கைகொடுக்கும் கந்தகம்!

நைட்ரஜனைப் போன்றே கந்தகமும் பயிர்களுக்கு வேண்டிய அடிப்படையான சத்து. இதன் பெயர் லூயி பாஸ்டரின் நினைவாக உள்ள நுண்ணுயிர் சீரினத்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளது.

இது மெத்தியோனைன், சிஸ்டைன் உள்ளிட்ட பல அமினோ அமிலங்களை உண்டாக்குவதில் முதன்மையான பங்கு வகிக்கிறது. இந்த அமினோ அமிலங்கள் செடிகளுக்கும் விலங்குகளுக்கும் அடிப்படையாகப் பயன்படுகின்றன. ஒரு நல்ல தரமான புரதத்தில் நைட்ரஜன் – கந்தக சதவீதம் 15:1 என்ற அளவில் இருக்க வேண்டும். இவை நைட்ரஜனைப் போல மிகவும் இன்றியமையாத பங்கை வகிக்கின்றன. இதன் பற்றாக்குறையும் நைட்ரஜன் பற்றாக்குறையும் ஏறத்தாழ ஒரே மாதிரியாகவே இருக்கும்.

உழவர்களின் சிக்கலுக்கு விடியல்

கந்தகம் மண்ணில் கசிந்து, கிட்டாத நிலைக்கு வேகமாகச் சென்றுவிடுகிறது. குறிப்பாக மணல் பாங்கான உப்புத்தன்மையுள்ள மண்ணில் இது அதிகம் நிகழ்கிறது. எனவே, ஆண்டுதோறும் கந்தகத்தைக் கொடுக்க வேண்டிய நிலை உருவாகிறது. ஆனால், இதற்கான விலையின் காரணமாக உழவர்களால் நிலத்துக்குக் மிகக் குறைந்த கந்தகத்தையே கொடுக்க முடிகிறது.

இந்தச் சிக்கலைத் தீர்க்கும் வகையில் சந்த்ரா (1998) எனும் அறிவியலாளர், அசிட்டோபாக்டர் பாஸ்டியுரியேனஸ் என்ற நுண்ணுயிரியை புவனேஸ்வரத்தில் உள்ள மண்டல உயிரியல் மேம்பாட்டு மையத்தில் வைத்துப் பிரித்து அதை மேம்படுத்தியுள்ளார். இது கந்தகத்தைச் சுரந்து, பயிர்கள் எடுத்துக்கொள்ளும் வகையில் கொடுக்கிறது. உயிர்மப் பொருட்களில் உள்ள கந்தகத்தில் 70-90 சதவீதம் இவ்வாறு உருவாக்க முடிவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

வழக்கமாக ஈரமண்டலப் பகுதிகளில் உள்ள சாகுபடி நிலங்களில் மேற்பரப்பில் 5 முதல் 10 சதவீதம் மட்டுமே காணப்படுகிறது. எஞ்சியவை 12 முதல் 14 அங்குல ஆழத்தில் இறங்கிவிடுகிறது. அத்தோடு இரும்பு, அலுமினியம் போன்றவற்றின் ஆக்சைடுகளாக மாறியும் காணப்படுகிறது. இவை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள சத்துக்களைப் பயன்படுத்தும் நிலைக்கு மாற்றுவதற்கு உதவுகிறது. அசிட்டோபாக்டர் ஒரு குறுக்கத்துக்கு 250 கிராம் என்ற அளவில் பயன்படுத்தும்போது கந்தக அளவை காய்கறிகள், வெங்காயம், பருத்தி, பழங்கள், எண்ணெய் வித்துக்கள் போன்ற பல பயிர்களில் அதிகப்படுத்தியதை அனுபவத்தில் கண்டறிய முடிந்தது.

பாஸ்பரஸ்… பல விதம்…

நைட்ரஜனுக்கு அடுத்ததாக, பாஸ்பரஸ், செடிகளின் ஒருங்கிணைந்த ஊட்டங்களில் முக்கியமான பங்கை வகிக்கிறது. பயிர்களின் விளைச்சல் திறனில், கட்டுப்படுத்தக்கூடிய பங்கை வகிக்கிறது. பெரும்பாலான மண், கரையாத நிலையில் உள்ள கனிம பாஸ்பரஸ் சத்தைக் கொண்டிருந்தபோதிலும், இவை பாஸ்பரஸ் பென்டாக்சைடு என்ற நிலையில் இருந்தால்தான் பயிர்களுக்குப் பயன்படும்.

பாஸ்பேட்டுகள் பல வடிவங்களில் இருக்கின்றன. பயிர்களின் வளர்ச்சிக்கு மிக இன்றியமையாதது மோனோ கால்சியம் பாஸ்பேட். இது தண்ணீரில் கரையக்கூடியது. சூப்பர் பாஸ்பேட்டில் பெரும் பங்காற்றுகிறது. டைகால்சியம் பாஸ்பேட், நீரில் சிறிதளவு கரையக்கூடிய நிலையில் உள்ள மற்றொரு ஊட்டமாகும். வேதி உரங்களில் பல்வேறு வகை பாஸ்பரஸ் தரப்படுகிறது. கார வகை மண்ணில் ட்ரைகால்சியம் பாஸ்பேட் என்ற வடிவிலும், ‘ஹைட்ராக்கியாபடைட்’ என்ற வடிவில் எலும்புகளிலும், ‘அப்படைட்’ என்ற வடிவத்தில் பாறைத் தாதுக்களிலும் மணிசத்து, கூட்டுப்பொருட்களாகக் கிடைக்கிறது. அமிலத் தன்மையுள்ள மண்ணில் இரும்பு, அலுமினியம் ஆகியவற்றின் கூட்டுப்பொருளாகக் கிடைக்கிறது.

எப்படியிருந்த போதிலும் பாஸ்பரஸ் வேதி உரங்களை மண்ணில் பதப்படுத்திய போதிலும், இரும்பு, அலுமினியம், கால்சியம் ஆகியவற்றுடன் 80 முதல் 90 சதவீதம் இணைந்தே இருக்கும். மற்ற மணிச்சத்து வடிவங்களான, உயிர்ம பாஸ்பரஸ், காம்பிரிசெஸ்பிடின், பாஸ்போலிப்பிட்ஸ், உட்கரு அமிலங்கள், பாஸ்போரிலேட்டட் சர்க்கரை, தழைக் கழிவுகள் சிதையும்போது கிடைக்கும் உடன்நொதிமங்கள் ஆகியவை உள்ளன.

மண்ணில் உள்ள மொத்த பாஸ்பரஸில் 5 முதல் 85 சதவீதம்வரை உயிர்ம பாஸ்பரஸாக உள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையான மணிச்சத்து நுண்ணுயிர்கள், பூஞ்சாளங்கள் ஆகியவற்றின் உதவியால் திரட்டி பயிர்களுக்குத் தரமுடியும். இவை மணிச்சத்தைக் கரைக்கும் நுண்ணுயிர்கள் என்ற பொதுவான பெயரால் அழைக்கப்படுகின்றன. இவை கரையாத நிலையிலுள்ள கனிம பாஸ்பேட்டு கூட்டுப்பொருட்களை, மாலிக் அமிலம், குளுகானிக் அமிலம், குளுடாரிக் அமிலம், கிளைகோசாலிக் அமிலம், சக்னிக் அமிலம், ஃபியுமாரிக் அமிலம், மலானிக் அமிலம், சிட்ரிக் அமிலம், டார்டாரிக் அமிலம், லாக்டிக் அமிலம், கெட்டோகுளுடாரிக் அமிலம், கெட்டோபியுட்ரிக் அமிலம் போன்ற உயிர்ம அமிலங்களின் செயல்பாடுகளால் கரையும் பொருட்களாக மாற்றுகின்றன.

மண்ணில் கலக்கும் மணிச்சத்து

சூடோமோனஸ், மைக்ரோகாக்கஸ், பாசில்லஸ், பிளாவோ பாக்டிரியம், பெனிசிலியம், பியுசாரியம், ஸ்கெலரோடியம், அஸ்பெர்கிலம் ஆகியவை நுண்ணுயிரினங்கள்.

மிகத் திறனுடன் வேலை செய்யும் பல நுண்ணுயிர்கள் தென்னாட்டு மண்ணில் இருந்து கண்டறியப்பட்டு, பிரித்தெடுக்கப்பட்டுவிட்டன. அவை சூடோமோனஸ் ஸ்டாரியட்டா, பாசில்லஸ் பாலிமிக்சா, பாசில்லஸ் மெகாதிரியம். இந்தத் திறன்மிக்க நுண்ணுயிர்கள் தரையிலும், மலைப் பகுதியிலும் உள்ள மண்ணில் உள்ள கரையாத மணிச்சத்தைக் கரைத்துக் கொடுக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளன.

முசோரி, உதய்பூர், மடூன், சோர்டான் ஆகிய இடங்களில் பாறை பாஸ்பேட்டுகளையும் தங்களது நொதிமங்களைக் கொண்டு கரைக்கக்கூடிய திறனை நுண்ணியிரிகள் கொண்டுள்ளன. இவை 1:1 என்ற அளவில் மண்ணில் கலந்து இருக்கும்போது 2 முதல் 9 என்ற அளவு அமில-காரத் தன்மையிலும் வாழக்கூடிய திறனைப் பெற்றுள்ளன. இவை மண்ணில் கலந்தவுடன் மணிச்சத்தைக் கரைக்கும் வேலையைத் தொடங்குகின்றன.

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *