வெண்டை சாகுபடி: 45 நாளில் மகசூல்!

தொழில்நுட்ப முறைகளை விவசாயிகள் முழுமையாகக் கடைப்பிடித்து, 45 நாளில் மகசூல் தரும் வெண்டை சாகுபடி செய்து லாபம் ஈட்டலாம் என, வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.

Courtesy: Dinamani
Courtesy: Dinamani

 ரகங்கள்:

கோ 2, எம்டியு 1, அர்கா அனாமிகா, அர்கா அபஹாப், பார்பானி கிராந்தி, கோ 3, பூசா சவானி, வர்சா உப்கார்.
 மண் – தட்பவெப்பநிலை:

வெண்டை வெப்பம் விரும்பும் பயிர். நீண்ட நேர வெப்ப நாள் இதற்குத் தேவை. பனி மூட்டத்தால் இதன் வளர்ச்சி பாதிக்கப்படும். குளிர் காலத்திலும், குளிர் பிரதேசங்களிலும் வெண்டை நல்ல முறையில் வளராது. வெண்டையை எல்லா வகை மண்ணிலும் பயிரிடலாம். நல்ல உரச்சத்துள்ள மண்ணில் மிகவும் நன்றாக வளரும். கார அமில நிலையை ஓரளவு தாங்கி வளரும்.
விதையளவு: ஹெக்டேருக்கு 7.5 கிலோ போதும்.
 நிலம் தயாரித்தல்:

3 அல்லது 4 முறை நிலத்தை உழவேண்டும். கடைசி உழவுக்கு முன் 25 டன் தொழு உரம் இட்டு 45 செமீ இடைவெளி விட்டு வரிப்பாத்திகள் (பார்சால்) அமைக்கவேண்டும்.
 விதை நேர்த்தி:

விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு ஒரு கிலோவுக்கு 2 கிராம் கேப்டான் அல்லது திராம் கொண்டு நேர்த்தி செய்யவேண்டும். பின்பு விதைகளை 400 கிராம் அசோஸ்பைரில்லம் கலவையுடன் கலந்து விதைக்கவேண்டும். நிழலில் ஆறவைத்த அரிசிக் கஞ்சியுடன் அசோஸ்பைரில்லம் தூளை நன்கு கலக்கவேண்டும். பிறகு இதில் வெண்டை விதையை நன்கு கலந்து அரை மணி நேரம் உலர வைக்கவேண்டும். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை வரியில் 30 செமீ இடைவெளியில் 2 விதைகள் என்ற விகிதத்தில் 2 செமீ ஆழத்தில் ஊன்றவேண்டும். 10 நாள்களுக்கு பின் 2 செடிகளை விட்டு மீதம் உள்ளவற்றை களையவேண்டும்.
 நீர் நிர்வாகம்:

நட்டவுடன் நீர்ப் பாய்ச்சவேண்டும். பிறகு வாரம் ஒருமுறை நீர்ப் பாய்ச்சவேண்டும்.
 உரமிடுதல்:

அடியுரமாக 20 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 30 கிலோ சாம்பல் சத்து வரிகளில் ஒரு பக்கத்தில் இட்டு மண்ணுடன் நன்கு கலந்துவிடவேண்டும். நட்ட 30 நாள் கழித்து மேலுரமாக 20 கிலோ தழைச்சத்து இடவேண்டும்.

2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியம் நுண்ணுயிர் கலவையை 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து நேரடியாக மண்ணில் இட்டு, தழைச்சத்தின் தேவையைக் குறைத்துக் கொள்ளலாம். மேல் உரம் இட்டு மண் அணைத்து தண்ணீர் கட்டுவது மிகவும் அவசியம்.
 இலைவழி ஊட்டம்:

ஒரு சத யூரியா கரைசலை விதைத்த 30 நாள்கள் கழித்து 10 நாள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவேண்டும். மீயூரேட் ஆப் பொட்டாஷ் 17 கிராம் ஒரு லிட்டர் நீரில் கரைத்து விதைத்த 30,45 மற்றும் 60வது நாளில் தெளிப்பதன் மூலம், விளைச்சலை அதிகப்படுத்தலாம்.
 களை நிர்வாகம்:

களைகள் முளைக்கும் முன் விதைத்த 3ஆம் நாள் ஹெக்டேருக்கு ப்ளுக்குளோரலின் 2 லிட்டர் தெளித்து உடன் நீர்ப் பாய்ச்சவேண்டும். பிறகு விதைத்த 30ஆம் நாள் கைக்களை எடுக்கவேண்டும்.
 காய்த்துளைப்பான்:

வெண்டையில் காய்த்துளைப்பான் தாக்குதல் அதிகம் காணப்படும். இதைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறி ஹெக்டேருக்கு 12 எண்ணிக்கையில் வைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட காய்களை சேகரித்து அழிக்கவேண்டும்.

ஹெக்டேருக்கு முட்டை ஒட்டுண்ணியான ட்ரைக்கோகிரம்மா ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையில் விடவேண்டும். கார்பரில் நனையும் தூள் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும் இவற்றுடன் ஒரு லிட்டர் நீர் கலந்து தெளிக்கவேண்டும். அல்லது வேப்பம் கொட்டைப் பொடி 50 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும்.
 சாம்பல் நிற வண்டு:

இதைக் கட்டுப்படுத்த கார்போபியூரான் 3 ஜி. குருணை மருந்து ஹெக்டருக்கு 12 கிலோ இடவேண்டும். நூற்புழு தாக்குதலைத் தடுக்க ஹெக்டருக்கு 400 கிலோ வேப்பம் பிண்ணாக்கை விதைக்கும்போது, உரத்துடன் கலந்து இடவேண்டும் அல்லது ஹெக்டேருக்கு கார்போபியூரான் 3ஜி குருணை மருந்து ஒரு கிலோ அல்லது போரேட் 10ஜி குருணை மருந்து ஒரு கிலோ இடவேண்டும்.
 அசுவினிப்பூச்சி:

இதைக் கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 25 இசி 2 மில்லி அல்லது டெமெத்தோயேட் 2 மில்லி மருந்து இவற்றுடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும்.
 மஞ்சள் நரம்புத் தேமல் நோய்:

இது மிகவும் அதிக அளவில் வெண்டையைத் தாக்கும் நச்சுயிரி நோய். இந்நோய் வெள்ளை ஈ என்ற பூச்சியால் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரப்பப்படுகிறது. இப்பூச்சியை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு 2 மில்லி வேப்பெண்ணெய் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கவேண்டும். கோடைக்காலத்தில் இந்நோய் அதிக அளவில் வெண்டையைத் தாக்கும். இப்பருவத்தில் நோயை எதிர்த்து வளரும் பார்பானி கிராந்தி போன்ற ரகங்களைப் பயிரிடுவது நல்லது. மேலும் இந்நோயைத் தாங்கி வளரும் ரகங்களான பார்பானி கிராந்தி, அர்கா அனாமிகா, அர்கா அபஹாப் போன்றவற்றை சாகுபடி செய்யவேண்டும்.
 சாம்பல் நோய்:

இந்நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் நனையும் கந்தகத்தூள் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். பிறகு 15 நாள் இடைவெளியில் மறுபடியும் ஒரு முறை தெளிக்கவேண்டும்.
 அறுவடை:

நட்ட 45 நாள்களில் காய்கள் அறுவடைக்கு வரும். காய்கள் முற்றும் முன் அறுவடை செய்யவேண்டும். 2 நாள்களுக்கு ஒருமுறை அறுவடை செய்வது அவசியம்.
 மகசூல்:

ஹெக்டருக்கு 90 முதல் 100 நாள்களில் 12 முதல் 15 டன் காய்கள் கிடைக்கும்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “வெண்டை சாகுபடி: 45 நாளில் மகசூல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *