மானாவாரியில் பனிவரகு சாகுபடி!

மானாவாரியாக விளைவிக்கப்படும் சிறுதானியங்களில் பனிவரகுக்கு முக்கிய இடமுண்டு. குளிர்காலங்களில் அதிகாலையில் பெய்யும் பனியிலேயே இது வளர்ந்து விடும். அதனால்தான், இதற்கு பனிவரகு என்று பெயர். இந்தப் பயிரை ஜீரோ பட்ஜெட் முறையில் சாகுபடி செய்திருக்கிறார், திருப்பூர் மாவட்டம், பெதப்பம்பட்டி அடுத்துள்ள கொங்கல்நகரம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் எஸ்.சின்னச்சாமி.

தொழுவத்தில் கட்டியிருந்த நாட்டு மாட்டுக்கு தீவனம் வைத்துக்கொண்டிருந்த சின்னச்சாமியைச் சந்தித்தோம். “இந்த ஊர்தான் பூர்விகம். இங்க மொத்தம் 12 ஏக்கர் நிலம் இருக்கு. தென்னை, வாழை, மா, நெல்னு சாகுபடி பண்றேன். எல்லாமே ரசாயன விவசாயம்தான். இயற்கை விவசாயத்துக்கு மாறணும்னு ஆசை இருந்தாலும்… வேலைக்குப் போய்க்கிட்டே விவசாயம் பார்த்துக்கிட்டு இருந்ததால் அதுக்கான சூழல் அமையலை. ஆனாலும், பசுமை விகடனைத் தொடர்ந்து படிச்சு, அதுல வர்ற இயற்கை விவசாயம் குறித்த  விஷயங்களை எழுதி வெச்சுக்குவேன். இப்ப, பணி ஓய்வு கிடைச்சிட்டதால இயற்கை விவசாயத்துல இறங்கிட்டேன்.

மொத வேலையா ஒரு  நாட்டு மாட்டை வாங்கினேன். இப்போதான் ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், அக்னி அஸ்திரம், அமுதக்கரைசல்னு தயார் செய்துகிட்டு இருக்கேன்” என்ற சின்னச்சாமி தொடர்ந்தார்.

அரை ஏக்கரில் ஆரம்பம்!

“சோதனை அடிப்படையில அரை ஏக்கர்ல மட்டும் முழு இயற்கை விவசாய முறையில பனிவரகு சாகுபடி செய்திருக்கேன். இது மானாவாரி நிலம். இதுவரை இந்த நிலத்துல கையளவு கூட ரசாயன உரம் போட்டதில்லை. அதனாலதான் இந்த நிலத்தைத் தேர்வு செய்தேன்.

வழக்கமா மானாவாரி வெள்ளாமைன்னா, ஆடி மாசத்துல விதைப்பாங்க. ஆவணி மாசத்துல பெய்ற தூறல்ல பயிர் முளைக்கும். புரட்டாசி மாசம் களையெடுத்தா ஐப்பசி மழையில நல்லா வளர்ந்து வரும். தை மாசம் அறுவடைக்கு வந்துடும். ஆனா, இந்தப் பகுதியில கரிசல் மண் அதிகமா இருக்குறதால அடைமழை காலத்துல விவசாயம் செய்ய முடியாது. மழை நேரத்துல மண் புதைகுழி மாதிரி ஆயிடும். அதனால, மார்கழிப் பட்டத்துல பனிக்கடலை, பனி மல்லி, பனிவரகுனு மட்டும்தான் சாகுபடி செய்ய முடியும். இந்தப் பயிர்களுக்கு தண்ணீர் தேவைப்படாது. அதிகாலையில பெய்ற பனியிலேயே வளந்துடும். நான் சாகுபடி செய்ற பனிவரகு சிறுதானிய வகைப் பயிர். இதோட வயசு 75 நாள்தான். ஆனா, இறவையில பண்ணும்போதுதான் சரியான நாள்ல அறுவடைக்கு வரும். மானாவாரியா சாகுபடி செய்யும்போது 85 நாள் ஆயிடும். முன்னாடி இந்தப் பகுதியில அதிகமா பனிவரகு சாகுபடி நடக்கும். இப்போ அருகிப்போச்சு. நானே தேடிப்பிடிச்சுதான் விதைச்சிருக்கேன்.

விதை 4 கிலோ… விளைச்சல் 400 கிலோ!

ஒரு கிலோ 65 ரூபாய்னு 4 கிலோ விதை வாங்கிட்டு வந்து மார்கழி மாசம் ரெண்டாம் வாரத்துல விதைச்சேன். பொதுவா, பனிவரகு சாகுபடிக்கு கோடையில ஒரு உழவு போடணும். அடுத்து மார்கழி மாசம் தொழுவுரம் போட்டு ஒரு உழவு ஓட்டி விதைச்சு விட்டா போதும். தேவைப்பட்டா களையெடுக்கணும். அவ்வளவுதான்… தானா முளைச்சு வந்துடும்.

நான், கூடுதலா ஜீவாமிர்தம் மட்டும் கொடுத்தேன். அதனால விளைச்சல் அதிகமா கிடைச்சிருக்கு. வழக்கமா மானாவாரி சாகுபடியில் அரை ஏக்கர் நிலத்துல 250 கிலோ அளவுதான் மகசூல் கிடைக்கும். நான், 400 கிலோ அறுவடை செய்தேன். மொத்தம் 5 ஆயிரம் ரூபாய் செலவு செய்திருக்கேன். இப்போதைக்கு ஒரு கிலோ 40 ரூபாய்னு விற்பனையாகுது. நான், வீட்டு உபயோகத்துக்கு 200 கிலோ வெச்சுக்கிட்டு 200 கிலோவை மட்டும் விற்பனை செய்யலாம்னு இருக்கேன்” என்ற சின்னச்சாமி நிறைவாக,

“சோதனை அடிப்படையில செய்து பார்த்ததுல நல்ல பலன் கிடைச்சிருக்கு. அடுத்து 12 ஏக்கர் நிலத்தையும் படிப்படியா ஜீரோ பட்ஜெட் விவசாயத்துக்கு மாத்திடுவேன். அதில்லாம இந்தப் பகுதியில அழிஞ்சு போயிருக்கிற பனிவரகு சாகுபடியையும் மீட்டு எடுக்கப் போறேன். இன்னும் ரெண்டு வருஷத்துக்குள்ள குறைஞ்சது நூறு ஏக்கர்லயாவது பனிவரகு சாகுபடியைச் செழிக்க வெச்சிடுவேன்” என்றார் நம்பிக்கையுடன்.

பனி வரகு, அனைத்து மண்ணிலும் வளரும். சாகுபடி நிலத்தை, புழுதி பறக்க மூன்று முறை கோடை உழவு செய்ய வேண்டும். கார்த்திகைப் பட்டத்தில் கிடைக்கும் மழையில் மண் ஈரத்தன்மையோடு இருக்கும். தொடர்ந்து மீண்டும் ஒரு முறை உழவு செய்து மண்ணைப் புரட்டிப் போட வேண்டும். அரை ஏக்கர் நிலத்துக்கு 4 கிலோ விதையை விதைத்து உழவு செய்ய வேண்டும்.வேறு எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. தேவையைப் பொறுத்து ஒரு களை எடுக்கலாம். மார்கழிப் பனியில் நன்றாக வளர்ந்து வந்து விடும்.

பெரும்பாலும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இருக்காது. இறவையில பனி வரகு சாகுபடி செய்யும் போது, இரண்டு அல்லது மூன்று முறை பாசனம் செய்யலாம். ஒவ்வொரு பாசனத்தின் போதும், 100 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்து விட வேண்டும். கதிர் முற்றியதும் கதிரை மட்டும் அறுத்து களத்தில் கொட்டி காய வைத்து, குச்சியை வைத்து தட்டி, வரகை தனியாகப் பிரித்து எடுக்க வேண்டும்.

தொடர்புக்கு,
எஸ்.சின்னச்சாமி,
செல்போன்: 09965165963.


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *