நெற்பயிரில் குருத்துப்பூச்சி மேலாண்மை

சேத அறிகுறிகள்:

  • பெரும்பாலான இடங்களில் இப்பூச்சியின் சேதம் நாற்றங்காலிலேயே துவங்குகின்றது.
  • இப்பூச்சி நடவு செய்த இளம் பயிரிலும், கதிர் பிடிக்கும் பருவத்திலும் சேதங்களை உண்டாக்குகின்றது.
  • அந்துப்பூச்சிகள் இலைகளின் மேல் பகுதியில் முட்டைகளைக் குவியலாக இடும்.
  • முட்டைகளில் இருந்து வெளிவரும் புழுக்கள் இளம்பயிரின் தண்டில் துளையிட்டு உட்சென்று அதன் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு உட்பகுதியைக் கடித்து உண்பதால் இளம்பயிரின் நடுக்குருத்து வாடிக் காய்ந்து விடும். சாதாரணமாக ஒரு தூருக்கு ஒரு புழு மட்டும் இருக்கும். இவ்வாறு தாக்கப்பட்ட பயிரின் வளர்ச்சி குன்றி தூர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறையும்.
  • தொடர்ந்து புழு நெற்பயிரை கதிர் பிடிக்கும் பருவத்தில் தாக்கும்போது வெளிவரும் கதிரில் மணிகள் பால் பிடிக்காமல் சாவியாகி வெண் கதிர்களாக மாறுகின்றன. இதனால் மகசூல் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
  • இவ்வாறு வாடிய நடுக்குருத்தையும், வெண் கதிரையும் தூரிலிருந்து எளிதில் எடுத்து விடலாம்.
  • பாதிக்கப்பட்ட தண்டின் அடிப் பகுதியில் துவாரமும், புழுவின் எச்சமும் காணப்படும்.
  • இப்புழுக்கள் பயிரின் தூர்கட்டும் பருவத்தில் நடுக்குருத்து வாடல் மற்றும் கதிர்வரும் தருணத்தில் வெண்கதிர் போன்ற சேத அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன.

மேலாண்மை முறைகள்:

  • அறுவடை செய்தபின் தாள்களை மடக்கி உழுவதன் மூலம் புழுக்களையும், கூட்டுப்புழுக்களையும் அழிக்கலாம்.
  • நடவு செய்யும் பொழுது வாடிய நடுக்குருத்து உடைய நாற்றுகளைத் தவிர்க்க வேண்டும்.
  • சிபாரிசு செய்யப்பட்ட அளவிற்கு மேல் தழைச்சத்து உரங்கள் இடுவது கூடாது.
  • ஏனைய பூச்சிகள் போன்று இப்பூச்சியும் இரவு நேரங்களில் விளக்குப் பொறிகளுக்கு ஈர்க்கப்படுவதால் அந்துப் பூச்சிகளை எளிதில் அழிக்கலாம்.மேலும் விளக்குப் பொறி மூலம் இப்பூச்சியின் எண்ணிக்கை மற்றும் நடமாட்டத்தையும் கணக்கிடலாம்.
  • விளக்குப் பொறியின் அடியில் ஒரு தட்டில் மண்ணெண்ணெய் கலந்த நீர் வைத்தால் வெளிச்சத்திற்கு கவரப்படும் அந்துப்பூச்சிகள் நீரின்மேல் விழுந்து அழிகின்றன.
  • நாற்றங்காலுக்கு அருகில் விளக்குப்பொறியை வைக்கக்கூடாது.
  • ஐந்து ஏக்கருக்கு ஒரு விளக்குப்பொறி போதுமானது.
  • இப்பூச்சியின் தாக்குதலைத் தாங்கி வளரக் கூடிய ஐ.ஆர்.8, 20, 26, 36, 40 மற்றும் 56 போன்ற நெல் ரகங்களைப் பயிரிடலாம்.
  • எக்டருக்கு டிரைகோகிரம்மா ஜப்பானிக்கம் ஒட்டுண்ணியை 5 சி.சி. என்ற அளவில் நாற்று நட்ட பிறகு 15 நாட்கள் முதல் வாரம் ஒரு முறை நான்கு வாரத்திற்கு வயலில் கட்டி குருத்துப் பூச்சியின் முட்டைகளை அழிக்கலாம்.
  • பூச்சி தாக்குதல் அல்லது முட்டை குவியல்கள் பொருளாதார சேத நிலையைத் தாண்டும்போது ஒரு ஏக்கருக்கு மோனோ குரோட்டோபாஸ் 400 மி.லி. அல்லது புரொபெனோபாஸ் 400 மி.லி. என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “நெற்பயிரில் குருத்துப்பூச்சி மேலாண்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *