எலுமிச்சை சாகுபடிக்கு ஏற்றமிகு காலம்

எலுமிச்சை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் தொடங்கினால் விளைச்சலிலும், வருமானத்திலும் ஏற்றம் பெறலாம்.

எலுமிச்சை சிறப்புகள்:

  • எலுமிச்சையில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது. உடலுக்கும், மனதுக்கும் ஒருங்கே புத்துணர்ச்சி தருகிறது. கோடையில் குளிர்ச்சி தரும் பானம் தயாரிக்கவும், உணவுக்கு ருசி கூட்டும் ஊறுகாய் தயாரிக்கவும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

எலுமிச்சை சாகுபடி:

  • பி.கே.எம். 1 ரகத்தை தேர்வு செய்யலாம்.வடிகால் வசதியுள்ள வண்டல் மண் சிறந்தது.
  • டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலும், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலும் நடவுக் காலமாகும்.
  • வரிசைக்கு வரிசை 5 மீட்டர், செடிக்குச் செடி 5 மீட்டர் இடைவெளிவிட்டு நடவு செய்ய வேண்டும்.
  • இரண்டரை அடிக்கு, இரண்டரை அடி என்ற அளவில் குழி எடுக்க வேண்டும்.
  • நடவு செய்ததும் நீர்ப்பாய்ச்ச வேண்டும். மூன்றாம் நாள் உயிர்தண்ணீர் விடவேண்டும்.
  • பின்னர், தேவைக்கேற்ப 7 முதல் 10 நாள்களுக்கு ஒருமுறை நீர்ப்பாய்ச்சலாம்.
  • தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • சொட்டுநீர்ப் பாசனம் அமைப்பது சிறந்தது.

உர அளவு:

  • நடவு செய்யும்போது குழிக்கு 10 கிலோ தொழு உரம், 250 கிராம் வேப்பம்புண்ணாக்கு இட்டு நடவு செய்யலாம்.
  • ஓராண்டு வயது மரத்துக்கு 10 கிலோ தொழு உரம், 450 கிராம் யூரியா, 600 கிராம் சூப்பர் பாஸ்பேட், 160 கிராம் பொட்டாஷ் ஆகிய ரசாயன உரங்களை இட வேண்டும்.
  • ஒவ்வோர் ஆண்டும் மரத்துக்கு 5 கிலோ தொழு உரம், 220 கிராம் யூரியா, 150 கிராம் சூப்பர் பாஸ்பேட், 70 கிராம் பொட்டாஷ் உரங்களை அதிகரித்துக்கொண்டே வர வேண்டும்.
  • ஆறாம் ஆண்டுமுதல் ஒரு மரத்துக்கு ஆண்டுக்கு 30 கிலோ தொழு உரம், 1,350 கிராம் யூரியா, 1,250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 500 கிராம் பொட்டாஷ் வழங்க வேண்டும்.
  • யூரியாவை மார்ச் மாதமும், அக்டோபர் மாதமும் பாதிப் பாதியாகப் பிரித்து இட வேண்டும்.
  • தொழு உரம், சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ் ஆகியவற்றை அக்டோபரில் மட்டும் இட வேண்டும்.
  • 100 லிட்டர் தண்ணீருக்கு 500 கிராம் சிங் சல்பேட் கலந்து மார்ச், ஜூலை, அக்டோபர் என ஆண்டுக்கு மூன்று முறை புதுத் தளிர் வந்ததும் தெளிக்க வேண்டும்.

பின்செய் நேர்த்தி:

  • நிலத்தில் இருந்து ஒன்றரை அடி உயரம் வரை உள்ள கிளைகளை அகற்ற வேண்டும்.
  • ஒவ்வொரு மரத்துக்கும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 30 கிலோ பசுந்தழைகள் இட வேண்டும்.
  • காய்ப்பு தொடங்கும் வரை பயறு வகைகள், காய்கறிகளை ஊடுபயிராகச் சாகுபடி செய்யலாம்.

வளர்ச்சி ஊக்கிகள்:

  • பழம் பிடிப்பதை அதிகரிக்க 2-4 டி வளர்ச்சி ஊக்கியை பூக்கும் தருணத்தில் 100 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • பழம் உருவான பிறகு உதிராமல் இருக்க நாப்தலின் அசிடிக் அமிலம் 3 கிராமை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
  • இத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றும் எலுமிச்சை சாகுபடியாளர்களுக்கு உயர்மகசூலும், உன்னத லாபமும் கிடைப்பது உறுதி.
  • மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகங்களைத் தொடர்புகொள்ளலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *