ராமேஸ்வரம் இளைஞர்கள் மாற்றுத் தொழில் வாய்ப்பு இல்லாததால் தென்னை மரம் ஏறும் பயிற்சியில் ஆர்வம் காட்டுகின்றனர்.ராமநாதபும் மாவட்டத்தில் குந்துகால், தரவை தோப்பு, அக்காள்மடம், தங்கச்சிமடம் பகுதிகளில் அதிகளவில் தென்னை மரங்கள் உள்ளன. இதுதவிர பாம்பன் முதல் தனுஷ்கோடி வரை தென்னை மர சாகுபடி உள்ளது.
இந்தப் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர். வேறு தொழிலில் ஈடுபடும் வாய்ப்புகள் குறைவு.
இந்நிலையில் அங்குள்ள இளைஞர்கள் தென்னை ஏறும் தொழில் செய்ய முன்வந்தனர். இதையடுத்து திண்டுக்கல் காந்திகிராம பல்கலை வேளாண் அறிவியல் மையத்தின், ‘தென்னை மர நண்பர்கள் பயிற்சி திட்டம்’ குறித்து அறிந்து உடனடியாக பயிற்சியில் சேர்ந்தனர்.பாம்பனை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன், 29, யேசுராஜன், 20 கூறியதாவது:
எங்கள் பகுதியில் மீனவப் பணிதான் பிரதான தொழில். படிக்காத இளைஞர்கள் அதிகளவில் உள்ளனர். அதிகளவில் பனை, தென்னை மரங்களும் செழித்து வளர்ந்துள்ளன. முறையான விவசாயம் தெரிந்த பணியாளர்கள் குறைவாக உள்ளனர்.இதனால் பனை, தென்னை விவசாயிகள் குரும்பை கொட்டுதல், உழவுப் பணி, நீர்மேலாண்மை, உர மேலாண்மைப் பணிகளை செய்வதில் சிரமம் ஏற்பட்டது. தற்போது காந்திகிராம பல்கலை வேளாண் அறிவியல் மைய தென்னை மர நண்பர்கள் பயிற்சியில் அனுபவம் பெற்றோம். இதன் மூலம் அப்பகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்க முடியும், என்றனர்.
மைய பேராசிரியர் உதயகுமார், தொழில்நுட்ப வல்லுநர் செந்தில்குமார் கூறியதாவது:
மூன்று ஆண்டுகளாக பயிற்சி நடக்கிறது. இந்தாண்டிற்கான பயிற்சி தற்போது துவங்கியுள்ளது. பாம்பன் பகுதி இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் பயிற்சியில் பங்கேற்கின்றனர். இந்த பயிற்சி இளைஞர்கள் மத்தியில் மாற்று வேலைக்கான திறன் அதிகரித்துள்ளது, என்றார். பயிற்சி விபரங்களுக்கு 09047054350 தொடர்பு கொள்ளலாம்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்