கரும்பில் தாளை பூத்தலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

கரும்பில் நுண்ணூட்டப் பற்றாக்குறையால் ஏற்படும் பயிர் வெளுப்பை (தாளை பூத்தல்) கட்டுப்படுத்துவது குறித்த வழிமுறைகளை கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியது:

  • நிலங்களில் நுண்ணூட்டப் பற்றாக்குறை காணப்படுகிறது. துத்தநாகம், இரும்பு, மாங்கனீஸ், தாமிரச் சத்துகளின் குறைபாடு அதிகமாக உள்ளது.
  • இந்தச் சத்துகள் பயிர்களுக்குக் குறைவான அளவே தேவைப்பட்டாலும், பயிர் வளர்ச்சி மற்றும் மகசூலில் பங்கு வகிக்கின்றன.
  • இரும்புச் சத்துக் குறைபாடு: மண்ணிலுள்ள கால்சியத்தின் அளவைப் பொருத்து இரும்புச் சத்துக் குறைபாடு தென்படுகிறது.
  • அதாவது சுண்ணாம்புச் சத்து அதிகமுள்ள மண்ணில் இரும்புச் சத்துப் பற்றாக்குறை அதிகம் உள்ளது.
  • மண்ணில் வடிகால் அமைப்புகள் இல்லாத நிலையிலும், போதிய காற்றோட்டம் இல்லாவிட்டாலும் கூட, பயிர்களுக்கு இரும்புச் சத்து தேவையான அளவு கிடைக்காது.

கரும்பில் வெளுப்பு (தாளை பூத்தல்):

  • கரும்பைப் பொருத்த வரை, நட்ட பயிரை விட, கட்டைப் பயிரில் இரும்புச் சத்துக் குறைபாடு அறிகுறி அதிகம் தென்படுகிறது. இலையில் நரம்புக்கு இடைப்பட்ட பகுதி பச்சையம் குறைந்து, வெளுத்துக் காணப்படும்.

தடுக்கும் முறைகள்:

  • வழக்கமாக தாளை பூக்கும் பகுதிகளில் ஏக்கருக்கு 20 கிலோ அன்னபேதி உப்பை (இரும்பு சல்பேட்) இடலாம்.
  • இதை தொழு உரத்துடன் சேர்த்து இடுவது நல்ல பலனைத் தரும். இதே அன்னபேதி உப்பை கரும்புத் தோகைகளின் மீது கரைசலாகவும் தெளிக்கலாம்.
  • இதற்கு ஏக்கருக்கு அன்னபேதி உப்பு 2.25 கிலோ, நீர்த்த சுண்ணாம்பு 2.25 கிலோ ஆகியவற்றை 450 லிட்டர் தண்ணீரில் கரைத்து, நிலத்தில் ஈரம் இருக்கும்போது கைத் தெளிப்பான் மூலம் இலைகளில் நன்றாகப் படும்படி தெளிக்க வேண்டும்.
  • 15 நாள் இடைவெளியில் 2 அல்லது 3 முறை இரும்பு சல்பேட் கரைசலைத் தெளிக்கும்போது, கரும்பில் வெளுப்புத் தோன்றுவதை கட்டுப்படுத்தி, நல்ல மகசூலைப் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *