“தென்னை விவசாயிகள் தங்களின் நீர் வசதிக்கு ஏற்ற ரகங்களையும், அதிக காய்ப்பு தன்மையுள்ள செயற்கை முறையில் ஒட்டு உற்பத்தி செய்யப்பட்ட ரகங்களை பயிரிட்டு பலனடைய வேண்டும்,” என ஆனைமலை விதை ஆய்வு துணை இயக்குனர் நடேசன் கூறினார்.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு , உடுமலை தாலுகாக்கள் மற்றும் ஆனைமலையை சுற்றியுள்ள பகுதிகளில் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி நடக்கிறது.
இதில் தமிழகத்தின் தென்னை நகரம் என அழைக்கப்படும் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில், ஆண்டுதோறும் புதிதாக சுமார் 200 ஏக்கர் பரப்பளவுக்கு புதிதாக தென்னங்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. விதை ஆய்வு துணை இயக்குனர் பொன்னுசாமி நடேசன் கூறியதாவது:
- நீண்டகால பயிரான தென்னையில், நெட்டை, நெட்டை-குட்டை மற்றும் குட்டை – நெட்டை என பல ரகங்கள் உள்ளன.
- தண்ணீர் பற்றாக்குறை நிலவும் பகுதிகளில் வறட்சியை தாங்கும் நெட்டை ரகங்களான அரசம்பட்டி நெட்டை ரகங்களை பயிரிடலாம்.
- தண்ணீர் நிறைவாக நிலங்களிலும், ஆற்று படுகைகளில் உள்ள நிலங்களிலும்,நெட்டை-குட்டை மற்றும் குட்டை-நெட்டை ரகங்களை பயிரிடலாம்.
- இது தேங்காய் மற்றும் இளநீர் உற்பத்திக்கு ஏற்றவையாகும்.
- தற்போது விவசாயிகளிடையே இயற்கையான மகரந்த சேர்க்கை அல்லது கட்டுபாடான செயற்கை மகரந்த சேர்க்கை செய்யப்பட்ட ஒட்டு கன்றுகளில் எதை தேர்வு செய்வது என்ற குழப்பம் நிலவுகிறது.
- இயற்கை முறையில் மகரந்த ஒட்டு சேர்க்கப்பட்ட குட்டை-நெட்டை ஒட்டுகளில் காய்க்கும் தன்மையிலும், காய்களிலும் பெரியளவில் வேறுபாடு இருக்கும்.
- காய் எந்த நிறத்தில் இருக்கும், எந்த அளவில் இருக்கும் என்பது காய்த்த பின்புதான் தெரிய வரும்.
- ஆனால் செயற்கை முறையில் ஒட்டு மேற்கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட கன்றுகள் கிட்டதட்ட 90 சதவீதம் காய்கள் ஒரே தரமாக இருக்கும்.
- மரத்திற்கு மரம் காய்களின் உருவத்திலும் அளவிலும் வேறுபாடு இருக்காது.
- காய்ப்புத்தன்மையும் சீராக இருக்கும்.
- எனவே செயற்கை முறையில் ஒட்டு உற்பத்தி செய்யப்பட்ட கன்றுகளை மட்டுமே வாங்கி நடவு மேற்கொள்ள வேண்டும்.
- மேலும் ஒட்டு கன்றுகள் வாங்கும்பொழுது அதன் தாய்,தந்தை மரத்தின் காய்ப்பு தன்னையை தெரிந்து வாங்க வேண்டும்.
- நெட்டைரக கன்றுகள் வாங்கும் பொழுது அதன் தாய் மர தேர்வு நன்றாக செய்யப்பட்டுள்ளதா என்று தெரிந்துகொண்டு வாங்கி நடவு மேற்கொண்டால் பிற்காலத்தில் நல்ல தோப்பு அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்