கோமாரி நோயைக்கு மூலிகை மசால் உருண்டைகள்

கோமாரி நோய் உள்பட பல்வேறு நோய்களில் இருந்து கால்நடைகளைப் பாதுகாக்க மூலிகை மசால் உருண்டைகளை வழங்கலாம் என்று கால்நடைகள் ஆராய்ச்சியாளரும், ஜெயம் பிராணிகள் நல அறக்கட்டளைத் தலைவருமான கே.வி.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் புதன்கிழமை கூறியதாவது:

கால்நடைகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது மூலிகை மசால் உருண்டை. ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை மூலிகை மசால் உருண்டை தயார் செய்து கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகி, கோமாரி, தொண்டை அடைப்பான், சப்பை நோய் மற்றும் பிற தொற்று நோய்களும் தாக்காது.

தயார் செய்வது எப்படி?:

மூலிகை மசால் உருண்டைகளைத் தயார் செய்ய கீழ்க்கண்ட எளிதில் கிடைக்கும் மூலிகைகள் ஒவ்வொன்றிலும் 100 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் கடைச் சரக்குகளை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொண்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து மூலிகைகளை ஆட்டுக்கல் அல்லது பழைய உரலில் இட்டு நன்கு இடித்துக் கொள்ள வேண்டும். அல்லது கிரைண்டரிலும் அரைத்துக் கொள்ளலாம்.

அரைத்து வைத்துள்ள கடைச் சரக்கு மற்றும் மூலிகைகளை பெரிய தட்டில் வைத்து ஒன்றாக நன்கு பிசைந்து ஆரஞ்சு பழ அளவுக்கு உருண்டைகளாக உருட்டி எடுத்து மஞ்சள் தூளில் பிரட்டி வைத்துக் கொள்ளவேண்டும்.

மேற்கண்ட கலவையை 40 மாடுகளுக்கோ, 100 ஆடுகளுக்கோ கொடுக்கலாம்.

மூலிகைகளை அந்தந்த ஊர்களில் கிடைப்பதைக் கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம். கிடைக்காத மூலிகைகள் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.

மூலிகைகள் கிடைக்கும்போது எடுத்து, நிழலில் உலர்த்தி நன்கு காய்ந்ததும் மிக்ஸியில் அரைத்தும் மசால் உருண்டைகளாகத் தயார் செய்து எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மசால் உருண்டைகளை கால்நடைகளுக்கு வயிற்றுப் போக்கு உள்ள போதும், தொற்று நோய்த் தாக்குதல் இருக்கும் போதும், மந்தம், செரியாமை இருந்தாலும் வழங்கலாம்.

மாட்டுக்கு மசால் உருண்டை ஊட்டுகிறார் கால்நடை ஆராய்ச்சியாளர் கே.வி.கோவிந்தராஜ். Courtesy: Dinamani
மாட்டுக்கு மசால் உருண்டை ஊட்டுகிறார் கால்நடை ஆராய்ச்சியாளர் கே.வி.கோவிந்தராஜ். Courtesy: Dinamani

 

 

 

 

 

 

 

 

மூலிகை மசால் உருண்டை தயாரிக்க தேவையானவை:

1.அருகம்புல் 2. ஆவராம் பூ, இலை 3. வெள்ளை மற்றும் மஞ்சள் கருசலாங்கன்னி 4. சோற்றுக் கற்றாழை 5. ஆடா தோடா 6. வாத நாராயணன் இலை

7. ஓரிதழ் தாமரை 8. செம்பருத்தி 9. தும்பை 10. அழுதாழை 11. பெரியா நங்கை 12. சிறியா நங்கை 13. அமுக்கரா 14. அம்மாள் பச்சரிசி 15. வாழைப்பூ, 16. வெற்றிலை 17. பிரண்டை, 18. துத்தி 19. மாவிலை 20. வல்லாரை 21. துளசி 22. முடக்கத்தான் 23. மனத்தக்காளி 24. புதினா 25. நெருஞ்சி 26. நெல்லிக்காய் 27. நுணா 28. பொன்னாங்கன்னி 29. நல்வேளை 30. நாய்வேளை 31. பால்பெருக்கி 32. குப்பைமேனி 33. கோவை இலை 34. மொசு மொசுக்கை 35. கருவேப்பிலை 36. கீழாநெல்லி 37. அகத்தி 38. சரக்கொன்றை 39. நிலவேம்பு 40. வேலிப்பருத்தி 41. வெட்டிவேர் 42. மருதாணி 43. வில்வஇலை 44. விஷ்ணுகிரந்தி 45. மாதுளம் பழம், தோல் 46. தவசி முருங்கை 47. அப்பக்கோவை 48. அல்லி, 49. தாமரை 50. அரசு இலை 51. வேப்பிலை 52. தூதுவளை 53. தொட்டாச் சிணுங்கி 54. எலுமிச்சை இலை 55. கொய்யா இலை 56. ஆல் இலை

சமையல் அறைச் சாமான்கள்:

1. சுக்கு 2. மிளகு 3. திப்பிலி 4. பூண்டு 5. அகில் 6. மிளகாய் வற்றல் 7. கிராம்பு 8.ஜாதிக்காய் 9. கடுக்காய் 10. வெந்தயம் 11. அதிமதுரம் 12. சீரகம் 13. கசகசா 14. ஓமம் 15. உப்பு 16. தண்ணீர் விட்டான் கிழங்கு 17. சிறிய வெங்காயம் 18. கொத்தமல்லி விதை 19. பெருங்காயம் 20. தேங்காய் 21. பனைவெல்லம் 22. ஏலக்காய் 23. மஞ்சள்தூள்.

தயார் செய்யப்பட்ட மூலிகை உருண்டைகளை மேற்கூறியுள்ளபடி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கால்நடைகளுக்கு கொடுத்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். கால்நடைகள் சுறுசுறுப்புடனும், ஆரோக்கியத்துடனும் வாழும்.

மேலும், கூடுதல் தகவல் அறிய 09842704504 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *