வாழையில் நூற்புழு கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

வாழைகளில் நூற்புழுக்கள் மற்றும் நோய்கள் அதிகளவு சேதம் விளைவிக்கின்றன. நூற்புழுக்களால் வாழையில் 10 முதல் 50 சதம் வரை மகசூல் குறைப்பு ஏற்படுகின்றன.

இந்த நோய்களின் அறிகுறிகள் பற்றியும், அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றியும் பையூர் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலைய உதவி பேராசியர்கள் பூர்ணிமா மற்றும் கி.மணி ஆகியோர் கூறியது:

  • வாழையைத் தாக்கும் நூற்புழுக்களில், வேர் அழுகல் நூற்புழு, வேரைக் குடையும் நூற்புழு, சுருள்வடிவ நூற்புழு, வேர் முடிச்சு நூற்புழு ஆகிய முக்கியமானவையாகும்.
  • 3000 புழுக்கள் ஒரு கன்றுக்கு என்ற அளவில் 50 சதம் பாதிப்பு உண்டாக்குகிறது.
  • இப்புழுக்களின் தாக்குதலால் மரங்கள் வளர்ச்சி குன்றியும், இலைகளின் எண்ணிக்கை குறைந்தும் மஞ்சள் நிறமாகியும் காணப்படும்.
  • பூ பூத்தல் மற்றும் குலை தள்ளுவதில் தாமதம் காணப்படும். பழங்களின் எண்ணிக்கை குறைந்து அதன் அளவு சிறியதாகி விடுகிறது.
  • வேர்கள் கருமை அல்லது சிவப்பு நிற அழுகலோடும், வேர் முடிச்சுக்களோடும் காணப்படும்.
  • வேர்கள் அழுகிவிடுவதால் மரங்கள் நிலத்தில் வேர் ஊன்றி நிற்க முடியாமல் காற்றில் சாய்ந்து விடும். இத்தகைய சேதத்தினால் இறுதியில் வாழையின் மகசூல் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

கட்டுப்படுத்தும் வழிகள்:

  • நூற்புழு மற்றும் நோய் பாதிக்கப்பட்ட கன்றுகளை நடுவதால் வாழையில் நூற்புழுக்கள் மற்றும நோய் பரவுகின்றன.
  • இதை தடுப்பதற்கு, கிழங்குகளில் உள்ள நூற்புழுக்களை அகற்றுவதே மிக முக்கியம்.
  • நூர்புழுக்க்ள் உள்ள கிழங்குகள் கருமை அல்லது சிவப்பு நிற அழுகலோடு காணப்படும். இதில் பல ஆயிரக்கணக்கான நூற்புழுக்கள் தங்கியிருக்கும்.
  • இந்த அழுகள் சுமார் 2 முதல் 3 செ.மீ ஆழம் வரை கிழங்குகளில் பரவியிருக்கும், இந்த அழுகிய பகுதிகளை சீவி, கிழங்குகள் வெள்ளை நிறமாக தோன்றும்படி செய்வதன் மூலம் பெரும்பாலான நூற்புழுக்கள் அகற்ற முடியும்.
  • சீவிய கிழங்குகள் களிமண் குழம்பில் (மண் 1, நீர் 3) அல்லது சாணி கரைசலில் நனைத்து புயூரடான் கருணை மருந்தினை 40 கிராம் அளவு தூவி நட வேண்டும்.இம்முறை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கண்டுபிடித்ததாகும். இதன் சிறப்பு முத்தடிப்பு, அதாவது நூற்புழு, கூன்வண்டு, அசுவினி இழை மூன்றிலிருந்தும் 3 முதல் 4 மாதம் வாழையைக் காப்பாற்றலாம்.
  • எஞ்சிய நூற்புழுக்களை அழிக்க மானோகுரோட்டோபாஸ் 36 சதம் பூச்சி கொல்லி கரைசலில் (1.5மி,லி 1லிட்டர் நீர்) நனைத்து நடலாம்.
  • தொடர்ந்து வாழையை பயிரிடாமல், வாழைக்குப்பின் நெல் பயிரிடுவதன் மூலம் நூற்புழுக்களை தவிர்க்கலாம்.
  • 45 நாள்களில் பசுந்தாள் பயிரான சணப்பை பயிரை ஊடுபயிராக இட்டு பூப்பதற்கு முன் வேருடன் பிடுங்கி மண்ணில் இட்டு கலக்காலம்.
  • வாழை நடும் போது கன்றுக்கு சுமார் 250 கிராம் வேப்பம்புண்ணாக்கை இடுவதன் மூலம் மண்ணின் தரத்தை உயர்த்துடன் நூற்புழுவையும் கட்டுப்படுத்த முடியும்.

இந்த வழிமுறைகளை பயன்படுத்தி வாழையை நோயிலிருந்து தவிர்த்து நல்ல மகசூலை பெறலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *