வெள்ளரி செடியை தரையில் படரவிடுவர். ஒட்டுரக வெள்ளரி செடியை கொடியில் வளரவிடும் பழக்கம் விவசாயிகளிடையே பரவி வருகிறது. இதன் மூலம் குறுகிய இடத்தில் அதிக செடிகளை வளர்க்க முடிகிறது. இதே பாணியில் பந்தலில் பெரிய பாகற்காய்களை விளைவிக்கிறார் விவசாயி கண்ணன்.
இவர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியை சேர்ந்தவர். வாடிப்பட்டி பகுதியில் நெல், கரும்பு விவசாயம் அமோகம். எனினும் விவசாயி கண்ணன் மாற்று விவசாயமாக பந்தல் பாகற்காய் விவசாயத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
பந்தல் பாகற்காய் விவசாயம்… லாபம் எப்படி? என்பது குறித்து கண்ணன் கூறியதாவது:
“யு.எஸ்.575′ ஒட்டுரக பெரிய பாகற்காய் விதை 50 கிராம் ரூ.350. வறட்சியால் பட்டுப்போன தென்னை மரங்களை அகற்றி விட்டு 50 சென்ட் நிலத்தில் பந்தல் அமைத்து பெரிய பாகற்காய் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளேன்.ரூ.18 ஆயிரம் செலவானது.
தோட்டக்கலைத்துறை மூலம் ரூ.3000 மானியம் கிடைத்தது. சின்னப்பாகற்காய் உற்பத்தி குறைவாகவும், விலை அதிகமாகவும் இருக்கும். பெரிய பாகற்காயில் உற்பத்தி அதிகமாகவும், விலை குறைவாகவும் இருக்கும். இரண்டிலும் சமச்சீர் சத்துக்கள் உள்ளன.
கூடுதலாகவோ, குறைவாகவோ இல்லை. கால்நடைகள் வளர்ப்பதால் அடி உரத்திற்கு பஞ்சமில்லை. கூடுதலாக காம்பளக்ஸ், பொட்டாஷ் உரம் வைக்க வேண்டும். காய் ஒன்று 350 முதல் 550 கிராம் வரை எடையுடன் வளர்கிறது. ஐந்து நாட்களுக்கு ஒருமுறை காய்கள் பறிப்போம்.
30 கிலோ கொண்டது ஒரு சிப்பம். ஐந்து நாட்களுக்கு ஒரு முறை நான்கைந்து சிப்பம் எடையில் காய்கள் கிடைக்கும். கிலோ ரூ.20 விலையில் உள்ளது. அவ்வப்போது விலை கூடும். குறையும். பாகற்காயின் சுவை கசப்பு. காய்கள் மூலம் கிடைக்கும் வருமானம் இனிப்பாக உள்ளது என்றார். தொடர்புக்கு: 09095730271.
-கா.சுப்பிரமணியன், மதுரை.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்