பல அடுக்கு தென்னை சாகுபடி

தென்னை சாகுபடியில், பல அடுக்குகளாக தோட்டக்கலைப்பயிர்களை சாகுபடி செய்வதால், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்’ என, தோட்டக்கலைத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

கிணற்றுப்பாசனத்தின் மூலம், தென்னை மரம் வளர்க்கும் விவசாயிகள், பல அடுக்குகளாக தோட்டக்கலைப்பயிர்களை சாகுபடி செய்ய தோட்டக்கலைத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இத்தகைய சாகுபடியால், மண் வளம் அதிகரிப்பதுடன், வருவாயும் பல மடங்கு உயரும். இது குறித்து உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது:

தென்னந்தோப்புகளில், மரங்களுக்கு இடையில் கிடைக்கும் சூரிய ஒளியை பயன்படுத்தி, பல்வேறு தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யலாம்.

தென்னை மரத்தின் மேல்பகுதியிலிருந்து, மண் பகுதி வரையுள்ள இடைவெளியில், பல்வேறு உயரங்களில் பயிர் வகைகளை நடலாம்.

முதல் அடுக்கு :

முதல் அடுக்கில் அதிக உயரம் வளரக்கூடிய, ஜாதிக் காய், சில்வர் ஓக் ஆகிய மரங்களை நடவு செய்வதால், தென்னை மரங்களுக்கு இணையாக வளர்ந்து, நீண்ட கால வருவாய் கிடைக்கும்.

இரண்டாவது அடுக்கு :

இரண்டாவது அடுக்கில், தென்னை மரத்தை சார்ந்து 12 முதல் 15 அடி உயரம் வரை குருமிளகு பயிரிடலாம்.

மூன்றாவது அடுக்கு :

மூன்றாம் அடுக்காக, தென்னையின் இடையே உள்ள மண் பகுதியில், ஆணி வேர்கள் செலுத்தி, குறைந்த உயரத்தில், 3 முதல் 4 அடி உயரம் மட்டும் வளரும் கோகோ பயிரை தேர்வு செய்யலாம்.

அதே உயரத்தில் வளரும் அகத்தி, கறிவேப்பிலை, மரவள்ளி ஆகிய பயிர்களையும் நடவு செய்யலாம்.

நான்காவது அடுக்கு :

நான்காவது அடுக்கில், நிழலில் மிகக்குறைந்த வெளிச்சத்தில் வளரும், அன்னாசிப்பழம், இதர புல்கரணைகள், கம்பு, கனகாம்பரம், இஞ்சி, சேனை, சம்பங்கி மலர், மல்லிகை ஆகிய சாகுபடிகளையும், நடவு செய்யலாம்.

மண் வளத்தை பாதுகாக்கும், வெட்டிவேர், கொழுக்கட்டைப்புல், கொத்து அவரை, கொத்தமல்லி, ஆகியவற்றை கலந்து பயிரிடலாம்.

இத்தகைய அடுக்கு முறை சாகுபடியால், கூடுதல் வருவாய் கிடைக்கும்.

இத்தகைய ஊடுபயிர்களால் தென்னை பாதிக்கப்படாமல் இருக்க, மண் வளம் அறிந்து உரமிட வேண்டும். இவ்வாறு, இளங்கோவன் தெரிவித்தார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *