தொடர் காய்கறி சாகுபடி

எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட்டால் அதிக மகசூல் பெற்று கூடுதல் லாபம் ஈட்டலாம் என்பது குறித்து விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

நமது அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு காய்கறிகள் வகிக்கிறது. பெரியவர்களுக்கு 85 கிராம் பழமும், 300 கிராம் காய்கறிகளும் அன்றாடம் தேவை என ஆய்வுகள் கூறுகின்றன. தற்சமயம் உற்பத்தியாகும் காய்கறிகள் பெரியவர்களுக்கு சராசரியாக 220 கிராம் மட்டுமே கிடைக்கக் கூடியதாக உள்ளது.

காய்கறிகள் சாகுபடி குறுகிய காலத்தில் அதிக மகசூல் மற்றும் அதிக வருமானம் தரக்கூடியதாக உள்ளதால், வர்த்தக ரீதியில் காய்கறி சாகுபடி செய்வது தற்போதைய தேவையாக உள்ளது.

காய்கறிகளில் சாதாரண ரகங்கள் சாகுபடிக்கு கீழ்கண்டவாறு பருவங்களும் மாதங்களும் முன்னர் கடைபிடிக்கப்பட்டது.

  • தைப்பட்டம்: (டிசம்பர்-ஜனவரி) மாதத்தில் கத்தரி, பூசணி, புடல், பீர்க்கன்.
  • மாசிப்பட்டம்: (பிப்ரவரி, மார்ச்) மாதங்களில் தக்காளி, வெண்டை, காராமணி, மிளகாய், பூசணி, புடல், பீர்க்கன்,வெள்ளரி,
  • ஆடிப்பட்டம்: (ஜூன், ஜூலை) மாதங்களில் தக்காளி, வெண்டை, காராமணி, மிளகாய், பூசணி, புடல், பீர்க்கன், வெள்ளரி

என அந்தந்த பட்டங்களில் அதற்குரிய காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வந்தனர்.

தற்சமயம் வீரிய ஒட்டுரக காய்கறிகள் அறிமுகமான பின்னர், என்னவகையான காய்கறிகளை சாகுபடிக்கு தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து கோலியனூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் க. வீராசாமி கூறியது:

  • ஜனவரி: (மார்கழி, தை) கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி, கீரைகள்.
  • பிப்ரவரி: (தை,மாசி) கத்தரி, தக்காளி, மிளகாய், பாகல், வெண்டை, சுரை, கொத்தவரை, பீர்க்கன், கீரைகள், கோவைக்காய்.
  • மார்ச்: (மாசி, பங்குனி) வெண்டை, பாகல், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கன்.
  • ஏப்ரல்: (பங்குனி, சித்திரை) செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை.
  • மே: (சித்திரை, வைகாசி) செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை.
  • ஜூன்: (வைகாசி, ஆனி) கத்தரி, தக்காளி, கோவை, பூசணி, கீரைகள், வெண்டை.
  • ஜூலை: (ஆனி, ஆடி) மிளகாய், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி.
  • ஆகஸ்ட்: (ஆடி, ஆவணி) முள்ளங்கி, பீர்க்கன், பாகல், மிளகாய், வெண்டை, சுரை.
  • செப்டம்பர்: (ஆவணி, புரட்டாசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கன், பூசணி.
  • அக்டோபர்: (புரட்டாசி, ஐப்பசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி.
  • நவம்பர்: (ஐப்பசி, கார்த்திகை) செடிமுருங்கை, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி.
  • டிசம்பர்: (கார்த்திகை, மார்கழி) கத்தரி, சுரை, தக்காளி, பூசணி, முள்ளங்கி, மிளகாய் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

இங்கு குறிப்பிட்டவைகளில் அந்த காலகட்டத்தில் எந்த காய்கறிக்கு மார்க்கெட் விலை அதிமகமாக உள்ளது என்பதை அறிந்து பயிரிட்டால் கூடுதல் லாபம் பெறலாம் என்றார் வீராசாமி.

தோட்டக்கலைத் துறையில் உள்ள துல்லிய பண்ணைத் திட்டத்தின் கீழ் 65 சதவீத மானிய விலையில் சொட்டு நீர்ப்பாசன உதவிகள் மற்றும் ரூ. 15,000 மதிப்பில் நீரில் கரையும் உரம் ஆகிய இடுபொருள்களுக்கான மானிய உதவிகளைப் பெற்று காய்கறி சாகுபடி செய்ய முன்வருமாறு பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *