குறுவை பருவ நெல் சாகுபடி தொழிற் நுட்பங்கள்

குறுவை பருவத்தில் மே-ஜூன் மாதத்தில் நெல் சாகுபடி துவங்கப்படுகிறது. குறுகியகால வயதுடைய 110 முதல் 125 நாட்கள் கொண்ட ரகங்களை ஆடுதுறை36, ஆடுதுறை 37, ஆடுதுறை 43, ஆடுதுறை 45, ஆடுதுறை 47, கோ.47 மற்றும் வீரிய ஒட்டு நெல் கோ.ஆர்.எச்.3 ஆகியவை ஏற்றவை.

  • ஒற்றை நாற்றாக ஒரு எக்டர் நடவு செய்ய சுமார் 7 முதல் 8 கிலோ விதையளவு போதுமானது. ஒற்றை நாற்றுகள் சரிவராத தருணத்தில் இரண்டு நாற்றுக்களாக நடவுசெய்ய 12 முதல் 15 கிலோ வரை தேவைப்படுகிறது.
  • ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் ஒரு லிட்டர் நீரில் கரைத்து 10 மணி நேரம் வைத்து நீரை வடிகட்டி, பின்னர் விதைக்கலாம்.
  • இவ்வாறு ஊறவைத்த விதையை நனைந்த கோணிச்சாக்கில் கட்டி மூடி 24 மணி நேரம் இருட்டில் வைத்து முளைகட்டி பின்னர் விதைக்க வேண்டும்.
  • 14 முதல் 18 நாட்கள் வயதுடைய நாற்றுக்கள் நடவு செய்ய ஏற்றவை.
  • நடவு வயல் நன்கு சேற்றுழவு செய்யப்பட்டு மிகவும் சீரான முறையில் சமன் செய்யப்பட வேண்டும்.
  • வரிசைக்கு வரிசை 25 செ.மீ. இடைவெளியும் பயிருக்கு பயிர் 25 செ.மீ. என்ற அளவில் நாற்றுக்கள் நடவு செய்யப்பட வேண்டும்.
  • இளம் நாற்றுக்களின் பயிர் பிடிப்புத்திறன், தூர்கட்டி வளரும் திறன் அதிகமாக உள்ளதால் அதிக தூர்கள் பிடித்து விளைச்சல் அதிகரிக்கும்.
  • நாற்றுக்கள் பாத்திகளிலிருந்து பிரிந்த 30 நிமிடங்களுக்குள் நடவு செய்ய வேண்டும்.
  • நெற்பயிருக்கு சாதாரணமாக காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர்ப்பாசனம் செய்யலாம். அதாவது மண் மறைய நீர்கட்டுதல் நடவு செய்த முதல் 10 நாட்களில் மிக முக்கியம். பின்னர் சுமார் 1 முதல் 2 செ.மீ. அளவிற்கு நீர்ப்பாசனம் செய்து வயலில் மண்ணில் சிறு கீறல்கள் ஏற்படும் தருணம் அடுத்தமுறை நீர் பாய்ச்சுதல் வேண்டும். இம்முறை பூங்கதிர் உருவாகும் தருணத்திலிருந்து அறுவடை நிலை வரை 4 முதல் 5 செ.மீ. அளவிற்கு நீர் பாய்ச்சி கட்டிய நீர் மறைந்த உடன் மீண்டும் நீர் கட்டிட வேண்டும்.
  • சதுர நடவு முறையில் நடவு செய்யப்படுவதால் கோனோவீடர் என்ற உருளைக் களை எடுப்பானைப் பயன்படுத்தி களை கட்டுப்பாடு செய்யலாம்.
  • இவ்வாறு களை எடுப்பது நட்ட 10 நாட்களிலேயே செய்யப்பட வேண்டும். 10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் 2 அல்லது 3 முறைகள் உருளைக் களைக் கருவியைப் பயன்படுத்தி களைகளை வயலிலேயே மடக்கிவிடுவதால் பயிருக்கு உரமாவதோடு மண்ணின் வளமும் பாதுகாக்கப்படுகிறது.
  • பயிர்களுக்கு இடையே வேருக்கு அருகில் உள்ள களைகளைக் களைய, கைக்களை எடுப்பது அவசியம்.
  • பயிரின் ஆரம்பகாலத்தில் களைகளைக் கட்டுப் படுத்த பூட்டாக்குளோர் என்ற களைக்கொல்லியை 2.5 லிட்டர்/எக்டர் என்ற அளவில் பயன்படுத்தி களைகளைக் கட்டுப்படுத்தலாம்.
  • பயிர் நன்கு வளர இயற்கை மற்றும் செயற்கை உரங்களை இடவேண்டும்.
  • கோடையில் சணப்பை, தக்கைப்பூண்டு பயிரிட்டு மடக்கி உழுதுவிடலாம்.
  • இதனுடன் எக்டருக்கு 120:38:38 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்கள் பரிந்துரைக்கப்படுகின்றது. தழை, சாம்பல் சத்துக்களை பிரித்து இடுவதால் பயிர் வளர்ச்சி அதிகரிக்கிறது.
  • எக்டருக்கு 25 கிலோ ஜிங்க் சல்பேட்டை ஒரு கிலோ உலர்ந்த மணலுடன் கலந்து உழுது சமன்படுத்தப்பட்ட வயலில் நடவுக்கு முன் பரவலாக மண்ணின் மேற்பரப்பில் தூவிவிட வேண்டும்.
  • பொதுவாக மணிச்சத்து உரங்களை அடியுரமாக இடவேண்டும்.

தகவல்: செ.ராதாமணி, ச.ராபின், பு.முத்துகிருஷ்ணன், நெல்துறை, த.வே.பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 033. 09443007371). -டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *