நிலக்கடலையில் விதை மேலாண்மை முறை

மணிலா சாகுபடி (நிலக்கடலை) செய்யும் விவசாயிகள் அதிக மகசூல் பெற விதை மேலாண்மை முறைகளைப் கடைப்பிடிக்க வேண்டும்.  அதிக மகசூல் பெற சரியான பருவத்தில் விதைகளை விதைப்பது மிகச் சிறந்ததாகும்.

பூச்சி நோய்த் தாக்குதலைத் தவிர்க்க, வறட்சியைத் தவிர்க்க, அதிக மழையால் பயிர் பாதிக்காமல் இருக்க, பூக்காமல் இருப்பதை தவிர்க்க, அறுவடை சமயத்தில் மகசூல் அதிகரிக்க தகுந்த பருவம் மிக அவசியம் ஆகும்.

  • நல்ல வளமான செம்மண் பாங்கான காற்றோட்டமும், நல்ல வடிகால் வசதி உடைய நிலமாக இருக்க வேண்டும்.
  • போரான் மற்றும் கால்சியம் (சுண்ணாம்பு சத்துகள்) குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும்.
  • வேளாண் உற்பத்தியில் அதிக மகசூலை அதிகரிக்க குறைந்த வயதுடைய உயர் விளைச்சல் ரகங்களைத் தேர்வு செய்து தரமான விதைகளைப் பயன்படுத்துவது முக்கியமான அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும்.
  • அதிக இனத்தூய்மையும், கல், மண் தூசி, பதர் போன்றவை நீக்கப்பட்டு அதிக புறத் தூய்மையும், பூச்சி நோய் தாக்காமலும், நல்ல முளைப்புத் திறனுடன் கூடிய வேகமான வளர்ச்சியை தர வல்ல விதைகளே தரமான விதைகள் ஆகும்.
  • 18.64 அளவுள்ள (7.2 மீ.மீ. வட்டமுள்ள) வட்டக்கண் சல்லடை கொண்டு சலித்து நல்ல பருமனுள்ள நோய் தாக்காத விதைகளையே விதைப்புக்காக பயன்படுத்த வேண்டும். ÷உடைந்து போன சுருங்கிய மற்றும் மிகவும் வற்றிப்போன நோய் தாக்கிய விதைகளை நீக்கவிட வேண்டும்.

விதை முளை கட்டுதல்:

  • எந்தப் பயிரிலும் சரியான பயிர் எண்ணிக்கையைப் பராமரித்தால்தான் அதிக மகசூல் பெற முடியும். எனவே விதைகளின் முளைப்புத் திறனை அதிகரிக்கவும், அவை விரைவில் முளைத்து தேவையான பயிர் எண்ணிக்கையைப் பெற விதைகளை முளைகட்டி விதைத்தல் ஒரு எளிய முறையாகும்.

தேவையான பொருள்கள்:

  • தரம் பிரித்த நல்ல விதை 55 கிலோ (ஒரு ஏக்கருக்கு), கால்சியம் குளோரைடு 140 கிராம், 28 லிட்டர் தண்ணீர் அதாவது விதையின் பாதியளவு தண்ணீர், கோணிப்பைகள் 2 கிலோ, விதைக்கு 5 கிராம் கால்சியம் குளோரைடு அதாவது தீப்பெட்டி உள்அறை அளவு எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.
  • அதே போல் 28 லிட்டர் கரைசல் (2 குடம் அளவு) தயாரித்து கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு தயாரிக்கப்பட்ட கரைசலில் விதையை 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • இக்கரைசலில் ஊற வைத்த விதைகளை ஈரச்சாக்கின் மீது பரப்ப வேண்டும்.
  • அதை மற்றொரு ஈரச்சாக்கு கொண்டு 24 மணி நேரம் மூடி வைக்க வேண்டும். இதற்கு பின் விதையில் கருமுளை வெளிவந்திருக்கும்.
  • இவ்வாறு முளை கண்ட விதைகளைப் பிரித்து எடுத்து நிழலில் உலர்த்த வேண்டும்.
  • மீதமுள்ள விதைகளை ஈரச்சாக்கால் மறுபடியும் மூடி 2 மணி நேரம் கழித்து கருமுளை வந்த விதைகளை சேகரிக்க வேண்டும்.
  • முளை கட்டிய விதைகளை நிழலில் நன்கு உலர்த்தி விதைப்புக்கு பயன்படுத்தலாம். இல்லையென்றால் அவ்விதையால் மற்ற விதை நேர்த்தி செய்யலாம்.
  • மிக நீளமான கருமுளை வெளிவந்த விதைகளையும் இறந்த விதைகளையும் தனியேப் பிரித்து எடுத்து விட வேண்டும்.
  • இவ்வாறு நல்ல தரமான முளைப்புத் திறனுடைய விதைகளைத் தேர்வு செய்து விதைப்புக்கு பயன்படுத்துதல் நன்மை தரும்.

பயன்கள்:

  • விதைகளை முளைகட்டி விதைப்பதால் 95 சதவீதம் வரை விதை முளைப்பு கிடைக்கிறது.
  • இறந்த விதைகளை எளிதில் பிரித்து விடலாம்.
  • முளைவிட்ட விதைகளை விதைப்பதால் செடிகள் எண்ணிக்கையை சரியாக பராமரிக்கலாம்.
  • இதனால் 10-15 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும்.

விதை நேர்த்தி:

  • பயிர் நன்கு வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் நல்ல வகையில் அமையும் வண்ணம் விதைக்கு செய்யப்படும் சில வழிமுறைகளே விதை நேர்த்தி ஆகும்.
  • பூசாணக் கொல்லி விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் மருந்தை கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.விதை நேர்த்தி செய்த விதைகளை குறைந்தபட்சம் 24 மணி நேரம் வைத்திருந்து விதைப்பது நல்லதாகும்.
  •  பூஞ்சாண விதை நேர்த்தி:டிரைக்கோ டெர்மா விரிடி என்ற உயிரியல் பூஞ்சாணக் கொல்லியை ஒரு கிலோ விதைப் பருப்புக்கு 4 கிராம் என்ற அளவில் பயன்படுத்த வேண்டும்.
  • விதையை விதைப்புக்கு முன்பு ஈரப்படுத்தி பின் பூஞ்சாணத்தை அதன் மீது தூவி கலக்க வேண்டும்.
  • நுண்ணுயிர் நேர்த்திக்கு டிஎன்ஏ 14 ரைசோபியம் பாக்டீரியா மற்றும் பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றை பயன்படுத்துவது சிறந்தது.

நுண்ணுயிர் நேர்த்தியின் பயன்கள்:

  • ரைசோபியம் ஒரு பாக்கெட் 200 கிராம், பாஸ்போ பாக்டீரியா 1 பாக்கெட் 200 கிராம், ஆறிய அரிசிக் கஞ்சி 1 லிட்டர் மற்றும் 55 கிலோ விதை.
  •  பயன்படுத்தும் முறை:முதலில் ஒரு லிட்டர் ஆறிய வடிகஞ்சியில் ரைசோபியத்தையும் பாஸ்போ பாக்டீரியாவையும் கொட்டி ஒரு குச்சியைக் கொண்டு நன்கு கிளற வேண்டும்.
  • விதைகளை மேலும் கீழும் புரட்டி நுண்ணுயிர் நன்கு படும்படி செய்ய வேண்டும். விதைகளை சாக்குப்பையின் மேல் பரப்ப வேண்டும்.
  • 15 முதல் 30 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்துக்குள் விதைக்க பயன்படுத்த வேண்டும்.
  •  பாஸ்போ பாக்டீரியா நிலத்தில் பயிர்களால் கிரகிக்க முடியாத நிலையில் உள்ள மணிச்சத்தைப் பயிர் ஏற்கும் நிலைக்கு மாற்றித் தருகிறது. இதனால் வேர்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது.  இச்சத்து பயிர்களின் இனப்பெருக்கத்துக்கு பயன்படுகிறது.
  • ரைசோபியம் இடுவதால் பயிர் தழைச்சத்தை அதிகளவில் எடுத்துக் கொள்கிறது. இது பயிரின் வேர்களின் வேர் முடிச்சுகளை உண்டாக்கி அதனுள் இருந்து கொண்டு காற்று மண்டலத்தில் உள்ள தழைச்சத்தை பயிர்களுக்கு கிடைக்கச் செய்வதால் கூடுதல் மகசூல் கிடைக்கிறது.

இத்தகவலை திருவூர் வேளாண்மை அறிவியல் மையத் தலைவர் டாக்டர் மு.தேவநாதன், டாக்டர் எஸ்.யோகலட்சுமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *