சோள பயிரில் குருத்து ஈ தாக்குதல்

சோள பயிரில் குருத்து ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை குறித்து செங்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

  • சோள பயிரில் குருத்து ஈ தாக்குதல் பரவலாக தென்படுகிறது. இப்பூச்சி ஒரு வகை ஈ ஆகும்.
  • இது பழுப்பு நிறமாக இருக்கும். தாய் ஈயானது சற்று நீண்ட, தட்டையான வெண்மை நிற முட்டைகளை தனித்தனியாக தோகையின் அடிப்புறத்தில் இடுகிறது.
  • முட்டைகளில் இருந்து 2, 3 நாட்களில் கால்கள் அற்ற இளம் மஞ்சள் நிற புழுக்கள் வெளிப்படும்.
  • இவை தோகையின் மேல் பாகத்திற்கு வெளிந்து வந்து இளம் குருத்திற்கும் தண்டிற்கும் நடுவே குடைந்து செல்லும். இதனால் நடுக்குருத்தின் அடிப்பாகம் துண்டிக்கப்படுகிறது.
  • இவ்வாறு தாக்கப்பட்ட குருத்து மக்கி அழுகி விடும். புழுக்கள் அழுகிய குருத்தில் நின்று சுமார் 10 தினங்களில் முழு வளர்ச்சியுற்று கூட்டு புழுக்களாக மாறுகின்றன.
  • கூட்டுப்புழு தண்டின் அடிப்பாகத்தில் தண்டினுள்ளே இருக்கும். சில சமயம் நிலத்திலும் கூட்டுப்புழுவாக மாறுகிறது. இதன் பருவம் 8 முதல் 10 நாட்கள் ஆகும்.
  • இதன் புழுக்கள் குருத்தின் அடிப்பாகத்தில் துவாரமிட்டு குருத்திலுள்ள திசுக்களை உண்பதால், குருத்து காய்ந்து செடி வாடிவிடும்.
  • இதனுடைய தாக்குதல் விதைப்பிலிருந்து ஒரு மாதம் காலம் வரை இளம் சோள பயிரில் காணப்படும்.
  • சோளத்தை செல்லி விதை என்ற பழமொழிக்கேற்ப ஒரே நேரத்தில் அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து சோளத்தை விதைப்பதால் இப்பூச்சிகளின் அதிகமான இன விருத்தியினையும் சேதத்தையும் தவிர்க்கலாம்.
  • நாற்று விட்டு நடுவதால் குருத்து ஈ தாக்கிய நாற்றுகளை தவிர்த்து நல்ல நாற்றுகளை பிரித்து எடுத்து நடவு செய்யலாம்.
  • குருத்து ஈ வராமல் தடுத்திட விதைக்கும் முன்பாக 20 மில்லி நீரில் 4 மில்லி குளோர் பைரிபாஸ் ஒரு கிலோ விதைகளை இந்த கரைசலுடன் கலந்து விதைக்க வேண்டும்.
  • மேலும் நடவு வயலில் கட்டுப்படுத்த எண்டோசல்பான் ஏக்கருக்கு 300 மில்லி மருந்துடன் 200 லிட்டர் தண்ணீர் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து கட்டுப்படுத்த வேண்டும்

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *