ரசாயன உரங்களை குறைக்க கரும்பு பயிருக்கு பசுந்தாள் உரம்

ரசாயன உரங்கள் செலவைக் குறைக்க, கரும்பு பயிருக்கு தக்கைப் பூண்டு, சணப்பை பசுந்தாள் உரமிடுவதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இயற்கையான முறையில் மண்ணிலிருக்கும் நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், கந்தகம், இரும்பு சத்துக்களையும் காற்று மற்றும் நீரிலுள்ள தாதுப்பொருட்களையும் சேமித்து பூச்சிகள் மற்றும் நோய்களிலிருந்து காத்து வேளாண் பயிர்கள் வளர்ந்து, காய், கனிகள், தானியங்கள், பூக்கள், கிழங்குகளை உற்பத்தி செய்கின்றன.

மண்ணில் இயற்கையாக கலந்துள்ள ஊட்டச்சத்துக்கள் நாளுக்கு நாள் குறைந்துவருவதால், செயற்கை உரங்களுக்கு விவசாயிகள் மாறினர். ஆனால், ரசாயன உரங்கள், பூச்சி கொல்லிகள் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கும் தீங்கு விளைவிப்பதோடு, உரங்கள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளன.

இதனால், கடலூர் மாவட்டம், விருத்தாசலம், பெண்ணாடம், ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா, குறுவை, சொர்ணவாரி பட்டங்களில் இயற்கை உரமிட்டு நெல் சாகுபடி செய்கின்றனர். இதற்காக, ஆடு, மாடுகள் கிடைகட்டியும்; சணப்பை, தக்கை பூண்டு பசுந்தாள் உரமிட்டும் மண்வளத்தை மேம்படுத்துகின்றனர்.

மூன்று முதல் ஆறு மாத பயிரான நெல் சாகுபடிக்கு மட்டுமே பயன்படுத்தி வந்த தக்கை பூண்டு, சணப்பை பசுந்தாள் உரங்களால் ரசாயன உரங்கள் செலவு குறைந்தன. இதனால், இயற்கை முறையில் தரமான விளைபொருட்கள் கிடைத்தன.

இதனால், பெண்ணாடம் பகுதி விவசாயிகள் கரும்பு பயிர்களுக்கும் பசுந்தாள் உரங்களைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.

அரியராவி விவசாயி ரங்கநாதன் கூறுகையில், “யூரியா 283 ரூபாய், டி.ஏ.பி., 1300-1400, பொட்டாஷ் 840, காம்ப்ளக்ஸ் 1,125 ரூபாய்க்கு விற்கின்றன. ஒரு ஏக்கர் கரும்புக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை உர செலவாகிறது. இப்பகுதியில் 50 முதல் 60 டன் வரை அறுவடை செய்யலாம். களையெடுப்பு, உரமிடல், கரும்பு வெட்டுதல் என அறுவடை வரை 70 முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. இதனால், உரத்திற்கான செலவை குறைக்க தக்கைப் பூண்டு, சணப்பை போன்ற பசுந்தாள் உரங்களை இடுகிறோம்’ என்றார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *