ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் வறட்சியை சமாளிக்க குதிரைவாலி சிறுதானிய சாகுபடி செய்ய வேளாண்மைத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மை சாகுபடி பணிகள் வடகிழக்கு பருவமழையை நம்பியே நடைபெறுகிறது. முக்கிய பயிரான நெல் சாகுபடி ஏறத்தாழ 1.30 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. நெல் சாகுபடி பெரும்பாலும் முன் பருவ விதைப்பாக மழையை எதிர்பார்த்து விதைக்கப்படுகிறது.
இதேபோன்று சிறுதானிய பயிர்களான சோளம், கம்பு, கேழ்வரகு மற்றும் குறுதானிய பயிரான குதிரைவாலி போன்ற பயிர்கள் செப்டம்பர் முதல் வாரத்தில் மானாவரி விதைப்பாக விதைக்கப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு இல்லாததால் சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிரில் மகசூல் பாதிப்பு ஏற்பட்டது.
அனால் அதே ஆண்டுகளில் 7 ஆயிரத்து 300 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட சிறுதானிய பயிர்களில் பாதிப்பின்றி முழுவதுமாக மகசூல் கிடைத்தது. எனவே விவசாயிகள் வறட்சியை தாங்கி வளரக்கூடிய குதிரைவாலி போன்ற சிறுதானிய பயிர்களை பயிரிடுவதால் வறட்சி காலங்களிலும் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
- குதிரைவாலி குறைந்த தண்ணீரில் வளரக்கூடிய சிறந்த தானிய பயிராகும்.
- ஒரு ஏக்கர் குதிரைவாலி பகுதி மானாவாரியாக சாகுபடி செய்திட ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை செலவாகிறது.
- ஒரு ஏக்கருக்கு 600 முதல் 800 கிலோ வரை தானிய மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது.
- குதிரைவாலி ஒரு கிலோ ரூ.20 முதல் 25 வரை விற்பனையாகிறது. ஒரு ஏக்கரில் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை வருமானம் வர வாய்ப்புள்ளது.
- முழு மானாவாரியாக குதிரைவாலி பயிரினை சாகுபடி செய்யும் பட்சத்தில் ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும்.
- ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள், இயல்பான நெல் சாகுபடி செய்யும் பரப்பில் குறைந்தது 10 சதவீதம் குதிரைவாலி சிறுதானிய பயிரை சாகுபடி செய்தால், வறட்சிக் காலங்களிலும் நம்பகமான குறைந்தபட்ச வருமானம் கிடைக்கும்.
- எனவே விவசாயிகள் குறைந்த தண்ணீர் தேவையுள்ள குதிரைவாலி பயிரினை சாகுபடி செய்து பயனடையலாம் என ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நன்றி: தினகரன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்