளை எடுக்கவேண்டும். பிறகு வேர்களின் வளர்ச்சிக்கு, செடிகள் முளைத்த 15-20 நாட்களில் அதிக  நெருக்கமாக உள்ள செடிகளைக் கலைத்துவிடவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 0.01 சதவீதம் 10-15 நாட்கள் இடைவெளியில் 2-3 முறை தெளிக்கவேண்டும்.

வெள்ளைத்துருநோய் : இந்நோய் வராமல் தடுக்க விதைகளை திராம் மருந்துடன் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்து விதைக்கவேண்டும்.

வேரழுகல் நோய் : நோய் பாதிக்கப்பட்ட கிழங்கின் மைய்ப் பகுதியில் உள்ள திசுக்கள் அழுகுவதால் கிழங்கில் குழிகள் தோன்றுகின்றன. இதனால் செடிகள் வாடிவிடும். விதை உற்பத்திக்காக கிழங்கை நடும்போது இந்நோயின் தாக்குதல் அதிகமாக இருக்கும். எனவே கிழங்கை நடும்முன் அவற்றை அகரிமைசின் என்ற உயிர் எதிர்க்கொல்லியை ஒரு லிட்டருக்கு 100 மில்லி கிராம் என்ற விகிதத்தில் கலந்து நீரில் நனைத்து நடவேண்டும்.

அறுவடை

விதைத்த 45 நாட்களில் கிழங்குகள் அறுவடைக்கத் தயாராகிவிடும். அறுவடைக்குமுன் இலேசாகத் தண்ணீர் பாய்ச்சவேண்டும். களைக்கொத்திகள் மூலம் மண்ணைக் கொத்தி செடிகளை வேருடன் பிடுங்கி எடுக்கவேண்டும்.

மகசூல் : எக்டருக்கு 45-60 நாட்களில் 20-30 டன்கள்.

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலைகழகம


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “முள்ளங்கி பயிரிடும் முறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *