கத்தரியில் காய்ப்புழுவைத் தடுக்கும் முறைகள்

தற்போதைய சூழ்நிலையில் கத்தரி தோட்டங்களை தண்டு மற்றும் காய்த்துளைப்பான் தாக்குதல் பரவலாக தென்பட்டு மகசூல் இழப்பை ஏற்படுத்தி வருகிறது.

  • பாதிக்கப்பட்ட குருத்துப் பகுதி மற்றும் தண்டுப் பகுதிகளை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும், செடிகளில் தோன்றும் காய்ப்புழுக்களை ஆள்கள் மூலம் சேகரித்து அழிக்கலாம்.
  • அந்த வேளையில் வயலில் விளக்குப் பொறிகள் அமைப்பதன் மூலம் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

உழவியல் முறைகள்:

  • தொடர்ந்து கத்திரி சாகுபடி செய்வதை தவிர்ப்பதன் மூலம் இந்த பூச்சியினை கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம்.
  • குட்டையான மற்றும் நீளமான காய்கள் கொண்ட ரகங்களை தேர்வு செய்து நடவு செய்வதால் கத்தரிக்காய் துளைப்பான் தாக்குதலை சமாளிக்கலாம்.
  • கத்திரி வயலைச் சுற்றிலும் இரு வரிசைகளில் மக்காச்சோளம் பயிரை பொறி பயிராக சாகுபடி செய்து காய்த்துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
  • தோட்டத்தைச் சுற்றிலும் உள்ள காய்துளைப்பானுக்கு இலக்காகும் கத்தி குடும்ப களைகளை அப்புறப்படுத்தி சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் பூச்சிகள் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்.

உயிரியல் முறைகள்:

  • பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை ஏக்கருக்கு 1500 மி. லிட்டரை 500 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.
  • பெவேரியா பேசியானா உயிரியல் காரணியினை ஒரு லிட்டர் நீருக்கு 3 மி.லி. வீதம் கலந்து தெளித்து இந்தப் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.
  • டிரைக்கோகிராம்மா கைலோனிஸ் ஹெக்டேருக்கு 5000 எண்கள் கத்தரி நடவு செய்த மூன்றாம் மாதம் முதல் வயல்களில் விட்டு இந்த பூச்சியினை கட்டுப்படுத்தலாம்.
  • இனக் கவர்ச்சி பொறிகள் ஒரு ஹெக்டேருக்கு 12 எண்கள் வீதம் உபயோகப்படுத்தி ஆண் பூச்சிகளை கவர்ந்து அழிப்பதன் மூலம் இப்பூச்சியை கட்டுப்பாட்டிற்குள் வைக்கலாம்.

ரசாயன முறைகள்:

  • எண்டோசல்பான் 35 இசி மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. வீதம் கலந்து இத்துடன் 3 மி.லி. வேப்ப எண்ணெய் கலந்து ஒரு டேங்குக்கான திரவத்துடன் 5 மி.லி. டீப்பால் ஒட்டும் திரவம் கலந்து 15 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தெளித்து இந்த பூச்சியினை கட்டுப்படுத்தலாம்.
  • மாலத்தியான் 50 இசி மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 1 மி.லி. வீதம் கலந்து தெளிப்பதன் மூலமும் இந்தப் பூச்சியை கட்டுப்படுத்தலாம் என்று தோட்டக்கலைத் துறை பரிந்துரை செய்துள்ளது.
  • கத்தரி காய்த்துளைப்பானை கட்டுப்படுத்தும் போது ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மேலாண்மை முறைகளை (உழவியல், உயிரியல், கைவினை, ரசாயன முறைகள்) கையாண்டு கத்தரிக் காய்த்துளைப்பான் மேலாண்மை செய்யலாம்.
  • மேலும் கத்தரிக்கு ரசாயன பூச்சிக்கொல்லி உபயோகப்படுத்தும்போது பரிந்துரை செய்த அளவுகளில் சரியான அளவில் நீர் கலந்து உரிய இடைவெளியில் தெளித்தால் நல்ல பலனை பெறலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “கத்தரியில் காய்ப்புழுவைத் தடுக்கும் முறைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *