களர் நிலத்தை சரி செய்வது எப்படி

திருநெல்வேலி சங்கரன்கோவில் வட்டார விவசாயிகள் மண்ணின் தன்மைக்கு ஏற்ப சீர்திருத்தம் செய்து பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெற முடியும் என சங்கரன் கோவில் வட்டார வேளாண் உதவி இயக்குநர் ஜெயசெல்வின் இன்பராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது;

 

  • சங்கரன்கோவில் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்படும் அனைத்து வகையான பயிர்களிலும் மண்ணின் தன்மை அறிந்து குறிப்பாக களர் நிலமாக இருந்தால் அதனை சீர்திருத்தம் செய்து பயிர் சாகுபடி செய்தால் மட்டுமே அதிக மகசூல் பெற முடியும்.
  • களர் மண்ணில் கார அமிலநிலை 8.5 க்கு அதிகமாகவும், சோடிய அயனிகளின் படிமானம் 15 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கும்.
  • மழை அல்லது நீர்பாசனத்தின் மூலம் மண்ணின் கட்டமைப்பு சிதைந்து பிரிந்து களித்துகள்கள் மண்ணில் உள்ள துவாரங்களை அடைக்கின்றன.
  • இதனால் நீர்கடத்தும் திறன் கறைந்து நீர்தேக்கம் ஏற்பட்டு, வேர்களின் சுவாசம் தடைபடுவதால் பயிர் வளர்ச்சி குறைவாக காணப்படும்.
  • கோடை காலத்தில் மண் இறுகியும், வெண்படிவம் போன்றும், மழை நேரங்களில் மண் குழைந்தும் காணப்படும்.
  • சோடியம் மற்றும் பை கார்பனேட் உப்புகள் அதிகம் இருப்பதாலும் தழை, மணி, சாம்பல், கால்சியம், மக்னீசியம், துத்தநாக சத்துக்களை பயிர் எடுக்க இயலாது.
  • எனவே இதை சீர்திருத்தம் செய்திட, சரிவுக்கேற்ப சமன் செய்து சிறு, சிறு பகுதிகளாக பிரித்து முதன்மை மற்றும் கிளை வடிகால்கள் அமைத்து 4 அங்குல உயரத்திற்கு நீரை தேக்கி நன்கு ஆழ உழவு செய்து அதில் பரிந்துரைக்கப்படும் அளவில் ஜிப்சம் உப்பை இட்டு கலக்க வேண்டும். நீர் வடியவிட்டு, பின் மீண்டும் நீர் கட்ட வேண்டும். இவ்வாறு நான்கு முறை செய்ய வேண்டும்.
  • கிளிரிசிடியா, ஆவாரம், வேம்பு போன்ற பசுந்தழைகள் இடலாம் அல்லது தக்கை பூண்டு, அகத்தி போன்ற பசுந்தாள் உரப் பயிர்களை வளர்த்து 40 நாட்களில் மடக்கி உழவு செய்யலாம்.
  • தழைச்சத்து உரங்களை வேப்பம் புண்ணாக்குடன் கலந்து நான்கு முறை மேலுரமாக பிரித்து இட வேண்டும். இந்த முறைக்கு நெல், ராகி போன்ற பயிர்களை தேர்வு செய்யலாம். நெல், கோ 43, திருச்சி 1 போன்ற ரகங்களை நடவு செய்யலாம்.
  • எனவே விவசாயிகள் மண்ணை ஆய்வு செய்து களர் தன்மை இருப்பின் மேற்கண்ட சீர்திருத்த முறைகளை மேற்கொண்டால் அதிக மகசூல் பெற முடியும். இவ்வாறு சங்கரன்கோவில் வட்டார வேளாண் உதவி இயக்குநர் ஜெய செல்வின் இன்பராஜ் அறிக்கையில் கூறியுள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “களர் நிலத்தை சரி செய்வது எப்படி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *