கோடைப் பருவத்தில் துவரை சாகுபடி செய்து அதிக பலன் பெறலாம் என வேளாண் துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர்.
இப்பயிர் அதிக அளவில் மானாவாரி பயிராக பயிரிடப்படுவதால், இவ்வட்டாரத்தில் கோடை மழையை பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று வருகின்றனர்.
ஏற்ற ரகம்:
- எல்ஆர்ஜி41, விபிஎன்2, விபிஎன்3, பிஆர்ஜி1 ஆகிய ரகங்கள் கோடை சாகுபடிக்கு ஏற்றவை.
- இந்த ரகங்களில் ஏதாவது ஒன்றை ஹெக்டேருக்கு 10 கிலோ அளவில் தனிப் பயிராக பயிரிடலாம்.
விதைக்கும் முறை:
- விதைக்கும் முன் 1 கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டசிம் பூஞ்சான மருந்தை கலந்து விதைத்தல் வேண்டும்.
- இதனால் வேர் அழுகல் நோய் மற்றும் வாடல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
- பூஞ்சானகொல்லி விதை நேர்த்தி செய்த விதையை 24 மணி நேரம் கழித்து உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் 3 பாக்கெட், பாஸ்போபேக்டீரியா 3 பாக்கெட் ஆகியவற்றுடன் 3 டம்ளர் ஆறிய கஞ்சியை சேர்த்து நன்கு கலந்து 15 நிமிடங்கல் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.
உர மேலாண்மை:
- கோடை உழுவு செய்த நிலத்தில் ஒரு ஹெக்டேருக்கு தொழு உரம் 12.5 டன், 25 கிலோ மண்புழு உரம் ஆகியவற்றை கடைசி உழவின்போது இட வேண்டும்.
- ரசாயன உரங்களான ஜிப்சம் 55 கிலோ, டிஏபி 54.5 கிலோ, யூரியா 5.5 கிலோ, பொட்டாஷ் 21 கிலோ ஆகியவை அடி உரமாக இட வேண்டும்.
- நுண்ணூட்டச் சத்தான ஜிங்க் சல்பேட் 12.5 கிலோ உரத்தை 50 கிலோ மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன் சீராகத் தூவ வேண்டும்.
- இத்துடன் 5 கிலோ நுண்ணூட்டக் கலவையை 20 கிலோ மணலுடன் கலந்து இடவேண்டும்.
பயிர் இடைவெளி:
- விதையை வரிசைக்கு வரிசை 180 செ.மீ. அளவும், விதைக்கு விதை 30 செ.மீ. அளவும் இடைவெளி விட்டு நடவும்.
- விதைத்த 3-ம் நாள் 2 லிட்டர் களைகொல்லியான பெண்டிமெத்திலின்-ஐ 50 கிலோ மணலுடன் கலந்து மண்ணில் சீராகத் தூவ வேண்டும்.
- பின்னர் 25 முதல் 30-வது நாளில் களை எடுக்க வேண்டும்.
- களை எடுக்கும்போது ஒரு அடி இடைவெளியில் ஒரு செடி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
- மகசூல் அதிகரிக்க பூக்கும் தருவாயில் 2 சதவீத டிஏபி கரைசலை 15 நாள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.
இந்த வழிமுறைகளை கடைபிடித்தால் ஹெக்டேருக்கு 1500 முதல் 2000 கிலோ வரை மகசூல் பெறமுடியும் என நாட்டறம்பள்ளி வேளாண்மை உதவி இயக்குநர் த.கணேசன் தெரிவித்துள்ளார்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்