அற்புத கால்நடை தீவனம் அசோலா

அற்புத கால்நடை தீவனமான அசோலா பற்றி ஏற்கனவே நாம் படித்து உள்ளோம். இதோ தினமலரில் வந்துள்ள மேலும் ஒரு தகவல்

ஆடு, மாடு, கோழி, முயல், மீன், பன்றி போன்ற கால்நடைகளுக்கு செலவில்லாத அற்புத தீவனமாகவும், மனிதர்களுக்கு மிகச்சிறந்த உணவாகவும், அனைத்து உயிர்களுக்கும் உணவு கொடுத்து வாழ வைக்கும் தாயாக விளங்கும் தாவரங்களுக்கு உன்னதம் மிகுந்த உயிர் உரமாகவும் அமைந்து வளம் தரக்கூடிய ஆதி தாவரமாகிய அசோலா என்னும் நீலப்பச்சைப்பாசி நீரில் வளரும் பாசி வகையாகும்.

  • செலவின்றி வளரும் அசோலாவை மாடுகளுக்கு தீவனமாக கொடுக்கலாம்.
  • ஒரு மாட்டிற்கு ஒரு நாளைக்கு 2 கிலோ வரை கொடுக்கலாம்.
  • இதன் காரணமாக 2 லிட்டர் பால் கூடுதலாக கிடைக்கும்.
  • புண்ணாக்கு, தவிடு, பருத்திக் கொட்டை போன்ற தீவனங்களின் அளவை பாதியாக குறைத்துக் கொடுக்கலாம்.
  • மாடுகளின் சினைபிடிப்பு தன்மை மேம்படும்.
  • இதேபோல ஆடு, கோழி, மீன், முயல், பன்றி என அனைத்து கால்நடைகளுக்கும் செலவில்லாத தீவனமாக பயன்படுத்தி வளம் காண்பதுடன் அதிக வருமானமும் பெறலாம்.

அசோலா வளர்க்க தேவையான பொருட்கள் எவை என பார்ப்போம்.

  • பாலிதீன் சீட் 2 மீட்டர் அகலம், 4 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்க வேண்டும்.
  • இதன் அளவு சிறிது கூட குறைய அமையலாம். பாலிதீன் சீட்டின் பரப்பளவில் ஒரு அடி நீள அகலம் குறைவான அளவில் அரை அடி உயரத்தில் மண் மூலமோ அல்லது செங்கல் மூலமோ பாத்தி அமைத்து, அதன் மீது பாலிதீன் சீட்டினை விரித்து பரப்ப வேண்டும்.
  • இப்பொழுது அரை அடி உயர தொட்டி போன்ற அமைப்பு கிடைத்துவிடும்.
  • இந்த பாலிதீன் தொட்டியினுள் ஒரு இன்ச் உயரம் அளவில் தோட்டத்து மண்ணைக் கொட்டி பரப்ப வேண்டும்.
  • 3 இன்ச் அளவு நீர் நிரப்ப வேண்டும்.
  • 10 கிலோ மாட்டுச்சாணத்தை கொட்டி நன்கு கரைத்து கலந்துவிட வேண்டும்.
  • இந்த தொட்டியினுள் அரை அல்லது ஒரு கிலோ அசோலா விதைகளை தூவி கலந்துவிட வேண்டும்.
  • கிரசர் பொடி (கருங்கல் பொடி) அரை கிலோ பரவலாக தூவி கலக்கிவிட வேண்டும்.
  • ஒரு வாரத்தில் தொட்டி முழுவதும் அசோலா நிரம்பி வளர்ந்துவிடும்.
  • தினமும் 2 கிலோ அசோலா அறுவடை செய்யலாம்.
  • இந்த தொட்டியினை 50 சதவீதம் நிழல் கிடைக்கும் வகையில் மர நிழலில் அமைக்க வேண்டும்.
  • அறுவடை செய்த அசோலாவை சுத்தமான தண்ணீரில் அலசி எடுத்து மாடுகளுக்கு 2 கிலோ வரை தவிடு, புண்ணாக்குடன் கலந்துகொடுக்கலாம்.
  • ஆடுகளுக்கு 300 கிராம் முதல் 500 கிராம் வரை கொடுக்கலாம்.
  • கோழிகளுக்கு தேவையான அளவு கொடுக்கலாம். மீன் வளர்க்கும் குளத்தில் அசோலாவை தூவிவிடுவதன் மூலம் தேவையான அளவு உட்கொள்ளும் மீன்கள் குறைந்த காலத்தில் அதிக எடை கொண்டதாகவும் ஆரோக்கியமாகவும் வளரும்.
  • தூய்மையான முறையில் வளர்க்கப்பட்ட அசோலாவை மனிதர்களாகிய நாமும் பொரியல், வடை, சூப் என பல வகையில் உணவாக சமைத்து உண்ணலாம்.
  • நெல்வயல்களில் இந்த அசோலாவை தூவிவிடுவதன் மூலம் பத்து நாட்களில் வயல் முழுவதும் பரவி வளர்ந்துவிடும்.
  • மண்ணில் கலந்து மக்கும் பொழுது சிறந்த உரமாக பயன்படும். மற்ற தாவரங்கள் அனைத்திற்கும் உரமாக பயன்படுத்தலாம்.
  • உரத்தட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு பயன்பெறலாம்.
  • கால்நடைகளுக்கான உணவுத் தட்டுப்பாட்டிலிருந்தும் விடுபடலாம்.
  • இத்தனை சிறப்புகள் கொண்ட அசோலா என்னும் நீலச்பச்சை பாசி, தாவரங்கள் முதல் அனைத்து உயிர் களுக்கும் மிகச்சிறந்த செலவில்லாத அற்புத உணவாகவும், மண்ணிற்கு உரமாகவும் பயன்படுகிறது.

மேலும் விபரங்களுக்கும், அசோலா, வேலிமசால், கோ4, கோ.எப்.எஸ்.சோளம், கிளைரிசிடியா, சூபாபுல் (சவுண்டால்), அகத்தி போன்ற தீவன விதைகளும், சந்தனம், சிவப்பு சந்தனம், குமிழ், தேக்கு, மலைவேம்பு, மகோகனி போன்ற வனமர விதைகளும் கன்றுகளும், காய்கறி விதைகளும் ஆய்வுப்பண்ணை முகவரியில் நேரிலும் தபால் மூலமும் பெறலாம்.

ஆ.சந்தனமோகன், சந்தன வளர்ச்சி ஆய்வுப்பண்ணை, காமநாயக்கன்பாளையம், பல்லடம், கோயம்புத்தூர்-641 658.
-ஆ.சந்தனமோகன்,09842930674.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *