குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படும் வீரிய மக்கா சோளம்

குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படும் வீரிய ஒட்டுரக மக்கா சோளத்தை சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெறலாம் என்று சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  • மக்கா சோளம் கால்நடை தீவனமாகவும், சமையல் எண்ணெய் எடுப்பதற்காகவும் பயன்படுவதோடு தொழிற்சாலைகளில் மக்காச்சோளம் ஸ்டார்ச், பிரீவர்ஸ், மக்காச்சோளம், மைதா, சிரப், சர்க்கரை, குளுக்கோஸ் போன்ற பல பொருட்கள் தயரிக்கவும் பயன்படுகிறது.
  • இதில் கோ- 1, கே- 1, கங்கா- 5, கே.எச் -1,2,3, கோ.எச்.எம் -5, எம் -900, எம்.ஹைசெல், சின்ஜென்டா, என்.கே -6240, பயனீர்- 30 வி- 62, பயனீர்- 30 வி – 92 மற்றும் பிக்பாஸ் ஆகியன முக்கிய வீரிய ஒட்டு ரகங்களாகும்.
  • ஏக்கருக்கு 6 கிலோ விதை பயன்படுத்த வேண்டும். விதை மூலம் பூசன நோயை தடுக்க 1 கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோ டெர்மா விரிடி என்ற உயிரியல் பூசான கொல்லியை கலந்து 24 மணிநேரம் வைத்திருந்து பின்பு விதைக்க வேண்டும்.
  • இத்துடன் உயிர் உரவிதை நேர்த்தியும் செய்யவேண்டும். 1 ஏக்கருக்கு 500கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவை ஆரிய வடி(அரிசி)கஞ்சியில் கலந்து அதனுடன் பூசன விதை நேர்த்தி செய்த விதையை கலந்து நிழலில் அரை மணிநேரம் உளர்த்தி பின்பு 60க்கு 20 செ.மீ. இடைவெளியில் அதாவது பாருக்கு பார் 60 செ.மீ செடிக்கு செடி 20 செ.மீ இடைவெளியில் ஒரு குழிக்கு ஒரு விதை வீதம் 4 செ.மீ ஆழத்தில் விதையை ஊன்ற வேண்டும் ஒரு ச.மீ 8 செடிகளும் ஒரு ஏக்கரில் 32240 செடிகளும் இருக்குமாறு பயிர் எண்ணிக்கையை பராமரிக்கவேண்டும். விதைப்புக்கு முன் 1 ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் அல்லது தென்னை நார் கழிவு உரமிடவேண்டும்.
  • அத்துடன் நடவு வயலில் 1 ஏக்கருக்கு 2 கிலோ அசோஸ்பைரில்லம், 2 கிலோ பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை 10 கிலோ நன்கு மக்கிய எரு மற்றும் 10 கிலோ மணலுடன் கலந்து இடவேண்டும். சாகுபடிக்கு மொத்தம் பரிந்துரைக்கப்படும் உர அளவான 119 கிலோ யூரியா, 156 கிலோ சூப்பர் பாஸ்பேட், 34 கிலோ பொட்டாஸ் இதில் அடியுரமாக மட்டும் 30 கிலோ யூரியா, 156 கிலோ சூப்பர் பாஸ்பேட், 17 கிலோ பொட்டாஸ் இடவேண்டும். விதைத்த 25&ம் நாள்முதல் மேலுரமாக 60 கிலோ யூரியா, 45&ம் நாள் 29 கிலோ யூரியா, 17 கிலோ பொட்டாசும் இடவேண்டும்.
  • விதைத்த 3 நாட்களுக்குப்பின் மண்ணில் போதுமான ஈரம் இருக்கும் போது களைக்கொல்லியான அட்ரசின் 50 சதம் நனையும் தூள் 200 கிராம் அல்லது ஆலாகுளோ 1.6 லிட்டர் / ஏக்கர் என்ற அளவில் 360 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான மூலம் தெளிக்கவேண்டும் களைக்கொல்லி பயன்படுத்தாவிடில் விதைத்த 17 &18 நாளில் ஒரு முறையும் 40 முதல் 45வது நாளில் ஒரு முறையும் கை களை எடுக்கவேண்டும்.
  • ஆரம்பக்கட்டத்தில் குருத்து புழு தாக்குதல் தென்படும் இதனை கட்டுப்படுத்திட செடிக்கு 2 கிராம் வீதம் பியூரடான் குருனை மருந்தினை மணலில் கலந்து செடியின் குருத்தில் விதைத்த 20 வது நாள் இடவேண்டும். தேவைக்கேர்ப்ப 6 முதல் 8 முறை நீர்பாசனம் செய்யவேண்டும். பூக்கும் தருனத்தில் தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு தொழில் நுட்பங்களை கடைப்பிடித்தால் 1 ஏக்கரில் 2,500 முதல் 3,000 கிலோ வரை மகசூல் எடுத்து ரூ. 45,000 வரை வருமானம் பெறலாம் என்றார்.

நன்றி:  தினகரன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *