இயற்கை வழி வெள்ளரி விவசாயம்

‘சாம்பார் வெள்ளரி’ என்றாலே ரசாயன உரம், பூச்சிக்கொல் மருந்துகள் இல்லாமல் சாகுபடி செய்ய முடியாது என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது. சாம்பார் வெள்ளரிதான் என்றில்லை, மற்ற ரக வெள்ளரி என்றாலும் கூட ரசாயன முறைகளில் சாகுபடி செய்யப்படுவதுதான் அதிகமாக இருக்கிறது.

இதற்கு நடுவே.. ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி, பூண்டுக் கரைசல் என்று இயற்கை இடுபொருட்களைத் தெளித்து, வெள்ளரி சாகுபடி செய்து கொண்டிருக்கிறார் நாகப்பட்டினம் மாவட்டம், கிராமத்திமேடு விவசாயி ஆறுமுகம்.

கடந்த மூன்று ஆண்டுகளாக இயற்கை விவசாய முறையில் வெள்ளரி பயிரிட்டு வரும் ஆறுமுகத்தின் சாகுபடி தொழில்நுட்பங்கள் இதோ..

  • வெள்ளரி சாகுபடி செய்வதற்கு தை பட்டம்தான் சிறந்தது.
  • நல்ல வடிகால் வசதியோடு இருக்கின்ற எல்லா வகை நிலங்களும் இதற்கு ஏற்றது. மணல் மற்றும் உப்புத் தன்மை இருக்கின்ற மண் வகைகளைத் தவிர்த்துவிட வேண்டும்.
  • விதைகளை நடவு செய்வதற்கு, நிலத்தை குறுக்கு – நெடுக்காக நான்கு முதல் ஐந்து உழவு செய்ய வேண்டும்.
  • பின்பு, எட்டுக்கு எட்டு அடி இடைவெளி கொடுத்து, நீளம், அகலம், ஆழம் அனைத்தும் ஒரு அடி இருக்கும் வகையில் குழி எடுக்க வேண்டும்.
  • ஏக்கருக்கு 550 முதல் 600 குழிகள் வரை கிடைக்கும். ஒவ்வொரு குழிக்கும் அரைக் கூடை எருவைப் போட்டு, மேல்மண் கொண்டு மூடிவிட வேண்டும்.
  • ஒரு ஏக்கர் நிலத்திற்கு 250 கிராம் வெள்ளரி விதைகள் தேவைப்படும்.
  • வடித்தக் கஞ்சியில் 100 கிராம் அசோஸ்பைரில்லம், 100 கிராம் டிரைக்கோடர்மா விரிடி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.விதைகளை இந்தக் கரைசலில் விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
  • பிறகு, அரைமணி நேரம் நிழலில் உலர்த்தி, குழிக்கு ஏழு விதைகள் வீதம் நடவு செய்ய வேண்டும்.
  • எலிகளாலும், செடி அழுகல் காரணமாகவும் ஒன்றிரண்டு விதைகள் பழுதானாலும், சராசரியாக குழிக்கு ஐந்து செடிகள் நன்கு முளைத்து வரும்.
  • நடவு செய்த மூன்றாம் நாளில் முளைப்பு எடுத்து விடும். பத்து நாட்கள் வரை காலை நேரத்தில் தினம் ஒரு முறை தண்ணீர் தெளிக்க வேண்டும்.
  • 15-ம் நாளில் இருந்து 20-ம் நாளில் கொடியை ஒதுக்கிவிட்டு, மீதி இருக்கும் இடத்தை மண் வெட்டியால் கொத்தி, களைகளை நீக்க வேண்டும்.
  • பின் கொடியைச் சுற்றி அரை அடி ஆழத்திற்கு குழி எடுத்து, அரை அன்னக் கூடை வீதம் எரு வைத்து, மண்ணை இட்டு குழியை மூடிவிட வேண்டும்.
  • மண்ணின் தண்ணீர் பிடிப்புத் தன்மைக்கு ஏற்ப, நான்கு முதல் ஏழு நாட்களுக்கு ஒரு தடவை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
  • கூடவே, ஏக்கருக்கு 10 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலையும் தண்ணீரோடு கலந்துவிட மறக்கக் கூடாது.
  • 30 – ம் நாளில் இருந்து தொடர்ந்து பத்து நாள் இடைவெளியில் பத்து லிட்டர் டேங்குக்கு அரை லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்து தெளித்தால், செடிகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
  • 20 – ம் நாளில் இருந்து செடியில் பச்சைப் புழுவின் தாக்குதல் அதிகமாக இருக்கும்.இதற்கு ஒரு வாரம் பூண்டுக் கரைசல், அடுத்த வாரம் மூலிகைப் பூச்சிவிரட்டி என்று மாற்றி மாற்றி தெளித்து வரவேண்டும்.பத்து லிட்டர் டேங்குக்கு அரை லிட்டர் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
  • 25 – ம் நாளில் பூ எடுக்கும். 35-ம் நாளில் இருந்து காய் பறிப்புக்கு வந்துவிடும்.
  • தொடர்ந்து 60 நாட்களுக்கு காய் பறிப்பு செய்யலாம். ஆரம்பத்தில் தினம் ஒரு முறை காய் பறிப்பு செய்ய வேண்டும்.
  • இல்லாவிட்டால், காய் முற்றி, விலை குறைந்து விடும். தினமும் மூன்று முதல் நான்கு கூடை வெள்ளரிப் பிஞ்சுகள் கிடைக்கும். கூடைக்கு 20 கிலோ முதல் 25 கிலொ அளவுக்கு வெள்ளரி இருக்கும்.
  • சராசரியாக நாள் ஒன்றக்கு மூன்று கூடை வெள்ளரி வீதம் 60 நாட்களுக்கு குறைந்தபட்சம் 180 கூடை கிடைக்கும். (3,600 கிலோ). கூடை 200 ரூபாய் வீதம் மொத்தம் 36 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
  • செலவு போக, ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் கையில் நிற்கும்.

தொடர்புக்கு ஆறுமுகம், அலைபேசி (செல்போன்) : 09965322418.

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பலகலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *