தென்னையில் அதிக மகசூல் பெறுவது எப்படி

தென்னை மரங்களுக்கு இட வேண்டிய உர அளவுகள் குறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பெரியசாமி விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்க்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்னையில் நாட்டு ரக (நெட்டை ரகம்) தென்னைகளுக்கு நடவு செய்தது முதல் ஒரு வருடத்திற்கு தொழுஉரம் 10 கிலோ, யூரியா 325 கிராம், சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 500 கிராம், வேப்பம்புண்ணாக்கு 1.500 கிலோ இட வேண்டும். 2 வருட கன்றுக்கு தொழுஉரம் 20 கிலோ, யூரியா 650கிராம், சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 1கிலோ, வேப்பம்புண்ணாக்கு 2.500கிலோவும் என வேளாண்துறை பரிந்துரைப்படி 5 வருடங்கள் வரை உரமிட வேண்டும்.

வீரிய ஒட்டு (நெட்டை மற்றும் குட்டை ) ரக தென்னைகளுக்கு ஒரு வருட கன்றுக்கு தொழு உரம் 15 கிலோ, யூரியா 500 கிராம், சூப்பர் 375 கிராம், பொட்டாஷ் 750 கிராம், வேப்பம்புண்ணாக்கு 1.500 கிலோவும், இரண்டு வருட கன்று ஒன்றுக்கு தொழு உரம் 30கிலோ, யூரியா 1கிலோ, சூப்பர் 750கிராம், பொட்டாஷ் 1.500கிலோ, வேப்பம்புண்ணாக்கு 2.500கிலோவும் என மூன்று வருட, நான்கு வருட, ஐந்து வருட கன்றுகளுக்கு வேளாண்துறை பரிந்துரைப்படி உரம் இட வேண்டும். மேற்கண்ட உர பரிந்துரை அளவினை சம பங்காக பிரித்து வருடத்தில் இரு முறை இட வேண்டும்.

மார்கழி, தை மாதங்களில் ஒரு முறையும், ஆனி, ஆடி மாதங்களில் ஒரு முறையும் இட வேண்டும். மேற்கண்ட உரங்களை இட்ட 30 முதல் 45 நாட்கள் கழித்து தென்னை நுண் சத்து உரத்தை மரம் ஒன்றுக்கு ஒரு கிலோ வீதம் இட வேண்டும். இவ்வகை உரங்களை மரத்தை சுற்றி 5 அடி தூரத்தில் இட்டு மண்ணை கிளறிவிட்டு உடனடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

முறையாக உரமிடும் பட்சத்தில் குரும்பை உதிர்தல், ஒல்லிக்காய், காய்களில் வெடிப்பு, நீள வடிவிலான வெற்றுகாய்கள் ஆகிய பிரச்சனைகள் குறைந்து ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 150 முதல் 200 தேங்காய்கள் வரை கண்டிப்பாக மகசூல் எடுக்க முடியும்.இவ்வாறு வேளாண்மை உதவி இயக்குனர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *