இயற்கை முறை நெல் நாற்றங்கால் பராமரிப்பு

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் நெல் நாற்றங்காலை பராமரிப்பது எப்படி? என்பது குறித்து புதுச்சேரி பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் மையம் யோசனை தெரிவித்துள்ளது.

பொதுவாக சம்பா பருவமானது அதிக நாள்களைக் கொண்டுள்ளதால் நீண்டகால நெல் ரகங்களான வெள்ளைப் பொன்னி, பொன்மணி (சிஆர்.1009) அல்லது சாவித்திரி, பாபட்டலா, ஐ.ஆர்.20, பின் சம்பா ரகமான ஆடுதுறை 39 போன்ற ரகங்களை விவசாயிகள் தேர்வு செய்து சாகுபடி செய்ய உள்ளனர்.

நெல் நாற்றங்காலில் தோன்றக் கூடிய பூச்சி, நோய்களை கட்டுப்படுத்த ரசாயன பூச்சிக்கொல்லிகளை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு ரசாயன பூச்சிக்கொல்லிகளை அதிகளவில் பயன்படுத்துவதால் பூச்சிகளுக்கு பூச்சிக்கொல்லிகளால் எதிர்ப்புத் தன்மை உருவாதல், திடீர் இனப்பெருக்கம், மறு உற்பத்தி, நன்மை செய்யும் பூச்சிகள் அழிந்து போதல், தானியங்களில் பூச்சிக்கொல்லிகளின் வீழ்படிவு தங்குதல், சுற்றுச்சூழல் சீர்கேடு, மனித இனம், கால்நடை, வனவிலங்குகள், நன்மைப் பயக்கும் பூச்சி இனங்களில் நச்சுத்தன்மை ஊடுருவல் போன்ற பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளன.

எனவே பூச்சி, நோய்களைக் கட்டுப்படுத்த மாற்று வழிமுறைகளை, ஒருங்கிணைந்த முறையில் கடைப்பிடித்து மேலாண்மை செய்வது சிறந்ததாகும்.

Courtesy: Dinamani
Courtesy: Dinamani

 

 

 

 

 

 

 

 

 

நாற்றங்கால் அமைக்கும் முறை:

  • நாற்றங்கால் படுக்கைகளை மேடான இடத்தில் அமைக்க வேண்டும். விளக்குக் கம்பங்களுக்கு அருகாமையில் நாற்றங்கால் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • ஒரு சதுர மீட்டர் நாற்றங்கால் பரப்பளவில் உள்ள படுக்கைகளை 50 கிராம் பாக்டீரியா உயிர்ரக கொல்லியான சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸ், 200 கிராம் வேப்பம் புண்ணாக்கு, புங்கம் புண்ணாக்கு ஆகியவற்றுடன் கலந்து பின் நாற்றங்கால் தயார் செய்ய வேண்டும்.

விதை நேர்த்தி:

  • நாற்றங்காலில் விதை விதைப்பதற்கு முன்பாக விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • இதனால் விதை மூலம் பரவக் கூடிய நோய்க்கிருமிகளை பரவாமல் கட்டுக்குள் வைக்க முடியும்.
  • உலர்விதை நேர்த்தி, ஈர விதை நேர்த்தி என இரண்டு வகையில் விதை நேர்த்தி செய்யலாம்.

உலர்விதை நேர்த்தி முறை:

  • ஒரு ஏக்கருக்குத் தேவையான நெல் விதைகளை, ஒரு கிலோ நெல் விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸ் உயிரக பாக்டீரியம் மருந்தை விதைக் கலக்கும் கருவியில் போட்டு கருவியின் மூடியை மூடி முன்பக்கம் 10 தடவை, பின்பக்கம் 10 தடவை என 20 தடவைகள் சுற்றுவதால் விதைகள் விஞ்ஞான ரீதியில் நேர்த்தி அடைகின்றன.
  • விதைக் கலக்கும் கருவி வேளாண் துறை அலுவலகங்களிலும் உழவர் உதவி மையங்களிலும் வாடகைக்கு கிடைக்கும்.
  • விதைக் கலக்கும் கருவி கிடைக்காத வேளையில் ஒரு ஏக்கருக்கு தேவையான நெல் விதைகளை கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பெரிய கோணிப்பையில் நிரப்பி ஒரு கிலோ நெல் விதைக்கு 10 கிராம் சூடோமோனாபாஸ் ஃபுளோரசன்ஸ் உயிர்ரக பாக்டீரியம் மருந்தை கோணிப்பையில் போட்டு, இரண்டு புறமும் இரண்டு ஆள்களைக் கொண்டு மேலும் கீழும் 20 தடவைகள் குலுக்குவதால் விதைகள் விஞ்ஞான ரீதியில் நேர்த்தி அடைகின்றன.

 

ஈர விதை நேர்த்தி முறை:

  • ஒரு ஏக்கருக்குத் தேவையான நெல் விதைகளை சிறிய, சிறிய கோணிப்பைகளில் சிப்பங்களாக நிரப்பி ஒரு கிலோ நெல் விதைக்கு 10 கிராம் சூடோமோனாபாஸ் ஃபுரோளரசன்ஸ் உயிர்ரக பாக்டீரியம் மருந்தை கோணிப்பையில் போட்டு சிப்பங்களை வயல் நீர்த் தொட்டிகளில் போட்டு நீரில் நனைய வைக்கும்போது விஞ்ஞான ரீதியில் விதைகள் நேர்த்தி அடைகின்றன.
  • அதன்பின் விதைகளை முளைக்கச் செய்து பயன்படுத்த வேண்டும்.

பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துதல்:

  • விதைத்த 10 நாள்களுக்குள் நாற்றின் முளைப் பகுதி கருகி, இலையானது சிறிது சிறிதாக மஞ்சள் நிறமாக தோன்றினால் அது இலைப்பேன் என்ற பூச்சியின் தாக்குதல் அறிகுறியாகும்.
  • இதை ஊர்ஜிதப்படுத்த உள்ளங்கையை நாற்றங்கால் நீரில் நனைத்து நாற்றின் மீது தடவி உள்ளங்கையை திருப்பி பார்த்தால் கறுப்பு நிறத்தில் சிறிய பேன்கள் ஓடிக் கொண்டிருக்கும்.
  • இதைக் கட்டுப்படுத்த ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு ஒரு லிட்டர் தண்ணீரை எடுத்து அதை விசைத் தெளிப்பான் கொண்டு நாற்றங்கால் இலையின் முனைப் பகுதியில் படும்படி பீய்ச்சி அடித்தால் இலைப்பேன்கள் கீழே கொட்டிக் கொள்ளும்.
  • பின்பு நாற்றங்காலில் உள்ள நீரை வடிக்கட்டுவதன் மூலம் இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
  • விசைத் தெளிப்பான் வைத்திராத விவசாயிகள் நாற்றங்காலை நீரில் 10 நிமிடங்கள் முழுதும் நனையுமாறு மூழ்கடித்து பின் நீரினை வடிகட்டுவதால் இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
  • பின்னர் ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 10 மில்லி 3 சதவீத வேப்ப எண்ணெய்யை 10 கிராம் ஒட்டுத் திரவத்துடன் சேர்த்து நாற்றங்கால் இலைப்பரப்பில் தெளிப்பதால் இலைப்பேன்கள் கசப்புத் தன்மை காரணமாக ஓடிவிடும். அல்லது குமட்டல் ஏற்பட்டு வாந்தி எடுத்து இறந்து விடும்.
  • விதைத்த 10-ல் இருந்து 15 நாள்களுக்குள் தோன்றக் கூடிய குட்டை கொம்பு வெட்டுக்கிளியைக் கட்டுப்படுத்த மேற்கண்ட வேப்ப எண்ணெய்யே போதுமானதாகும்.
  • மேலும் நாற்றங்காலில் 10 “டி’ வடிவ குச்சிகள் வைப்பதால் பறவைகள், குருவிகள், மைனா, கோட்டான் போன்றவை அதன் மீது அமர்ந்து குட்டைக் கொம்பு வெட்டுக்கிளிகளையும், இலை உண்ணும் புழுக்களையும் பறக்கும் தாய்ப்பூச்சிகளையும் பிடித்து உண்டு அழிக்கும்.
  • நாற்றங்காலில் தோன்றக் கூடிய இலை சுருட்டுப்புழுவின் தாக்குதலைக் குறைக்க ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் பெவேரியா பேசியான் என்ற உயிர்ரக பூச்சிக்கொல்லியை
  • அதிகாலைப் பொழுதில் கைத்தெளிப்பான் மூலம் 200 லிட்டர் நீரைப் பயன்படுத்தி தெளிப்பதால் புழுக்களின் மீது நோய் உருவாகி அழிக்கலாம்.
  • நாற்றங்கால் வயது 15 முதல் 20 நாள்கள் உள்ள தருணத்தில் நாற்றுக்களின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறினால் அது பச்சை தத்துப்பூச்சி தாக்குதல் அறிகுறியாகும்.
  • இதை நிவர்த்தி செய்ய 5 சீத்தாப்பழங்களில் உள்ள கொட்டைகளை லேசாக இடித்து 1 லிட்டர் தண்ணீரில் ஒரு இரவு முழுவதும் 12 மணிநேரம் வைத்திருந்து அந்த சாற்றை மறுநாள் காலையில் மெல்லிய துணியில் வடிகட்டி நாற்றங்காலில் தெளிக்க வேண்டும்.
  • தட்பவெப்ப நிலை காரணமாக நிலவும் ஒடுக்கத்துடன் கூடிய அதிகமான வெப்பநிலையால் செஞ்சிலந்திகளின் தாக்குதல், நெல் நாற்றுக்களில் தோன்றி இலைகள் மீது சிகப்பு வண்ணத் திட்டுகள் ஏற்படும்.
  • இதைக் கட்டுப்படுத்த ஒரு சதவீத புதங்கம் எண்ணெய் (1 மில்லிக்கு ஒரு லிட்டர் நீர்) அல்லது டைக்கோபால் (1.5 மில்லிக்கு ஒரு லிட்டர் நீர்) அல்லது நனையும் கந்தகம் (8 சென்ட் நாற்றங்காலுக்கு 1 கிலோ) தெளிக்க வேண்டும்.
  • நாற்றங்கால் வரப்புகளை புல், பூண்டு, களைகள் இல்லாதவாறு நன்கு செதுக்கி சுத்தமாக வைத்திருப்பதால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் நாற்றங்காலை தாக்காதவாறு பாதுகாக்கலாம் என வேளாண் அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *