கோடையில் பிஞ்சு வெள்ளரி சாகுபடி

கோடைப்பட்டத்தில் நல்ல வருவாயினைத் தருவது பிஞ்சு வெள்ளரி சாகுபடி. இந்தப்பயிர் சிறு விவசாயிகளுக்கு மிகவும் ஏற்றது. இவர்கள் சாகுபடியை அரை ஏக்கர் அல்லது ஒரு ஏக்கர்தான் செய்ய இயலும். கிணற்றுப்பாசனம் இருந்தாலும் அதில் மின்சார மோட்டார் பம்ப் செட் இருக்காது. டீசல் இன்ஜின் கொண்டு பாசனம் செய்யும் வசதிதான் இருக்கும்.
பிஞ்சு வெள்ளரி சாகுபடி என்பது வெள்ளரிக்காய் பிஞ்சாக இருக்கும்போதே அறுவடை செய்து விற்று பயன்பெறும் தொழிலாகும். இதன் வயது 90 நாட்கள். பிஞ்சினை அப்படியே விட்டால் அது மிகப்பெரிய காயாகி அதிக விதைகளைக் கொண்டிருக்கும். இதனை விற்று லாபம் எடுக்க முடியாது.
மிகச்சிறிய பிஞ்சுகள், நீளம் ஆறு அங்குலத்திற்குள் இருக்கும். இவைகள் மிகச்சுவை கொண்டதாக இருக்கும். ஒரு விதைகூட காயில் இருக்காது. இத்தகைய காய்களை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கிலோ ரூ.8 கொடுத்து வாங்கி பின்னால் தாங்கள் காய்களை கிலோ ரூ.15 வரை விற்கின்றனர்.
இரண்டாம் தரக் காய்கள் 9 அங்குலம் நீளம் வரை இருக்கும். இதன் விலை கிலோ ரூ.10 வரை இருக்கும்.
பெரிய பிஞ்சுகள் 10-11 அங்குலம் இருக்கும். இதன் விலை கிலோ ரூ.5 வரை இருக்கும்.

Courtesy: Dinamalar

முதல் இரண்டு தரம் கொண்ட காய்கள் சிரமம் இன்றி விற்பனையாகிவிடும். மூன்றாம் தரக்காயில் விற்பனை சில சமயம் பிரச்னையாக இருப்பதுண்டு. பிஞ்சு வெள்ளரி சென்னையைச் சுற்றி சிறப்பாக சாகுபடி செய்யப்படுகிறது. மார்க்கெட்டில் இருந்து வியாபாரிகள், வண்டியில் கிராமத்திலுள்ள விவசாயிகள் நிலங்களுக்கு நேரில் சென்று பிஞ்சு வெள்ளரியை விலைக்கு வாங்குகின்றனர்.

விவசாயிகளும் காய்களை மார்க்கெட்டிற்கு எடுத்துச் சென்று விற்கின்றனர்.

சாகுபடி விவரங்கள்:

ஒரு ஏக்கரில் சாகுபடி தேவையான விதையை தயார் செய்து கொள்கிறார். ஏக்கருக்கு 150 கிராம் விதையை உபயோகப்படுத்துவார். விதை வாங்கும் இடத்தில் வெள்ளை குட்டைக்காய் விதை வேண்டும் என்று கேட்டு வாங்க வேண்டும்.

விதை தி.நகரில் பூச்சி மருந்து விற்கப்படும் கடைகளில் கிடைக்கும். விவசாயி தனது நிலத்தை டிராக்டர் கொண்டு ஒரு உழவு செய்துவிட்டு நிலத்திற்கு மூன்று டிரெய்லர் லோடு மக்கிய தொழு உரத்தை இட்டு அதனை வயல் பூராவும் மண்ணோடு சீராக கலக்க உழுதுகொள்கிறார். பிறகு ஏக்கரில் 600 குழிகள் போட்டுக்கொள்கிறார். நிலத்திற்கு அடியுரமாக ஒன்று – ஒன்றரை மூடை பேக்ட் அம்மோபாஸ் உரத்தைப் போட்டு மண்ணோடு கலக்குகிறார். நிலத்திலுள்ள குழிகளில் இயற்கை உரமும் ரசாயன உரமும் உள்ளது.

உடனே குழிக்கு மூன்று விதைகள் விதைத்து தண்ணீர் ஊற்றுகிறார். நிலத்திலுள்ள குழிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விடுகிறார். இவ்வாறு 15 நாட்கள் செய்துவிட்டு பிறகு நிலத்தில் கால்வாய் போட்டு பாசனம் செய்கிறார். குழிகள் அனைத்திற்கும் ஏக்கருக்கு ஒன்று – ஒன்றரை மூடை பாரமாபாஸ் 20:20 உரம் இடுகிறார். குழிகளில் களைச்செடிகளை குச்சிகள் உபயோகித்து அகற்றுகிறார். செடிகள் நன்கு பூக்கள் பிடித்து காய்கள் காய்க்கத் தொடங்கும். சாகுபடி சமயம் விவசாயி தனது பயிரினை பூச்சிகள், பூஞ்சாளங்கள் தாக்காமல் இருக்க தக்க பயிர் பாதுகாப்பு முறைகளை அனுசரிக்கிறார்.
பிஞ்சு வெள்ளரி பயிரின் மொத்த வயது 90 நாட்கள். இந்த சாகுபடியில் பயிரில் விதைத்த 45வது நாளிலிருந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் அறுவடையில் கீழ்க்கண்டபடி வருமானம் கிட்டுகின்றது.
முதல் தர காய் 80 கிலோ து ரூ.15 = ரூ. 1,200.00
இரண்டாம் தர காய் 100 கிலோ து ரூ.10 = ரூ. 1,000.00
மூன்றாம் தர காய் 100 கிலோ து ரூ.5 = ரூ. 500.00
மொத்தம் ரூ.2,700.00 து 20 அறுவடை = ரூ.54,000.00.
சாகுபடி செலவு= ரூ.27,450.00.
நிகர லாபம் = ரூ.26,550.00
கோடை காலத்தில் குறுகிய நாட்களில் பலன் தரும் பிஞ்சு வெள்ளரி சாகுபடி “சிறு விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்’ என்று சொல்வது பொருத்தமாகும்.
-எஸ்.எஸ்.நாகராஜன்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *