சமையல் பாத்திரங்கள் எப்படி தேர்ந்து எடுப்பது?

ம் முன்னோர் மண்பாண்டங்களில் உணவு சமைத்தனர். நாம் டெஃப்லான் கோட்டிங் வெசல்ஸ் வரை வந்திருக்கிறோம். இன்னொரு பக்கம், செய்திகளிலும் சமூக வலைதளங்களிலும் உணவு சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்களைப் பற்றிய அச்சமூட்டும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அவ்வகையில் சமீபத்தில், ‘அலுமினியப் பாத்திரம் மற்றும் பிரஷர் குக்கரில் உணவு சமைப்பதால் பல்வேறு வியாதிகள் வரும்’ என்ற தகவல் பரவிக்கொண்டிருக்கிறது.

‘எத்தகைய பாத்திரங்களில் உணவு சமைப்பது ஆரோக்கியமானது, எவையெல்லாம் ஆபத்தானது?’ என்ற கேள்விக்கு, சென்னை, தேனாம் பேட்டையைச் சேர்ந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து மருத்துவர் தாரணி கிருஷ்ணன், விரிவாக பதில் அளித்தார்.

மண்பாண்டம், மிக நல்லது!

‘‘மண்பாண்டம், எவர்சில்வர், இரும்பு, அலுமினியம் என ஒவ்வொரு வகை பாத்திரத்துக்கும் பிரத்யேகத்தன்மை இருக்கிறது. அது எந்தளவுக்கு சமைக்கும் உணவை சிறப்பாக்குகிறது, சீர்குலைக்கிறது என்பதை அறிய வேண்டியது அவசியம்!

பராமரிப்பதற்கு சிரமமாக இருந்தாலும், சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங் களிலேயே சிறந்தது மண் பாண்டங்கள்தான். மண் சட்டிகளில் உள்ள நுண்துளைகள் மூலமாக நீராவியும், காற்றும் ஊடுருவி உணவை சரியான பதத்தில் சமைக்க வைக்கும். மேலும், இதில் சமைத்த உணவு கூடுதல் சுவையுடனும், பல மணி நேரம் கெடாமலும் இருப்பதோடு, அமிலத்தன்மை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தாது. கல்சட்டி போன்ற பாத்திரங்களையும் பயன்படுத்தலாம்.

எவர்சில்வர், ஏற்றுக்கொள்ளலாம்!

மண்பாண்டத்துக்கு அடுத்து எவர்சில்வர் பாத்திரங்கள் உணவு சமைக்கச் சிறந்தவை. எந்த அமில வினைபுரியும் திறனும் எவர்சில்வர் பாத்திரங்களுக்கு இல்லாததால் சமைத்த உணவு களை இதில் பல மணி நேரம் வைத் திருக்கலாம். மண் பாத்திரம் மற்றும் எவர்சில்வர் பாத் திரங்களைத் தவிர, மற்ற எந்த பாத்திரங்களில் உணவு சமைத்தாலும் அவற்றை உடனடியாக எவர்சில்வர் பாத்திரத்துக்கு மாற்றிவிட வேண்டியது அவசியம்.

இரும்புப் பாத்திரம் !

இரும்புப் பாத்திரங்கள் உணவு சமைக்க ஏற்றவை; சமைத்த உணவில் வெப்பத்தை பல மணிநேரம் சீராகத் தக்க வைக்கும் திறன் கொண்டவை. ஆனால், இதில் சமைத்த உணவை உடனடியாக வேறு பாத்திரத்துக்கு மாற்றிவிட வேண்டும்.

அலுமினியம், அவாய்ட்!

விலை மலிவு என்ற ஒரே காரணத்துக்காக அலுமினியப் பாத்திரங்களைப் பயன் படுத்துவோர் அதிகம். ஆனால் அது ஏற்படுத்தும் பாதிப் புகளும் அதிகம். ‘அல்ஸைமர்’ எனப்படும் மனநலம் சார்ந்த நோய் உள்ளவர்களுக்கு, அலு மினியப் பாத்திரங்களில் சமைப்பது ஆபத்தானது. அலுமினியப் பாத்திரங்களில், புளிப்பு சுவையுடைய உணவு களைச் சமைத்தால் அமிலத் தன்மையுடன் வினைபுரிந்து உணவுப்பொருளில் எளிதில் அலுமினியத் தாது கலந்துவிடக்கூடும் என்பதால், புளிப்புச் சுவை உணவுகள், தயிர் போன்றவை அலுமினியத்துக்கு ஆகாது. கீரைகளை அலுமினியப் பாத்திரங்களில் சமைக்கும்போது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஆக்ஸலேட் மற்றும் ஃபைடேட் ரசாயனங்கள் எளிதாக உருவாகும் வாய்ப்புஉள்ளது என்பதால்,  தவிர்க்க வும். காய்கறிகளை மட்டும் அலுமினியப் பாத்திரங்களில் சமைக்கலாம்.

அலுமினியப் பாத்தி ரங்களில் உணவு சமைப்பதால் ஒரு நாளைக்கு 1-2 மி.கி அளவி லான அலுமினிய மெட்டல் உடலில் கலக்க வாய்ப்புள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை ஒன்று, ஒரு நாளுக்கு 50 மி.கி அளவிலான மெட்டல் உணவில் கலக்கலாம், அதை மீறினால் ஆபத்து என்கிறது. ஆனாலும், தொடர் பயன்பாடு ஆபத்தை விளைவிக்கும் என்பதால் அலுமினியத்தை தவிர்ப்பதே நல்லது.

பீங்கான்… பிரச்னையில்லை!

`மைக்ரோவேவ் அவன்’ களில் பயன்படுத்தப்படும் பீங்கான் பாத்திரங்களால் எந்தப் பிரச்னையும் வராது. ஆனால், மலிவான பீங்கான் பாத்திரங்கள் உயர்ந்த கொதிநிலையில் தயாரிக்கப்படுவதில்லை என்பதுடன், உணவில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது என்பதால், எப்போதும் தரமான பீங்கான் பாத்திரங்களையே பயன்படுத்தவும்.

எனாமல் பாத்திரங்கள்!

அலுமினியம் மீது எனா மலைச் சேர்த்து குறைவான விலைக்கு விற்கப்படும் எனாமல் பாத்திரங்களில் சமைக்கும்போது, உணவில் கேடியம் நச்சுத்தன்மை கலக்கும் வாய்ப்
புள்ளது. எனவே வெளிப்புறக் கவசம் உள்ள முட்டையை வேகவைப்பதைத் தவிர, இதை வேறெந்தச் சமையலுக்கும் பயன்படுத்த வேண்டாம். சமைத்த உணவு வகைகளை எடுத்துப் பரிமாற இதைப் பயன்படுத்தலாம்.

வெண்கலம்… உலரவிடவும்!

வெண்கலப் பாத்திரங்களில் சமைப்பதால் உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், சமைத்த பாத்திரங்களை விரைவாகக் கழுவி நன்கு உலரவைக்காவிட்டால், களிம்புப் படலம் உருவாகி, அடுத்து சமைக்கும்போது உணவை நச்சுத்தன்மை உடையதாக ஆக்கிவிடும்.

பொதுவாக எந்த வகைப் பாத்திரமாக இருந்தாலும், அதில் கீறல், பழுது ஏற்பட்டு விட்டால் உடனடியாக சமைக்கும் உபயோகத்தில் இருந்து அதை நிறுத்திவிட வேண்டும். அதேபோல, எல்லா சமையல் பாத்திரங்களையுமே இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றிவிடுவது சிறந்தது’’ என்று வலியுறுத்தி முடித்தார் தாரணி.

பிரஷர் குக்கர்… டெஃப்லான் பாத்திரங்கள்!

`அலுமினிய பிரஷர் குக்கரில் சமைப்பதில் என்ன பிரச்னை..?’ என்ற கேள்விக்கு பதில் தருகிறார், சென்னை, கிண்டியில் உள்ள ‘சென்னை டெஸ்ட்டிங் லேபரட்டரி’ தனி யார் நிறுவனத்தின் இயக்குநர் அசோக்குமார்.

‘‘இத்தாலியின் ‘ஜர்னல் ஆஃப் ஃபுட் சயின்ஸ்’ வெளியிட்டுள்ள ஆராய்ச்சி முடிவின்படி, உணவை வேக வைக்கும்போது (boiling) 40% – 75%, வறுத்தெடுக்கும்போது (roasting) 53% – 90%, ஆவியில் (steaming) சமைக்கும்போது 75 – 90% மற்றும் பிரஷர் குக்கரில் சமைக்கும்போது 90% – 95% ஊட்டச்சத்துக்கள் கிடைப் பதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, குக்கர் உணவு சிறந்தது என்பதில் சந்தேகமில்லை.

பிரஷர் குக்கர் அலு மினியம், காப்பர், ஸ்டெயின் லெஸ் ஸ்டீல், டைட்டானியம் போன்ற மெட்டல்களில் கிடைக்கிறது. அவற்றில் விலை குறைந்தது, அலுமினியம் பிரஷர் குக்கர். ஆனால் அதைவிட, மற்ற மூன்று மெட்டல்களில் சமைப்பதே நல்லது. ஏனெனில், அலுமினியத்துடன் ஒப்பிடும்போது மற்ற வகை குக்கர்களில் இருந்து மிக மிகக் குறைந்த அளவில்தான் மெட்டல் வெளியேறும்.

மேலும், எந்த வகை பிரஷர் குக்கராக இருந்தாலும் நேரடியாக உணவைச் சமைப்பதைவிட, உள்ளே ஒரு எவர்சில்வர் பாத்திரத்தை வைத்து, அதில் சமைப்பது சிறந்தது. குக்கரின் கொள்ளளவுக்கு ஏற்பவும், சரியான விசில் விட்டும் சமைக்கும்போதுதான் உணவின் முழுமையான சத்து கிடைக்கும்’’ என்ற அசோக்குமார், டெஃப்லான் பாத்திரங்கள் பற்றிய அதிர்ச்சி களையும் சொன்னார்…

‘‘டெஃப்லான் கோட்டிங் பாத்திரங்களில் பிளாஸ்டிக் கலந்து இருப்பதால், உராய்வு விழுந்த பிறகு அவற்றில் சமைக்கக் கூடாது. அப்படிச் சமைத்தால், அந்தப் பிளாஸ்டிக் பொருள் உணவில் கலந்துவிடும் ஆபத்து உள்ளதுடன், அது டெஃப்லான் வாயுவை வெளியிடும் வாய்ப்பும் உள்ளது. அந்த வாயு, உணவுப் பொருட்களில் கலந்து உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும். மேலும் இந்தப் பாத்திரங்களைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, புற்றுநோயை ஏற்படுத்தும் நேரடிக் காரணியான `கார்சினோஜெனிக்’ நம் உடலில் வினைபுரியவும் வாய்ப்பிருக்கிறது” என்றார் அசோக்குமார்.

சமையலறையில் நவீனத்தைவிட எப்போதும் ஆரோக்கியத்துக்கே முக்கியத் துவம் கொடுக்கப்பட வேண் டும்!

நன்றி: ஆனந்த விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *