ஒரு ஏக்கரில் 6,130 கிலோ நெல் விளைச்சல் சாதனை!

‘இயற்கை விவசாயம் மூலம் தான், நம் முன்னோர், அதிகளவில் பயிர் விளைச்சல் அடைந்துள்ளனர்; அதே போல, நாமும் இயற்கை விவசாயத்திற்கு திரும்பினால் சாதிக்கலாம்,” என, தமிழக அரசு விருது பெற்ற, ஈரோடு விவசாயி, துரைசாமி கூறியுள்ளார்.

தமிழக அரசு மூலம் ஆண்டுதோறும், பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்படும். நெற்பயிர் சாகுபடி செய்து, அதிகளவில் விளைச்சல் காட்டும் விவசாயிக்கு, ஐந்து லட்சம் ரூபாய் மற்றும் தங்கப் பதக்கம் வழங்கப்படும்.

இந்த ஆண்டுக்கான பயிர் விளைச்சல் பரிசை, ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஊராட்சி ஒன்றியம், தாதராகாடு கிராமத்தை சேர்ந்த விவசாயி துரைசாமி பெற்றுள்ளார்.

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

 

 

 

 

 

 

அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனோஸ்‘ ஆகிய நுண்ணுயிர் உரங்களை, இவர் பயன்படுத்தி உள்ளார். இந்த உரங்கள், காற்றில் உள்ள சத்துகளை இழுத்து, மண்ணுக்குஉரமாக அளிக்கும்.

பயிர் விளைச்சலில் சாதித்தது குறித்து, விவசாயி துரைசாமி கூறிய தாவது:

  • இப்போட்டியில் பங்குபெற, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்தேன். ஒரு ஏக்கரில், மூன்று கிலோ, சி.ஆர்., 1,009 ரக நெல்லை பயிரிட விரும்பினேன்.
  • பத்து சென்ட் நிலத்தில் நாற்று நட்டேன்.நாற்று வளர்ப்பதற்கு முன், விதை நெல்லை, 200 கிராம் அசோஸ்பைரில்லம், அரை லிட்டர் அரிசி கஞ்சி, 200 கிராம் நாட்டு சர்க்கரையில் கலந்து, 40 நிமிடம் ஊற வைத்தேன்.
  • பயிரிட வேண்டிய நிலத்தில், 100 கிலோ மக்கிய தொழு உரத்துடன், இரண்டு கிலோ அசோஸ்பைரில்லம் கலந்து தூவினேன்.
  • நாற்றை பிடுங்கி, 60 லிட்டர் தண்ணீரில், ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், ஒரு கிலோ பாஸ்போ பாக்டீரியா, கலந்து அதில் நனைத்து, 30 நிமிடங்கள் கழித்து நடவு செய்தேன்.
  • நூறு கிலோ தொழு உரம், இரண்டு கிலோ பாஸ்போ பாக்டீரியாவை கலந்து, நிழலில், ஈரப்பதத்துடன் வைத்திருந்து வயலில் தெளித்தேன்.
  • நாற்று நட்ட, 15 – 30 – 40வது நாளில், இயந்திரம் மூலம் களையெடுப்பு செய்தேன்.
  • அதன்பின், 150 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 50 கிலோ, ‘சூடோமோனஸ்’ என்ற உயிர் உரத்தை நிலத்தில் தெளித்தேன்.
  • மூன்றாவது முறை களை எடுத்த பின், பூச்சிமருந்து மற்றும் பூஞ்சாண மருந்து அடிக்கப்பட்டது; இரண்டு டன் கோழி கழிவு உரம் இடப்பட்டது; என்.பி.கே., பொட்டாஷ் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு, 25 சதவீதம் செயற்கை உரம், 75 சதவீதம் இயற்கை உரத்தை பயன்படுத்தியதால், என் நிலத்தில் பயிர் விளைச்சல் அதிகரித்தது.
  • மகாராஷ்டிராவில் இருந்து வந்த வேளாண் விஞ்ஞானி ஒருவர் மூலம், ‘பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம்’ ஆகியவற்றுடன் சர்க்கரை அல்லது இளநீர் கலந்து, கோமியம் சேர்த்து, நிலத்திற்கு சத்து வழங்கும் விவரங்களை கற்றுக் கொண்டேன். இந்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தினேன்.
  • நான் சாகுபடி செய்த நெல் ரகத்தில், சராசரியாக ஏக்கருக்கு, 4,000 கிலோ விளைச்சல் கிடைக்கும். இயற்கை உரங்களை பயன்படுத்தியதால், 6,130 கிலோ விளைச்சல் கிடைத்தது.
  • அறுவடைக்கு முன், வேளாண் இணை இயக்குனரகத்திற்கு தகவல்தெரிவித்தேன்.என் மாவட்ட வேளாண் அதிகாரி, மற்றொரு மாவட்ட வேளாண் அதிகாரி, மாவட்ட கலெக்டர் உதவியாளர் அடங்கிய குழு, அறுவடையை ஆய்வு செய்தது.
  • ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவிட்டு உள்ளேன்.
  • தொழு உரத்தை, வீட்டில் உள்ள மாடுகள் மூலமேதயாரித்தேன்.
  • நம் முன்னோர், இயற்கை விவசாயம் மூலம், அதிகளவு மகசூல் பெற்றுள்ளனர். காவிரி டெல்டா விவசாயிகள், ஏக்கருக்கு, ஐந்து டன்; ராமநாதபுரம், எட்டு டன்; கோவை, ஐந்து டன் விளைச்சல் பெற்றுள்ளதாக, ஆவணங்கள் மூலம் தெரிகிறது. நாமும், இயற்கை விவசாயத்திற்கு திரும்பினால், அதிகளவு விளைச்சல் பெற முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

நான்காவது முறை:

விவசாயி துரைசாமி இதற்கு முன், கருணாநிதி முதல்முறையாக முதல்வராக இருந்தபோது, மாவட்ட பயிர் விளைச்சல் போட்டியில் முதல் பரிசு; 1969 – -70ல், மாநில அளவில் முதல் பரிசு; 1970 – -71ல் மூன்றாவது பரிசு பெற்றுள்ளார். அப்போது, மோட்டார் பரிசாக வழங்கப்பட்டது. கடந்த, 2011க்கு பின், பரிசுத் தொகை ஐந்து லட்சம் ரூபாய் மற்றும் தங்கப் பதக்கம் என, உயர்த்தி வழங்கப்பட்டு உள்ளது. தற்போது, நான்காவது முறையாக, துரைசாமி பரிசு பெற்றுள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “ஒரு ஏக்கரில் 6,130 கிலோ நெல் விளைச்சல் சாதனை!

  1. Sankaradevi says:

    Dear sir
    I am waiting for your comments and I m planning to cultivate paddy in land.can u pls elaborate your technology & contact details & if any other links also fine for me.
    thanks
    sankaradevi k
    9972224482

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *