கார்த்திகைப் பட்ட எள் சாகுபடி

கார்த்திகைப் பட்டத்தில் (நவம்பர் – டிசம்பர்) எள் சாகுபடி செய்யும் விவசாயிகள் நவீன தொழில் நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம், உயர் விளைச்சல் பெற முடியும் என்று வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.தருமபுரி உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநர் ந. மேகநாதன் கூறியது:
 ரகங்கள்:

  • கார்த்திகைப் பட்டத்தில் சாகுபடி செய்வதற்கு கோ-1, டிஎம்வி-3, டிஎம்வி-5, எஸ்விபிஆர்-1 ஆகிய ரகங்கள் தகுதியானவை.
  • எள் பயிரிடுவதற்கு மணல் பாங்கான வண்டல், செம்மண், கருவண்டல் நிலங்கள் ஏற்றவை.

 உழவு முறை:

  • எள் விதைகள் மிகவும் சிறியதாக இருப்பதால், விதைகள் நன்கு முளைக்க மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து, நுண்மைப்படுத்த வேண்டும்.
  • எனவே, நிலத்தை இரு முறை டிராக்டர் கலப்பையால் உழவு செய்ய வேண்டும்.இல்லையெனில், இரும்புக் கலப்பையால் மூன்று முறையோ அல்லது நாட்டுக் கலப்பையால் 5 முறையோ உழவு செய்ய வேண்டும்.
  • கடைசி உழவில் ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் இடவேண்டும்.
  • இறவை எள் சாகுபடிக்கு கிடைக்கும் நீர் மற்றும் நிலத்தின் சரிவைக் கணக்கிட்டு, 10 சதுர மீட்டர் அல்லது 20 சதுர மீட்டர் அளவுக்கு நீர் தேங்காத வகையில் நன்கு சமன் செய்யப்பட்ட பாத்திகள் அமைக்க வேண்டும்.

 விதை நேர்த்தி:

  • ஓர் ஏக்கருக்கு 2 கிலோ விதை போதுமானது. விதை மூலம் பரவும் நோய்களைத் தடுக்க ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கான்பன்டாசிம் அல்லது 4 கிராம் திரம் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விருடி என்ற அளவில் கலந்து, 24 மணி நேரம் காற்றுப் புகாத வகையில் வைத்திருந்து, உயிர் உர விதையை நேர்த்தி செய்ய வேண்டும்.
  •   ஒரு பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் ஒரு பாக்கெட் பாஸ்போ பாக்டீரியாவை ஆறிய அரிசிக் கஞ்சியில் கலந்து, ஓர் ஏக்கருக்குத் தேவையான விதையுடன் விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்திய பிறகு விதைப்பு செய்ய வேண்டும்.
  • விதைகள் சீராகப் பரவ 2 கிலோ விதையுடன் 8 கிலோ மணல் கலந்து நிலத்தின் மேற்பரப்பில் சீராக விதைக்க வேண்டும்.

 தொழில்நுட்ப முறைகள்:

  • விதைத்த 15ஆம் நாள் செடிக்கு, செடி 15 செ.மீ. இடைவெளி விட்டு, செடிகளைக் கலைந்து விட வேண்டும்.
  • 30ஆம் நாள் செடிக்கு, செடி 30 செ.மீ. இடைவெளி விட்டு மீண்டும் ஒரு முறை கலைந்து விடவேண்டும். மண் பரிசோதனைப்படி உரமிட வேண்டும். இல்லையெனில், பொதுப் பரிந்துறையான இறவை எள்ளுக்கு ஏக்கருக்கு 14:9:9 கிலோ தலை, மணி, சாம்பல் சத்து தரும் உரங்களை இடவேண்டும். விதைப்புக்குப் பின் ஓர் ஏக்கருக்கு 2 கிலோ மாங்கனீசு சல்பேட் நூண்ணூட்டச் சத்தை, நன்கு மக்கிய 8 கிலோ தொழுவுரத்தில் கலந்து சீராக தூவ வேண்டும்.
  •  களைகளைக் கட்டுப்படுத்த பென்டிமெத்தலின் 1.3 லிட்டர் களைக் கொல்லி மருந்தை 260 லிட்டர் தண்ணீரில் கலந்து, விதைத்த 3 நாள்களுக்குள் சீராகத் தெளிக்க வேண்டும். இல்லையெனில், 10 கிலோ மணலுடன் கலந்து சீராக தூவ வேண்டும்.
  • களைக் கொல்லி பயன்படுத்தாவிட்டால் விதைத்த 15 நாள்கள் கழித்து ஒரு கைக் களையும், 35 நாள்கள் கழித்து இரண்டாவது கைக் களையும் எடுத்து களைகளைக் கட்டுப்படுத்தலாம்.

 நீர்ப் பாய்ச்சுதல்:

  • மண்ணின் தன்மை, பருவ காலம் ஆகியவற்றைக் கணக்கிட்டு 5 அல்லது 6 முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும்.
  • முதல் முறை விதைத்தவுடன் 7ஆவது நாள் உயிர்த் தண்ணீர், 25ஆவது நாள் பூக்கும் தருவாயில் இரண்டு முறை, காய் பிடிக்கும் தருவாயிலும், முதிர்ச்சியடையும் போதும் இரு முறையாக 6 முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
  • இறவைப் பயிரில் 65 நாள்களுக்குப் பின் நீர் பாய்ச்சக் கூடாது.

 அறுவடை:

  • செடியில் கீழிருந்து 25 சதவீத இலைகள் உதிர்ந்து, காய்கள், தண்டு பாகங்கள் பழுப்பு நிறமாக மாறுவதே பயிர் அறுவடை செய்ய உகந்த காலமாகும்.
  • செடியின் அடியிலிருந்து மேலாக உள்ள 10ஆவது காயில் உள்ள விதைகள் கறுப்பாக மாறியவுடன் அறுவடை செய்தால், காய்கள் வெடித்துச் சிதறி ஏற்படும் மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *