அரியலூர் ஊரே அழியும் அபாயம்!

அரியலூரில்  சிமெண்ட் ஆலைகள் ஏற்படுத்தும் மாசை பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். அரியலூரில் இப்போதைய நிலை பற்றிய ஒரு செய்து தொகுப்பு, ஆனந்த விகடன் இருந்து…

இன்னும் 35 ஆண்டுகளில் அரியலூர் என்ற நகரமே அழிந்துவிடும். இன்னும் கொஞ்ச காலத்தில் இந்த மாவட்டத்தை வரைப் படத்தில் தான் பார்க்க முடியும், நேரில் முடியாது என்ற நிலை தற்போது வந்துவிட்டது. மக்களில் பலர் நோய்நொடிகளின் கொடூரத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு ஆங்காங்கே இறந்துவருகின்றனர். இந்த அவல நிலைக்கு அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும்தான் காரணம் என்று அதிர்ச்சி தகவல் அளித்துள்ளது ‘உண்மை கண்டறியும் குழு’.

சிமெண்ட்  நகரம் அரியலூர் மாவட்டம். சோழ மன்னன் ராஜேந்திர சோழனின் தலைநகராக இருந்த  கங்கை கொண்ட சோழபுரத்தை உள்ளடக்கியது அரியலூர். இம்மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிமெண்ட் ஆலைகள் இயங்கி வருகின்றன. 166க்கும் மேற்பட்ட சுண்ணாம்பு சுரங்கங்களும் இருக்கின்றன. இங்கு உற்பத்தி செய்யும் சிமெண்ட்,வெளிமாநிலங்கள் மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அரியலூர் மாவட்டம் பின் தங்கிய மாவட்டமாக இருந்தாலும் அதிக வருமானம் தரக்கூடிய மாவட்டங்களில் அரியலூரும் ஒன்று. இப்படி வரலாற்று சிறப்பு மிக்க மாவட்டம், தற்போது வாழவே தகுதியில்லாத நகரமாக மாறியுள்ளது. இது குறித்து உண்மை அறியும் குழுவினரைச் சந்தித்துப் பேசினோம்.

அந்தக் குழுவின் தலைவரும், தமிழக மக்கள் முன்னணி தலைவருமான அரங்க. குணசேகரன் கூறுகையில், “கனிம வள கொள்ளையில் முதல் பலியானது அரியலூர் மாவட்டம் தான். மீத்தேன், நியூட்ரினோ, கெயில், ஷேல்கேஸ் போன்ற திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விதியில் வந்து போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் இதற்கு முன்பே 1990களிலிருந்து மிகப்பெரிய கனிமவள கொள்ளை அடிக்கப்பட்டதும் இம்மாவட்டத்தில் தான். ஆனால் அரசியல் கட்சிகளும் அதிகாரிகளும் வாய்முடி இருக்க என்ன காரணம் என்று தெரியவில்லை. தற்போது அரசு  சிமெண்ட் ஆலைகளால் ஆண்டிற்கு ஐந்து லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. 11 ஆயிரம் லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆலையை விரிவுபடுத்த போவதாகவும் சொல்கிறார்கள்.இன்னும் எத்தனை லட்சம் லிட்டர் தண்ணீர் எடுப்பார்கள் என்று தெரியவில்லை. இங்கு தண்ணீர் பிரச்னை தலைவிரித்து ஆடுகிறது. இம்மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிமெண்ட் ஆலைகளும், 166க்கும் மேற்பட்ட சுண்ணாம்பு சுரங்கங்களும்இருக்கின்றன. அப்போ வருடத்திற்கு எத்தனை லட்சம் டன் மண்ணை வெட்டுவார்கள். எவ்வளவு தண்ணீரை உறிஞ்சுவார்கள், இப்படி எடுத்தால் என்ன ஆகும் இந்த மாவட்டம். கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

நாங்கள் குழுவாகச் சென்று ஆலத்தியூர், ஆதனகுறிச்சி, மணக்குடையான், துளார், பெரியாகுறிச்சி என்று ஐந்து பஞ்சாயத்துகளில் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் சென்று கள ஆய்வு செய்தோம். ராம்கோ, சங்கர், இந்தியா சிமெண்ட் போன்ற தனியார் சிமெண்ட் ஆலைகள் இங்குள்ள விவசாயிகளிடம் குறைந்த விலையில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தியது. அப்போது, இந்த மாவட்ட மக்களிடம் நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு, மருத்துவமனை, இப்பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகள் கட்டித் தருகிறோம், குடிநீர் வசதி, தடையற்ற மின்சாரம் கொடுக்கிறோம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள்.

அந்த வாக்குறுதிகள் எதையும் செய்யவில்லை. அதுமட்டுமில்லாமல், இங்குள்ள ஒவ்வொரு சுண்ணாம்பு சுரங்கங்களையும் 200 அடி முதல் 300 அடி வரை தோண்டியுள்ளார்கள். இங்கு 166க்கும் மேற்பட்ட சுரங்கங்கள் உள்ளன. எங்கு பார்த்தாலும் சுண்ணாம்பு சுரங்கமாகவே உள்ளது. இதில் முக்கால்வாசி சுரங்கங்களை மூடாமல் வைத்துள்ளனர்.

நான்கு வருடங்களுக்கு முன்பு சேலம், திருச்சி, நகரத்தை மையப்படுத்தி லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது அரியலூரை மையப்படுத்தி வந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் தனியார் சிமெண்ட் ஆலைகள் சுரங்கம் தோண்டுவதை நிறுத்தியபாடும் இல்லை. ஒரு சுரங்கம் இருந்தால் அடுத்த சுரங்கம் ஐநூறு அடி தள்ளித்தான் தோண்ட வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால் இங்கு ஐந்து அடிக்கும் பத்தடிக்கும் அருகில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் எவ்வளவு விதிமீறல்கள் நடைபெற்றுவருகின்றன. இதை, எப்போதாவது அதிகாரிகள் பார்வையிட்டுள்ளார்களா அல்லது அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்களா?.

ஆலை தரப்பினர் கட்சிக்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மாதமாதம் கொடுக்க வேண்டியதை கொடுத்து கொண்டிருப்பதால், எந்த அதிகாரிகளும் கண்டுகொள்வதுமில்லை. எங்கு பார்த்தாலும் பள்ளங்களாய் காட்சியளிக்கிறது மாவட்டம். இந்தப் பகுதியில் நிலநடுக்கம் கண்டிப்பாக வரும் என்று ஆய்வாளர்கள் சொல்லியுள்ளார்கள். அப்படி வந்தால் அரியலூர் என்ற ஊரே இல்லாமல் போய்விடும் என்று தகவல் அளித்துள்ளனர். தனியார் சிமெண்ட் ஆலைகள் மக்களை அழித்து கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள். ஆனால் மக்கள் நோய்வாய்பட்டு விதியில் சாகிறார்கள். எவ்வளவு வேதனையான விஷயம்” என்று வேதனை தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து உழவர் உழைப்பாளர் இயக்கத்தின் தலைமை ஆலோசகர் கோ.திருநாவுக்கரசிடம் பேசினோம். அவர், “ஒருசிலர் கொள்ளை அடிப்பதற்கு மக்களை பலிகடாவாக ஆக்குகிறார்கள். ஆலையில் இருந்து வெளிவரும் புகையால்  பலர் நுரையீரல் பிரச்னை, ஆஸ்துமா, கேன்சர் போன்ற கொடிய நோய்களில் இறந்து கொண்டிருக்கிறார்கள். தஞ்சாவூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு சுவாச பிரச்னை சம்பந்தமான நோய்கள், சிறுநீரக கோளாறு என பலவிதமான நோய்கள் வருகின்றன. கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற பிரச்னைகளால் இறந்த குடும்பத்திற்கு நஷ்ட ஈடு கொடுத்ததுண்டா?

இப்பகுதியில் ஊர் முழுக்கவே நானூறு அடிக்கும் மேல் சுண்ணாம்பு வெட்டி எடுக்கிறார்கள். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதோடு, பூகம்பம் வருவதற்கும், கடல் நீர் உள்ளே புகவும் வாய்ப்புள்ளது.

கேரளாவில் 45க்கும் மேற்பட்ட ஆறுகள் இருக்கின்றன. அங்கு ஆற்றில் இருந்து மண்ணை எடுக்காமல் மாற்று முயற்சியை செய்கிறார்கள். ஆனால் நாம் மட்டும்தான் விளைவுகளை அறியாமல் இம்மாவட்டத்தில் சுண்ணாம்பு கல் கிடைக்கிறது என்பதற்காக கோடிக்கணக்கில் உற்பத்தி செய்து வெளிமாநிலத்துக்கும், வெளி நாடுகளுக்கும் அனுப்புகிறார்கள். இங்கு உற்பத்தி செய்வதை தமிழ்நாட்டில் மட்டும் பயன்படுத்துங்கள். சுண்ணாம்பு சுரங்கங்கள் மூடப்படாமல் திறந்து கிடப்பதால் மக்கள், கால்நடைகள், விவசாயத்திற்கும் பேரழிவுகள் உண்டாகின்றன.

இதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன. இவ்வளவு விதி மீறல்கள் இம்மாவட்டத்தில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தண்ணீர், காற்று, விளைநிலங்கள் என எல்லாமே மாசு அடைந்துள்ளன. வாழவே தகுதியில்லாத மாவட்டமாக மாறியுள்ளது அரியலூர். நிலங்களை கையகப்படுத்தும் போது என்னென்ன கோரிக்கைகள் கொடுத்தார்களோ அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இது இவர்களுக்கு இறுதி எச்சரிக்கை. சுண்ணாம்பு சுரங்கங்களை மூட வேண்டும். ஆலைகளை விரிவுபடுத்தக் கூடாது, சிமெண்ட் ஆலைகளை  மூடவேண்டும்.  இல்லையென்றால் பல கட்சிகளை ஒருங்கிணைத்து  பல கட்ட போராட்டங்களைத் தீவிரமாக  உள்ளோம்” என்று முடித்தார்.

நன்றி: ஆனந்த விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *