பசுமைக்குடிலில் வெள்ளரி சாகுபடி!

பசுமைக்குடிலில் வெள்ளரி சாகுபடி செய்து ‘சாதித்து வருகிறார் ஸ்ரீவில்லிபுத்தூர் விவசாயி வெங்கடேஷ். ஸ்ரீவில்லிபுத்தூர் ரெங்கநாதபுரம் தெருவை சேர்ந்த இவர் டிப்ளமோ பட்டம் பெற்று தனியார் துறையில் பணியாற்றி வந்தார். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் விவசாயத்தில் நாட்டம் கொண்டார்.
விளைவு கோட்டைப்பட்டியில் 10 ஏக்கரில் சம்பங்கி, மல்பரி, தென்னை, வெள்ளரி பயிரிட்டுள்ளார். தோட்டக்கலைத்துறை அதிகாரிகளின் அறிவுரைப்படி, பசுமைக்குடில் அமைத்து வெள்ளரி சாகுபடி செய்து வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்கிறார்.

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

நவீன தொழில்நுட்பம்:

இரும்பு குழாய்களை கொண்டு குடில் அமைத்து, அதனை அல்ட்ரா வயலெட் பாலிதீன் ஷீட்களை கொண்டு மேற்கூரை அமைத்து அதனுள் பயிர்களை வளர்த்திட தேவையான சீதோஷ்ண நிலைகளை உருவாக்கி பயிர்களை அதிகபட்ச வெப்பம், குளிர், காற்று, பூச்சி, நோய் தாக்குதலில் இருந்து காத்து மகசூல் எடுப்பதே பசுமைக்குடில் தொழில் நுட்பமாகும். திறந்தவெளி சாகுபடியை விட 10 முதல் 12 மடங்கு அதிக மகசூலை பெறலாம். பருவம் இல்லாத காலங்களிலும் சாகுபடி செய்து மகசூல் பெறலாம். தண்ணீர் தேவை மிக குறைவு. தரமான, நோய் தாக்காத காய்கறிகள், மலர்களை
சாகுபடி செய்ய முடியும்.

வெங்கடேஷ் கூறியதாவது:

விவசாயிகளுக்கு அதிக லாபம் ஈட்டித்தரும் பசுமைக்குடில் சாகுபடிக்கு, ஒரு சதுர மீட்டருக்கு ரூ.935 வீதம் குறைந்தபட்சம் ஆயிரம் முதல் அதிகபட்சம் 4 ஆயிரம் சதுர மீட்டருக்கு ரூ.4 லட்சத்து 67 ஆயிரத்து 500 மானியமாக விவசாயிகளுக்கு வங்கி கணக்கின் மூலம் வழங்கபடுகிறது. பசுமைக்குடிலில் கடந்த ஏப்ரலில் வெள்ளரி பயிரிட்டேன். தோட்டக் கலைத்துறை அதிகாரிகளின் ஆலோசனை படி சொட்டுநீர்  பாசனத்தின் மூலம், அனைத்து தொழில்நுட்பங்களையும் கடை பிடித்து வருகிறேன்.
வெள்ளரி பயிர் 20வது நாளில் பூக்க ஆரம்பித்து 37வது நாள் முதல் ஒருநாள் விட்டு ஒருநாள் என்ற முறையில் அறுவடை செய்து வருகிறேன்.
75 நாட்களில் 22 மெட்ரிக் டன் வரை மகசூல் எடுத்து, சென்னை, கோவை, ஒட்டன்சத்திரத்துக்கு அனுப்புகிறேன். இன்னும் 15 டன் மகசூலை எதிர்பார்க்கிறேன்.
பசுமைக்குடில் அமைக்க ரூ.23 லட்சம் வரை செலவழித்து, ரூ.8 லட்சத்து 90 ஆயிரம் தோட்டக்கலைத்துறை மானியம் பெற்றுள்ளேன். ஒரே ஆண்டில் 3 பயிர்கள் மூலம் எனது முதலீடு திரும்ப கிடைக்கும் நம்பிக்கை எனக்குள்ளது என்றார்.
தொடர்புக்கு 09894583379 .
என்.பாலமுருகன், விருதுநகர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *