கடந்த சில ஆண்டுகளாக வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனைக் குறைப்பதில் எலிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது நாடு முழுவதும் உணவு தானியங்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் 2 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை சேதத்தையும், இழப்பையும் எலிகள் ஏற்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மிக அதிகளவு எலி தாக்குதலை குறிப்பிட்ட கால அளவில் கட்டுப்படுத்தவில்லை என்றால் சேதத்தின் அளவு நூறு சதவீதம் வரை உயர்ந்து விடும் அபாயமும் உள்ளது.
இத்தகைய நடைமுறை சூழலில் சிறு மற்றும் குறு விவசாயிகள், நடுத்தர விவசாயிகள் மிகக் கடுமையான பொருளாதார இழப்பீடுகளை ஏற்படச் செய்யும் எலிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது எப்படி? என தெரிந்து கொள்வது அவசியமாகும்.
இயற்கை முறையிலான எலிக் கட்டுப்பாடு குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது:
- நமது நாட்டில் எலிக் கட்டுப்பாட்டில் இந்தியா கழுகு, ஆந்தை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
- இயற்கையில் மலை அடிவாரங்களில், காட்டுப் பகுதி மரங்களில் சிறிய குன்றுகளில் வசிக்கும் இவை எலிகளை உணவாக உட்கொள்ளும்.
- எனவே தமிழக விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள இயற்கை வனங்கள், பெரிய மரங்களில் உள்ள ஆந்தை இருப்பிடங்களுக்கு எந்த விதமான சேதத்தை ஏற்படச் செய்யாமல் பாதுகாப்பது அவசியம்.
- பின்னர் தங்கள் தோட்டங்களில் பறவை தாங்கிகளை அமைக்க வேண்டும். இரவு நேரங்களில் பறவை தாங்கிகளுக்கு வரும் ஆந்தைகள் எலிகளை உணவாக உட்கொள்ளும்.
- காலை நேரங்களில் பிற பறவை வந்து அமர்ந்து பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் பூச்சிகளை உணவாக உட்கொள்வதால் எளிதாக விவசாயிகள் எலிகள் மற்றும் பூச்சித் தாக்குதல்கள் வாயிலாக ஏற்படும் உற்பத்தி இழப்புகளை எளிதாக தடுக்க முடியும்.
- தற்போதைய நடைமுறை சூழலில் மிகவும் குறைந்த செலவில் இயற்கை முறையில் உற்பத்திப் பெருக்கத்தை எளிதாக பெறமுடியும்.
- விவசாய நிலங்களில் எலிகளை கட்டுப்படுத்த புள்ளி ஆந்தைகளும் முக்கிய பங்கு வகிக்கிறது.
- அவற்றிற்கு செயற்கையாக இருப்பிடப் பெட்டிகள் அமைத்து எலிகளைக் கட்டுப்படுத்தும் வேளாண் முயற்சிகளை சில மாநிலங்களில் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இயற்கை எலிக் கட்டுப்பாடு முறையின் பிற பயன்கள்: - சமுதாய அளவில் எலிகளை கட்டுப்படுத்த வனப் பகுதிகளை, மரங்களைப் பாதுகாப்பது வாயிலாக பல இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.
- வன மற்றும் மரப்பொருள்கள் வாயிலாக பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
- ஆந்தைகள் சில வகையான சிறிய பாம்புகள், தேள்களை உணவாக உட்கொள்வதால் விவசாயிகளின் உயிருக்கும் நல்லப் பாதுகாப்பு அரணாக அமையும்.
- எனவே சமுதாய அளவில் கிராமப்புறங்களில் ஆந்தைகள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டியது அவசியமாகும் என்கிறார் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்