எலச்சிபாளையத்தில் மானாவாரியில் பயிரிடப்பட்டுள்ள நிலக் கடலையில் சுருள்பூச்சி தாக்குதல் உள்ளதாக வேளாண் உதவி இயக்குநர் தெரிவித்தார்.
இதுகுறித்து வேளாண் உதவி இயக்குநர் சையத் முகம்மது நகீப் கூறியது:
- எலச்சிபாளையம் வட்டாரத்தில் 12,584 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மானாவாரி நிலக் கடலை பூப்பூக்கும் தருணத்தில் உள்ளது.
- தற்போது பெய்துள்ள மழையின் காரணமாக நிலக் கடலையில் சுருள் பூச்சியின் தாக்குதல் தென்படுகிறது. இதைத் தவிர்க்க கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.
- இளம் புழுக்கள் இலையின் நடுப் பகுதியை உண்பதால் பழுப்பு நிற சிறிய கொப்புளங்கள் போன்று உருவாகும்.
- அதிகத் தாக்குதலின் இறுதியில் இலைகள் முழுவதும் சேதப்படுத்தப்படுவதால் வயலில் குறிப்பிட்ட தூரத்திற்கு எரிந்தது போல காணப்படும்.
- பொருளாதார சேத நிலை ஒரு மீட்டருக்கு ஒரு புழு ஆகும். இதற்கு மேல் காணப்பட்டால் பயிர் பாதுகாப்பு அவசியம்.
- இதைக் கட்டுப்படுத்த ஊடுபயிராகக் கம்பு சாகுபடி செய்யலாம்.
- கண்காணிப்புப் பயிராக வரப்பு ஓரத்தில சோயா பயிரிடலாம்.
- இரவு நேரங்களில் 8 மணி முதல் 11 மணி வரை ஏக்கருக்கு 5 விளக்குப் பொறிகள் வைத்து அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
- மேலும், டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 20 ஆயிரம் வீதம் விடுவதால் சுருள் பூச்சியின் தாக்குதல் குறையும்.
- சுருள் பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேத நிலைக்கு மேல் இருந்தால் ஒரு ஏக்கருக்கு பாசலோன் 4 சத தூள் அல்லது கார்பரில் 10 சத தூள் அல்லது பெனிட்ரோத்தியான் 2 சதம் தூள் 10 கிலோ காலையில் தூவலாம்.
- அல்லது ஒரு லிட்டர் நீரில் குயினால்பாஸ் 2 மிலி அல்லது டைமெத்தோயேட் 2மிலி அல்லது மானோகுரோட்டபாஸ் 2 மிலி உடன் நுவான் 2 மிலி கலவையைக் கலந்து தெளிக்கலாம்.
- இந்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு வழிமுறையை மேற்கொண்டு சுருள்பூச்சி தாக்குதலை சமாளிக்கலாம் என்றார் அவர்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்