உருளை கிழங்கு உயிரைப் பறிக்குமா?

முளைவிட்ட உணவுகள்ஊட்டம் நிறைந்தவை என்று கேள்விப்பட்டிருப்போம். அதுவே உருளைக்கிழங்கில் முளைவிட்டிருந்தாலோ, பச்சை நிறத்திட்டுகள் காணப்பட்டாலோ, அவற்றை உபயோகிக்கக்கூடாது என எச்சரிக்கின்றன சில செய்திகள். எது சரி, எது தவறு? சந்தேகங்களைத் தீர்க்கிறார் உணவியல் நிபுணர் ஏ.டி.சாந்தி காவேரி…

‘‘உருளைக்கிழங்குகளை நீண்டநாள் சேமித்து வைப்பதால் அவற்றில் முளைவிடுகின்றன. நல்ல உருளைக்கிழங்கோடு ஒப்பிடும்போது இவை ருசியாகவோ, ஆரோக்கியமானதாகவோ இருப்பதில்லை. முளைவிட்ட உருளைக்கிழங்குகளில் காணப்படும் சாக்கோனைன் (Chaconine) மற்றும் சாலனைன் (Solanine) ஆகியவை நச்சுப் பொருட்களைக் கொண்டுள்ளன.

Solanine நச்சுப்பொருள் சிறிது இருந்தாலும் விஷமாக மாறிவிடும் அபாயம் ஏற்படுகிறது. விலங்குகள், பூச்சிகள், பூஞ்சைக்கு எதிரான இயற்கை பூச்சிக்கொல்லிகளாக செயல்படும் இவை தாவரங்களுக்கு நன்மை தருபவை. பூச்சிக் கொல்லிகளாக செயல்படும் இவற்றை மனிதன் உண்ணும்போது எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்று சொல்லத் தேவையில்லை.

Courtesy: Dinakaran
Courtesy: Dinakaran

சாக்கோனைனைவிட, சாலனைன் அதிக நச்சுத்தன்மை உடையது. சிறிதளவு உடலில் கலந்தாலும் தீவிரமான பக்க விளைவை ஏற்படுத்தக் கூடியது. குடல் பாதையில் எரிச்சல் உண்டாக்கி பலவகை குடல் நோய்களுக்கு காரணமாகிறது. இதோடு, முளைவிட்ட உருளைக்கிழங்கில் உள்ள மாவுப்பொருள் (Starch) சர்க்கரையாக மாறிவிடுவதால் உடல் நலத்திற்கு தீங்கானது. உருளைக்கிழங்கின் இலை, தண்டு, கனிப்பகுதியை பயன்படுத்தக் கூடாது. கிழங்குப் பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

அடுத்ததாக பச்சை நிறத் திட்டுகள் உள்ள உருளைக்கிழங்குகளையும் மேல்தோல் சுருங்கி உள்ளவற்றையும் பயன்படுத்தக் கூடாது. சூரிய ஒளிபடும் இடங்களில் அதிக நேரம் இருப்பதால் பச்சைநிறத் திட்டுகள் உண்டாகின்றன. கிளைகோல்கலாய்ட் (Glycoalkaloid) இருப்பதால், இதுவும் தீங்கானதே. இவற்றை உபயோகிக்காமல் அழித்துவிடுவதே சிறந்தது’’ என்கிற உணவியல் நிபுணர், இதன் அறிகுறிகளையும் பின்விளைவுகளையும் கூறுகிறார்.

நச்சுப்பொருட்கள் உள்ள முளை வந்த உருளைக்கிழங்குகளை சமைத்து சாப்பிடும்போது தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம், வயிற்றுவலி, டயரியா போன்றவை ஏற்படும். முதலில் பலவீனமாக இருக்கும். கோமா நிலையை அடைந்து அரிதாக சிலருக்கு மரணம் கூட ஏற்படும் அபாயம் உண்டு. கருவுற்ற தாய்மார்கள் கண்டிப்பாக இவற்றைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது.
greenpot1

 

 

 

 

 

பாலில் உள்ள சத்துகளுக்கு நிகராக உருளைக்கிழங்கில் சத்துகள் இருந்தாலும் முளைவிட்ட மற்றும் பச்சை நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளை கருவுற்ற பெண்கள் உண்பதால் கருச்சிதைவு ஏற்படக் கூடும். பிறக்கும் குழந்தைகள் பிறவிக்குறைபாடுகளுடன் பிறப்பதற்கும் வாய்ப்புள்ளது’’  என்கிறார் அவர்

44 முதல் 50 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையில் ஈரப்பதம் இல்லாத காற்றோட்டமான இடத்தில் வைத்தே உருளைக்கிழங்குகளைச் சேமிக்க வேண்டும். ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. ஃபிரிட்ஜில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால், உருளைக்கிழங்கில் உள்ள மாவுப்பொருள் அதிக சர்க்கரையாக மாறிவிடும். ஃபிரிட்ஜிலிருந்து எடுத்த குளிர்ந்த உருளைக்கிழங்கை அதிக வெப்பநிலையில் வறுக்கும் போது உண்டாகும் வேதியியல் மாற்றத்தால் புற்றுநோய்க்கு காரணமான அக்ரிலமைட் (Acrylamide) என்ற ரசாயனம் வெளியேறுகிறது.”

நன்றி: தினகரன்

மேலும் அறிந்து கொள்ள:


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “உருளை கிழங்கு உயிரைப் பறிக்குமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *