பழ வகை பயிர்களில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

நம் நாடு விவசாயிகள் பழ வகை பயிர்களில் காலம் காலமாக பயன் படுத்தி வந்த, பலன் கொடுத்து வந்த டிப்ஸ்கள் இதோ:

மலை வாழைப்பழம்

  • மலைப்பகுதியில் வாழையானது, வாழையடி வாழையாக தாய் மரத்திற்குப்பின் ஒரு சேய் மரத்தை மட்டும் விட்டு ஒவ்வொரு வருடமும் திரும்ப வாழைக்கட்டையை நடாமல் பயிரிடலாம்.
  • புதிய வேர்கள் விரைவாக விட்டு வளர வாழைக்கட்டைகளில், வேரை நடுவதற்கு முன் வெட்டி நடவு செய்யவேண்டும்.
  • ஒவ்வொரு மூன்று மாத இடைவெளியில் தொங்கும் வாழை இலையை அகற்றவேண்டும். அப்படி அகற்றாவிட்டால் வாழையில் கரும்புள்ளி நோய் நிழலினால் ஏற்படும். மேலும் காற்றினால் மரங்கள் சாயவும் வாய்ப்பு உண்டு.
  • ஒவ்வொரு கிலோ வேப்பம் புண்ணாக்குத் தூள் மற்றும் புகையிலைக் கழிவை தனித்தனியாக 5 லிட்டர் நீரில் ஊற வைத்து, மறுநாள் வடிகட்டி பின் அவற்றை ஒன்றாகக் கலந்து, அதில் வாழைக்கட்டையை நனைத்து நட்டால், நூற்புழு தாக்குதலைத் தடுக்கலாம்.
  • வாழை வாடல் நோயை கட்டுப்படுத்த, தாக்கப்பட்ட வாழையை வெட்டி எரித்துவிடவேண்டும். மேலும் அக்குழியால் 1-2 கிலோ சுண்ணாம்பு தூளை இடவேண்டும்.
  • விரைவாக விழாக் காலங்களில் பழுக்கவைக்க, வாழைக் குலைகளை பெரிய மண்பாண்டங்களில் வைத்து, அதில் நல்ல வாசனையுள்ள ஊதுப்பத்தியைக் கொளுத்தி வைத்து, அதன் வாய்ப்பகுதியை துணியினால் கட்டி வைக்கவேண்டும். இனிமேலாவது கார்ப்ய்ட் (Carbide) போட்டு பழுக்க வைக்க வேண்டாமே!

மா

  • மாந்தோப்பிற்குள் சூரியகாந்தியை பயிர் செய்தால், தேனீக்களை கவர்ந்து, அதிக மகரந்தசேர்க்கை நடந்து, மா மகசூல் அதிகரிக்கும்.
  • வேப்ப எண்ணெயைத் தத்துப்பூச்சி கட்டுப்படுத்த தெளிக்கலாம்.
  • ஆவாரம் குலையை ஒரு அடுக்கு பரப்பி அதன் மீது மா காய்களை இட்டுபின் ஆவாரம் குலையைப் பரப்பினால், விரைவாக மா பழம் பழுக்கும்.

திராட்சை

  • பழுப்பு நிறமுள்ள 1/2 நிறமுள்ள நல்ல மொட்டு உள்ள தண்டுப் பகுதியை நடவுக்குப் பயன்படுத்தவேண்டும்.
  • கடலை புண்ணாக்கை ஊறவைத்து, கரைத்து, அக்கரைசலை 1 வாளி ஒரு குழிக்கு ஊற்றினால் நல்ல தரமான திராட்சையையும் அதிக மகசூலையும் பெறலாம்.
  • 10 அடி இடைவெளியில் நடவுக்கு 3 மாதத்திற்கு முன்பு குழித் தோண்டி, அதில் கொழிஞ்சி, அகேவ், எருக்களைக் போன்ற பசுந்தாள் இலைகளை இடு மண் கொண்டு மூடினால், அவை மட்கி விடும். பின் நடவு செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்.
  • ஒவ்வொரு திராட்சைக் கொடியைச் சுற்றி மழைக்காலத்திற்கு முன்பு வட்ட வடிவ குழித்தோண்டி அதில் பசுந்தாள் உரச்செடி மற்றும் தொழு உரத்தை 3:1 விகிதத்தில் இட்டு, மண் கொண்டு மூடினால், நல்ல மகசூல் பெறலாம்.

கொய்யா

  • அனைத்து பூச்சிகளையும் கட்டுப்படுத்த 2 கிலோ நறுக்கிய எருக்களை இலையை 3 கி வேப்பம் புண்ணாக்கு உடன் கலந்து 20 லிட்டர் தண்ணீரில் 4 நாள் ஊறவைத்து, பின் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

எலுமிச்சை

  • இறந்த நாயை, வேர்ப்பகுதியில் புதைத்தால் எலுமிச்சையில் அதிக மகசூல் கிடைக்கும்.
  • ஒரு வாளி / மரம் என்ற அளவில் பன்றி எருவை இட்டால், பூ உதிர்தல் தடுக்கப்பட்டு மகசூல் அதிகரிக்கும்.
  • வேப்பங்கொட்டை கரைசல் அல்லது வேப்பம் புண்ணாக்கு கரைசலை தெளித்தால் இலை உறிஞ்சும் பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
  • 500 கிராம் காய்ந்த வேப்பம்பழத் தூளை ஒரு மரத்திற்கு இட்டால் நூற்புழு தாக்குதல் கட்டுப்படும்.

சாத்துக்குடி

  • தண்டு துளைப்பான் தாக்கிய மரத்திலுள்ள ஓட்டைகளை கழுவி சுத்தம் செய்து, சுண்ணாம்பு கரைசலில் தோய்த்த பஞ்சை அதில் அடைத்து விடலாம் அல்லது லெமன் கிராஸ் புல்லை ஓட்டையை சுற்றி இடவேண்டும்.
  • சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த, பூக்கும் பருவத்தில் மரத்தைச் சுற்றி 2 அடி அகலத்திற்கு பச்சை சோற்று கற்றாழை செடித் துண்டுகளை இடலாம்.
  • எறும்புத் தொல்லையை தடுக்க, விதையுடன் சாம்பல் கலந்து வைக்கலாம்.

பிளம்ஸ்

  • பிளம்ஸ் பழங்களை மூங்கில் கூடைகளில் அடைக்கும்போது, அதில் ‘பேன்’ வகை இலைகளை (இடைவேளை) போட்டால், பழம் பழுப்பது தாமதப்படும். ஏனெனில் மெதுவாகவே காயும்.

பலாப்பழம்

  • பலாப்பழத்தை பழுக்க வைக்க, காம்புப் பகுதியில் சிறிது துளைப்போட்டு, சின்ன குச்சியை சொருகி 3-5 நாட்கள் அப்படியே வைத்தால் பழுத்துவிடும்.

நன்றி: தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *